இயேசு பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் கூட்டிக் கொண்டு ஜெபம் பண்ணுவதற்கு மலையின்மேல் ஏறினார். இயேசு சீஷர்களோடு ஜெபிப்பதை தனது தகுதிக் குறைவாக எண்ணாமல் அவர்களோடு சேர்ந்து ஜெபித்தார். இயேசு அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அவர் முகம் சூரியனைப் போல பிரகாசித்தது. அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப் போல வெண்மையாயிருந்தது. அதோடு மோசேயும், எலியாவும் இயேசுவோடு பேசுவதையும், இயேசுவின் மகிமையையும் மூன்று சீஷர்களும் கண்டார்கள்.
மரணமடைந்து தேவனுடைய பிரதிநிதியாக மோசேயும், மரணமடையாமல்
பரலோகம் செல்லப்போகும் விசுவாசிகளின் பிரதிநிதியாக எலியாவும் காணப்பட்டனர்.
மோசே நியாயப்பிரமாணத்தையும், எலியா தீர்க்கதரிசனங்களைக் குறிப்பதாகக் கருதலாம். இவர்கள் இருவரும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளில் மிகச் சிறந்தவர்கள். அதுவரை மோசேயையும், எலியாவையும் பார்த்திராத சீடர்கள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டனர். இவ்வுலகை விட்டு கடந்து கிறிஸ்துவுடன் இருக்கும் பொழுது யாவரையும் அறிந்திருப்போம். ஒருவரும் மற்றவரை அறிமுகப்படுத்துவதற்கு அவசியம் இருக்காது.
மோசே உலகத்தில் வாழ்ந்த நாட்களில் கானானுக்குள் செல்ல அனுமதிக்கப் படவில்லை. அதற்காக அவர் வேண்டிக்கொண்டபோது எந்தக் காரியத்தைக் குறித்து
என்னிடம் பேச வேண்டாம் என்று கர்த்தர் கூறினார். கர்த்தர் கோபமாகப் பேசியதாக மோசே கருதினார், (உபா3 : 23 – 28) மோசே சாதாரண மனிதனாகக் கானானுக்குள் செல்வதைவிட
இயேசு மனுஷனாக இருக்கும் பொழுது மகிமையில் அவருடன் கானான் நாட்டில் இருப்பதை கர்த்தர் அவருக்கு அளிக்கத் திட்டமிட்டிருந்தார். மோசேயும், எலியாவும் இயேசு எருசலேமிலே பாடுபட்டு, கொலைசெய்யப்பட்டு, மூன்றாவது நாளில் உயிர்த்தெழும்பப் போகிறதைக்
குறித்துப் பேசினார். இயேசு இதை ஏற்கெனவே அறிந்திருந்தார்.
இயேசு சிலுவை மரணத்தை எதிர்நோக்கியிருந்தபடியால் இந்த அனுபவம்
அவரை ஊக்குவித்தது. (மத் 16 : 21) இயேசு சிலுவையில் பாடுகளை அனுபவிக்கப் போகிறவர் என்று சீஷர்களுக்கு ஒரு அறிவிப்பாயிருந்தது. (லூக் 9 : 31) அப்பொழுது ஒரு ஒளியுள்ள மேகம் நிழலிட்டது. “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்,
இவருக்குச் செவி கொடுங்கள்” என்று அந்த மேகத்திலிருந்து பிதாவின் சத்தத்தை சீஷர்கள் கேட்டனர்.
இயேசு தான் உண்மையான தேவகுமாரன், மானிட இனத்தை மீட்பதற்கு
தகுதியுள்ளவர் என்பதற்கு தேவன் இதன் மூலம் ஒரு அத்தாட்சி கொடுத்துள்ளார். இதைத்தான் பேதுரு தமது நிருபத்தில் அவரது அனுபவத்தைத் தெளிவு படுத்துகிறதை 2பே 1 : 16 18ல் பார்க்கிறோம். சீஷர்கள் இதைப் பார்த்து முகங்குப்புற விழுந்து மிகவும் பயந்தார்கள்.
அப்பொழுது இயேசு அவர்களைத் தொட்டு எழுந்திருங்கள் பயப்படாதேயுங்கள் என்றார்.
அவர்கள் கண்களைத் திறந்த போது இயேசுவைத் தவிர மற்றவர்களைக் காணவில்லை.
இயேசு சீஷர்களிடம் மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும் வரைக்கும் இந்த தரிசனத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்றார்.