ஒரு ஓய்வுநாளில் இயேசு ஜெப ஆலயத்தில் போதகம் பண்ணிக் கொண்டிருந்த போது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ எவ்வளவும் நிமிரக் கூடாமல் இருப்பதைப் பார்த்தார். மக்கள் வியாதி, மரணம் போன்ற வற்றால் கட்டப்பட்டு, துன்பத்திலும், பெரிய தேவைகளிலும் இருக்கிறார்கள் என்று இயேசு அறிந்தவர். இயேசு அவளைத் தம்மிடத்தில் அழைத்து “உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி அவள் மேல் தமது கைகளை வைத்தார். உடனே அவள் நிமிர்ந்து தேவனை மகிமைப் படுத்தினாள்.
நோய்களும், பலவீனங்களும் அசுத்த ஆவிகளாலும் ஏற்படுகின்றன. அசுத்த ஆவிகள் போகும்போது அவ்விதம் பாதிக்கப்பட்டவர்கள் சுகமடைகிறார்கள். அதேபோல் தான் இந்தப் பெண்ணும் சுகமடைந்ததைக் காண்கிறோம். இயேசு இந்த அற்புதத்தை ஓய்வுநாளில் செய்ததால் ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து ஓய்வுநாளிலே அப்படி செய்யலாகாது என்றான். இயேசு அவர்களிடம் உங்களிடமுள்ள கழுதையையும், எருதையும், தொழுவத்தி லிருந்து அவிழ்த்துக் கொண்டு போய் தண்ணீர் காட்டுகிறீர்கள் அல்லவா அதேபோல் தான் ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவள் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த கட்டிலிருந்து அவிழ்த்து விடவேண்டியதாயிற்று என்றார். அவர் சொன்னதை கேட்டு அவரை விரோதிக்கிறவர்கள் அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களோ இயேசு செய்த அற்புதத்தை குறித்து மிகவும் சந்தோஷப்பட்டனர்.