ஜெப ஆலயத்தலைவனான யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து இயேசுவின் பாதத்தில் விழுந்து பன்னிரண்டு வயதுள்ள தன் மகள் மரண அவஸ்தை படுவதாகவும் தன் வீட்டிற்கு இயேசு வரும்படியும் வேண்டிக் கொண்டான். அந்த நேரத்தில் பெரும்பாடுள்ள ஸ்திரீ குறுக்கிட்டதால் யவீரு மிகவும் வேதனையடைந்திருக்கக் கூடும். இயேசுவிடம் தெரிவித்து விட்டதால் காலம் தாழ்ந்தாலும் இயேசு பார்த்துக் கொள்வார் என்று விசுவாசத்துடன் இருந்தார்.
ஆனால் தனது மகள் மரணமடைந்தது விட்டாள் என்ற செய்தி வந்ததும் பலவிதமான உணர்ச்சிகளால் யவீரு பாதிக்கப்பட்டிருப்பார். இந்த நம்பிக்கையிழந்த சூழ்நிலையிலும் அந்த தகப்பனின் விசுவாசத்தை ஊக்குவிப்பதே இயேசுவின் நோக்கமாயிருந்தது. இயேசு என்ன கூறினாறென்றால் “பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள்” என்று தமது வார்த்தையால் தேற்றினார். எந்த சூழ்நிலையானாலும் விட்டுவிடாமல் கர்த்தர் பார்த்துக் கொள்வார் என்று முற்றிலும் விசுவாசித்து இயேசுவிடம் நன்மையைப் பெற்றுக்கொள்வோம். காலதாமதமானாலும், பிரச்சனை பெரிதானாலும் பயப்படாமல் விசுவாசமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
இயேசு யவீருவின் வீட்டுக்கு வந்து பேதுரு, யாக்கோபு, யோவான், பெண்ணின் தகப்பன், தாய் இவர்களுடன் அந்த இடத்திற்குப் பிரவேசித்து, எல்லோரும் அழுவதைப் பார்த்து “அழாதேயுங்கள், அவள் மரித்துப் போகவில்லை நித்திரையாயிருக்கிறாள்” என்றார். ஆனால் அங்குள்ளவர்கள் அந்தப் பெண் மரித்து விட்டதால் இயேசுவைப் பார்த்து நகைத்தனர். இயேசுவோ அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து: “பிள்ளையே எழுந்திரு என்றார்.” உடனே அவளுடைய உயிர் திரும்ப வந்தது. எழுந்தாள். இயேசு அவளுக்கு ஆகாரங் கொடுக்க கட்டளையிட்டார். தம்மை உபசரிப்பதைவிட, மற்ற செயல்கள் செய்வதை விட பசியாயிருக்கும் குழந்தைக்கு உணவளிப்பதற்கு இயேசு முக்கியத்துவம் கொடுத்தார். அப்பெண்ணிற்கு இப்பொழுது ஆகாரம் கொடுக்கலாமா அல்லது எவ்வித ஆகாரம் கொடுப்பது என்றெல்லாம் பெற்றோர் சிந்தித்தனர். ஆனால் இயேசுவோ நேரம் தாழ்த்தாமல் உடனடியாக ஆகாரம் கொடுக்கும்படி கட்டளையிட்டார். இதிலிருந்து இயேசு நமது தேவைகளைப் பற்றி கொண்டுள்ள அக்கறையைப் பார்க்கலாம். எல்லாம் முடிந்த பின்னும் மீட்கப்பட்டதை பழைய ஏற்பாட்டில் ஆபிரகாமுக்கும் – ஆதி 22:2 யாக் 2:21,22 ,மோசேக்கும் – யாத் 14:10-22 தாவீதுக்கும் – 1சாமு 17:44-47 யோசாபாத்துக்கும் – 2நாளா 20:1,2,12-26 நடந்ததைக் காணலாம்.
யவீருவுக்கு இருந்த விசுவாசம் நமக்கிருக்கிறதா என் நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். அப்படிப்பட்ட விசுவாசத்துடன் இயேசுவை நெருங்கி நமது தீராத பிரச்சனைகளைத் தீர்க்க ஆயத்தப்படுவோம்.