அக்காலத்தில் உபவாசிப்போர் குளிப்பதில்லை, தலைமயிர் வாருவதில்லை, வாட்டமாக நடந்து கொள்வர். தலையிலும், முகத்திலும் சாம்பலைப் பூசுவர். இந்த சாம்பல் கண்ணீருடன் கலந்து முகத்தில் வழிந்து காண அகோரமாயிருக்கும் பிறருக்குக் காட்ட மாய்மாலக்காரர் செய்யும் இத்தகைய வேடங்கள் வேண்டாம் என்று கர்த்தர் உரைத்தார். அவர்கள் சாதாரண உணவு உண்ணும்முன் சடங்கு முறைப்படி கைகால்கள் கழுவி தலையிலும், முகத்திலும் ஒலிவ எண்ணெய் பூசுவது உண்டு. வேனிற்காலத்திலும் உடல் ஆரோக்கியத்திற்கு அது மிகவும் சிறந்தது. அசாதாரணமான எதுவும் உபவாசம் என்ற பெயரால் வேண்டாம் என்று கர்த்தர் உரைத்தார்.
மேலும் மாற் 2:18-22 லூக் 5:32-35 லும் கூறுகிறத்தின் விளக்கம் என்னவெனில் இயேசு தம்மை மணவாளனாக வர்ணித்துள்ளார். – வெளி 19:7-9,21:9.10 மணவாளன் கூடவே இருக்கும் போது உபவாசிக்க வேண்டிய அவசியம் இல்லை. மனவாளனோடு இருக்கும்போது சகலமும் உண்டாயிருக்கும். அவர் எடுபடும் நாள் வரும். அப்பொழுது உபவாசிப்பார்கள். மணவாளனாகிய இயேசுவின் இரண்டாம் வருகைவரை அவ்வப்பொழுது கிறிஸ்தவர்கள் உபவாசம் செய்ய வேண்டும். உபவாச ஜெபம் நமது அவிசுவாசத்தை நீக்கும். புதிய ஏற்பாட்டு சபையினர் உபவாசித்தனர். அப் 13:1-3, 14:23 பவுல் பல தடவைகள் உபவாசித்ததை 2கொரி 6:5,11:27 ள் காண்கிறோம். தியானம், ஜெபம், ஸ்தொத்தரித்தல், துதித்தல், ஆராதித்தல், உபவாசம் ஆகியவை ஒரு மெய்க் கிறிஸ்தவனின் அனுபவங்களாக அமைபவையாகும்.