இயேசு சீதோன் பட்டணங்களின் திசைகளில் வந்த போது கானானிய ஸ்திரீ
ஒருத்தி தன் மகள் பிசாசின் பிடியினால் அவஸ்தைப் படுவதால் “தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என்று கூபிட்டாள்.” இவள் தாவீதின் குமாரனே என்று கூப்பிட்டதிலிருந்து இவள் இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டவள் என்று அறியலாம். இயேசு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் தேவையோடு ஓடி வந்த பெண்ணின் முன் மௌனம் காத்தார். அவள் கூப்பிட, கூப்பிட காது கேளாதவர் போலிருந்தார். சீஷர்கள் சலித்துப் போய் அவளை அனுப்பிவிட அவரிடம் வேண்டினர். இயேசுவுக்கு இருந்தது போன்ற மனதுருக்கம் அவர்களுக்கு இல்லை.
அந்த பெண்ணின் தொந்தரவு நீங்க வேண்டும் என்று மட்டும் எண்ணினர்.
இயேசுவோ இந்தப் பெண்ணின் விசுவாசத்தை உலகிற்கு எடுத்துரைப்பதற்காக
இந்த உவமையைக் கூறினார். ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் என்று வேண்டிக்கொண்ட பெண்ணிடம் பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க் குட்டிகளுக்கு போடுவது நல்லதல்ல என்றார். இதில் பிள்ளைகள் என்பது இஸ்ரவேலர்கலாகிய யூதர்களைக் குறிக்கிறது. நாய்க்குட்டி என்பது புறஜாதிகளைக் குறிக்கிறது. அதற்கு அந்தப் பெண் மெய்தான் ஆண்டவரே நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேசையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். இதில் தன்னை நாய்க்குட்டியாக உருவகப்படுத்தி தாழ்த்தியதைப் பார்க்கிறோம்.
மேலும் அவள் மேசையிலிருந்து கீழே விழும் துணிக்கைகளை நாய்க்குட்டிகள் தின்னுமே என்றாள். இயேசு அந்தப் பெண்ணிண் விசுவாசத்தைப் பாராட்டி வேறு யாருக்கும் கூறாத “நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக் கடவது” என்றார்.