எருசலேமிலிலுள்ள பெதஸ்தா குளத்தில் ஐந்து மண்டபங்களுண்டு. அங்கு குருடர்கள், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதியஸ்தர்கள் அங்கு படுத்திருந்து தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக் கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் தேவதூதன் ஒருவன் வந்து அந்தக் குளத்தில் இறங்கித் தண்ணீரைக் கலக்குவான். தண்ணீரைக் கலக்கிய பின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்படிப்பட்ட வியாதியஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான். அங்கு முப்பதெட்டு வருடம் வியாதியால் பாதிக்கப்பட்ட ஒருவன் இருந்தான்.
இயேசு அவனை நோக்கி “சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா” என்று கேட்டார். இயேசுவுக்குத் தெரியும் அவன் அநேக வருடங்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதன் என்று. அதற்கு அவன் ஆமாம் என்று உடனே கூறாமல் “தண்ணீர் கலக்கப்படும்பொழுது என்னைக் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவரும் இல்லை. நான் போவதற்கு முன் வேறொருவன் முந்தி இறங்கி விடுகிறான் என்றான். அவன் கடந்த காலத்தைப் பற்றிக் கூறுகிறான். அங்கு நின்றுகொண்டிருக்கிற இயேசு நினைத்தால் நம்மை முற்றிலும் சுகமாக்க முடியும் என்ற நிகழ்காலத்தை அறியவில்லை. இயேசுவை அவன் அறியாததிலிருந்து அவன் புறஜாதி இனத்தைச் சேர்ந்தவன் என்று அறியலாம்.
அந்த மனிதன் இயேசுவைக் கேட்டுக்கொள்ளாத போதிலும் அவனது பரிதாபமான நிலையை அறிந்து இயேசு அவனை நோக்கி “எழுந்திரு படுக்கையை எடுத்துக் கொண்டு நட” என்றார். உடனே அவன் சொஸ்தமாகி தன் படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து போனான். மறுபடியும் இயேசு அவனை தேவாலயத்தில் சந்தித்த போது “அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி, இனிப் பாவஞ் செய்யாதே” என்றார்.