Menu Close

இயேசு மறுரூபமாகும் காட்சி

இயேசு மறுரூபமாகும் காட்சியை மத்தேயு 17 : 1 – 13 லும், மாற்கு 7 : 2 – 13 லும், லூக்கா 9 : 27 – 36 லும் பார்க்கிறோம். இந்தக் காட்சியானது இயேசு தனது மரணத்திற்கும், உயிர்த்தெழுதலுக்கும் முன்னதாக நடந்தது. இயேசு கிறிஸ்து வின் தெய்வீகத்தை வெளிப்படுத்தவோ. உறுதிப்படுத்தவோ இல்லாமல் அவர் மனிதனாக மூன்றரை வருடங்கள் பூமியில் வாழ்ந்தார் என்பதையே காட்டுகிறது. மறுரூப மலையின் அனுபவம் இயேசு கிறிஸ்து அவருடைய ராஜ்ஜியத்தில் வரும் காட்சியின் ஒரு அனுபவம். யோவான் தன்னுடைய சுவிசேஷத்தில் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை முக்கியப்படுத்தி எழுதியதால் மறுரூபமான காட்சியை அவர் எழுதவில்லை. இந்தக் காட்சியை வேதத்தில் வாசிக்கும்போது இயேசு மனிதனாக வந்தார், இருந்தார், என்பதை மட்டும் நமக்கு விளக்கிக் காட்டாமல் மனுக்குலத்திற்கான நம்பிக்கையை அது காட்டுகிறது. இயேசுவின் பிள்ளைகளாக மாறின ஒவ்வொருவரும் ஒரு நாள் மறுரூபமாக்கப்படுவோம். இதைத்தான் யோவான்,

1யோவான் 3 : 2 “ பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளை களாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப் படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப் போமென்று அறிந்திருக்கிறோம்.” என்றார். 

நாம் ஒவ்வொருவரும் இயேசுவிடம் செல்வதற்குள்ள முன்னறிவிப்புதான் இந்தக் காட்சி. இயேசு அவருடைய மரணத்துக்கும், உயிர்த்தெழுதலுக்கும் முன் னதாக அவ்வாறு மகிமைப்படுத்தப்பட்டார். 

தேவனுடைய ராஜ்ஜியம் பற்றி: 

லூக்கா 9 : 27 இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை யென்று இயேசு கூறுகிறார். இந்த வார்த்தை பெந்தேகோஸ்தே சம்பவத்தில் நிறைவேறியது. அங்கிருந்தவர்களில் சிலர் இயேசு கூறிய வார்த்தைகளைத் தாங்கள் உயிர் வாழ்ந்த காலத்தில் அனுபவித்தார்கள். தேவனுடைய வல்லமை அந்த பெந்தேகோஸ்தே நாளில் 120 இருதயங்களில் வந்து இறங்கியது (அப்போஸ்தலர் 1 : 8). அதாவது “பரலோக இராஜ்ஜியத்தை பரிசுத்த ஆவியானவர் இந்த பூமிக்கு வல்லமையாய்க் கொண்டு வந்தார் (ரோமர் 14 : 17). அதாவது அந்த பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய ஆளுகை செய்யும் அதிகாரத்தை, இந்த பூமிக்கு வல்லமையுடன் கொண்டு வந்தார் (லூக்கா 9 : 27). வேதத்தில் தேவனுடைய ராஜ்ஜியம் என்ற சொல் பல கோணங்களில் கூறப்பட்டுள்ளது. லூக்கா 10 : 9, 11 : 20, 17 : 21 போன்ற வசனங்களை வாசிக்கும் போது அது ஆன்மீக அர்த்தமுடையதாயிருக்கிறது. கிறிஸ்து தேவனாக இருப்பதால் அவருடைய ஆளுகையுள்ள இடம் தேவனுடைய ராஜ்ஜியம். கிறிஸ்து வந்தபோது தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிற்று. சபையை தேவனுடைய ராஜ்ஜியம் என்று குறிப்பிடுவதில்லை.கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் தொடர்பிலும் இது கூறப்படும். இப்பகுதியில் கிறிஸ்து தமது ராஜ்ஜியம் வல்லமையுடன் வெளிப்படும் நிலையை வெளிப்படுத்துகிறது. 

இயேசு மறுரூபமான காட்சி:

லூக்கா 9 : 28 – 32 இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டு நாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.

அவர் ஜெபம்பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது.

அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி,

அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டு பேரையும் கண்டார்கள்.

இவைகளைச் சொல்லி எட்டு நாளைக்குப் பின்பு இயேசு பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் கூட்டிக்கொண்டு ஜெபம் பண்ணுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார். இயேசு சீடர்களோடு ஜெபிப்பதை தமது தகுதிக்கு குறைவாக எண்ணாமல் அவர்களோடு ஜெபித்ததைப் பார்க்கிறோம். அவ்வாறு அவர்கள் ஜெபம் பண்ணிக்கொண்டிருந்த போது இயேசுவின் வஸ்திரம் வெண் மையைப்போலப் பிரகாசமடைந்து முகரூபமும் மாறிற்று. மத்தேயு இயேசு வின் முகம் சூரியனைப்போல் பிரகாசித்தது என்றும், அவருடைய வஸ்திரம் வெளிச்சத்தைப் போல் வெண்மையாயிற்று என்றும் கூறியிருக்கிறார். இயேசுவின் மேல் அந்த நேரத்தில் எந்த வெளிச்சமும் படவில்லை. அவருடைய முகத்தில் தோன்றிய வெளிச்சமே அது. ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வதற்கு முன் இப்படிப்பட்ட மகிமைதான் அவர்களுக்கு உடையாய் இருந்திருக்கும். அவர்களுடைய நிர்வாணமும் தெரியாதபடி மூடப்பட்டிருக்கும். அவர்கள் பாவம் செய்தபின் அந்த மகிமையை இழந்து போனதால் தாங்கள் நிர்வாணிகள் என்று உணர்ந்து கொண்டார்கள். யாத்திராகமம் 34 : 29ல் மோசே நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளைப் பெற்றுக் கொண்டு சீனாய் மலையிலிருந்து இறங்கினபோது கர்த்தர் அவனோடு பேசினதினால் மோசேயின் முகம் பிரகாசித்ததை வேதத்தில் பார்க்கிறோம் (2கொரிந்தியர் 3 : 7). அதுமட்டுமல்லாமல் சீஷர்கள் நித்திரை மயக்கத்துடனிருந்தாலும் விழித்து, அந்தக்காட்சியைப் பார்த்தபோது இயேசு வுடன் மோசேயும், எலியாவும் மகிமையுடன் பேசிக்கொண்டிருந்ததையும் பார்த்தனர். அதனால்தான் பேதுரு, 

2பேதுரு 1 “ 16 – 18ல் “நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்.” 

என்கிறார். மோசே மரித்தார். எலியா அக்கினி இரத்தத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டார். இயேசு இவ்வாறு தன்னுடைய மூன்று சீஷர்களுக்கு முன் மறுரூபமடைந்ததைப் பார்க்கிறோம். சங்கீதம் 63 : 2 ல் தாவீது பரிசுத்த ஸ்தலத் தில் தேவ வல்லமையையும் அவரது மகிமையையும் பார்த்ததைப் பார்க்கிறோம். மூன்று பேரும் இயேசுவின் மெய்யான பரலோக மகிமையைக் கண்டனர். தேவன் மனிதனின் மாம்சத்தில் வெளிப்பட்டார். அவருடைய இயல்பான தெய்வீக மகிமை அப்பொழுது வெளிப்பட்டது. இயேசுவின் உயிர்தெழுதலில் தேவ வல்லமை வெளிப்பட்டது. பெந்தேகோஸ்தே நாளில் ஆவியானவரின் வருகையில் தேவ வல்லமை வெளிப்பட்டது. மறுரூப அனுபவத்தில் அதன் தன்மை முன்னோட்டமாக வெளிப்படுத்திக் காட்டப்பட்டது. அதன் உண்மையான பூரண செயல்பாடு நிலையோ இனி வரவேண்டியதாக உள்ளது. இயேசு மரூப மானது எதற்காகவென்றால் அவர் சிலுவை மரணத்தை எதிர்நோக்கியிருந் ததால் இந்த அனுபவம் அவரை ஊக்குவித்தது (மத்தேயு 16 : 21). இயேசு சிலுவையில் பாடுகளை அனுபவிக்கப் போகிறார் என்று சீஷர்களுக்கு ஒரு அறிவிப்பாயிருந்தது. 

இயேசு உண்மையான தேவனுடைய குமாரன் மானுட இனத்தை மீட்பதற்குத் தகுதியுள்ளவர் என்பதற்கு தேவன் இதன் மூலம் ஒரு அத்தாட்சி கொடுத்துள்ளார். மரணமடைந்து தேவனுடைய அடியார்களின் பிரதிநிதியாக மோசேயும், மரணம டையாமல் பரலோகம் செல்லப்போகும் விசுவாசிகளின் பிரதிநிதியாக எலியா வும் காணப்பட்டனர். மோசே நியாயப்பிரமாணத்தையும், எலியா தீர்க்கதரிசனங் களையும் குறிக்கிறது. நியாயப்பிரமாணமும், தீர்க்கதரிசனமும் இயேசுகிறிஸ்து வின் மரணத்துக்கு சாட்சி பகர்ந்தது. இவர்கள் இருவரும் பழைய ஏற்பட்டு தீர்க்கதரிசிகளின் மிகச் சிறந்தவர்கள். இவ்விருவரும் மகிமையில் காணப்பட்ட போது, அதுவரை அவர்களைப் பார்த்திராத சீடர்கள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டனர். நாமும் இவ்வுலகை விட்டுக் கடந்து சென்ற பின்னர், நாமும் மகிமையில் கிறிஸ்துவுடன் இருக்கும் பொழுது யாவரையும் அறிந்திருப்போம். ஒருவரும் மற்றவரை அறிமுகப்படுத்துவதற்கு அவசியம் இருக்காது. மோசே இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் செய்த தவறினால் கானான் நாட்டிற்குள் செல்ல முடியாமற் போனார் (எண்ணாகாமம் 20 : 12). 

அதற்காக அவர் வேண்டிக்கொண்டபோது “இனி இந்தக் காரியத்தைக் குறித்து என்னிடம் பேச வேண்டாம் “ என்று கர்த்தர் கூறினார். கர்த்தர் கோபமாகப் பேசிய தாக மோசே கருதினார் (உபகாமம் 3 : 21 – 28). மோசே வேண்டிக்கொண்டதை விட (சாதாரண மனிதனாக கானானுக்குள்செல்வதைவிட)மிகவும்உயர்வானதை (இயேசு மனுஷனாக இருக்கும் போது மகிமையில் அவருடன் கானான் நாட்டில் இருப்பதை) கர்த்தர் அவருக்கு அழிக்கத் திட்டமிட்டிருந்தார். அது அப்பொழுது மோசேக்குப் புரியாது என்பதால் “பேச வேண்டாம்” என்று தேவன் கூறினார். மோசேயின் வேண்டுதலுக்கு மோசே எதிர்பார்த்ததைவிட மிகவும் சிறந்த முறையில் பலன் கிடைத்தது. நமது ஜெபங்களுக்குப் பதில் கிடைக்காவிடில் பதற வேண்டாம். நாம் வேண்டிக்கொள்வதற்கும், நினைப்பதற்கும், மிகவும் அதிக மாகத் தேவன் நமக்கு அருளிச் செய்வார் (எபேசியர் 3 : 20, ரோமர் 8 : 28). இயேசு தாம் எருசலேமில் பாடுபட்டு கொலை செய்யப்பட்டு மூன்றாவது நாளில் உயிர்த் தெழும்பப் போகிறதை ஏற்கனேவே அறிந்திருந்தார். ஆனாலும் அவற்றைப்பற்றி மோசேயும், எலியாவும் அவருடன் உரையாடினார்கள். 

பேதுருவின் எண்ணமும், பிதா கொடுத்த சாட்சியும்:

லூக்கா 9 : 33 – 36 அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்துபோகையில், பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது இன்னதென்று அறியாமல் சொன்னான். இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது, அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள். அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று. அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கி வைத்திருந்தார்கள்.

மோசேயும், எலியாவும் அவர்களை விட்டுப் பிரிந்து போவதைப் பார்த்த பேதுரு தான் பேசுகிறது சரியா என்று உணராமல், தான் அங்கேயே இருக்கலாம் என்றும் அதற்காக இயேசுவுக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியா வுக்கு ஒரு கூடாரமும், போடுவோம் என்றான் இவ்வாறு பேதுரு பேசிக் கொண்டிருக்கும் போதே, ஒரு மேகம் அவர்கள் மீது நிழலிட்டதால் அவர்கள் மிகவும் பயந்தனர். அந்த மேகத்திலிருந்து கர்த்தர்,

லூக்கா 9 : 35 “அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.”

“என் குமாரனை மோசேக்கும், எலியாவிற்கும் சமமாக வைக்காதீர்கள்” என்று கர்த்தர் கூறுகிறார். அதேபோல் இயேசு ஞானஸ்நானம் பெற்றுக் கரையேறி னவுடனே கர்த்தர் வானத்திலிருந்து “இவர் என்னுடைய நேசகுமாரன். இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்றார் (மத்தேயு 3 : 17, மாற்கு 1 : 11, லூக்கா 3 : 22). ஏனெ னில் பேதுரு மோசேயையும், எலியாவையும் இயேசுகிறிஸ்துவை வைக்கும் அதே நிலைமையில் வைக்கத் துணிகிறான். மோசேயையும், எலியாவையும் இயேசுகிறிஸ்துவுக்கு இணையாக வைக்க முடியாது. இயேசுவைக் குறித்து பிதா கொடுக்கும் சாட்சிதான் இது. இயேசுவே இறுதி அதிகாரமுடையவராய் இருக் கிறார். மோசேயும், எலியாவும் கூறியது உன்னதமான தேவ வார்த்தைகள். இயேசு கூறுவதே இறுதியானது (எபிரேயர் 1 : 1, 2). பிதா வேறு ஒருவரைக் குறித்தும் இவ்வாறு சொல்ல முடியாது. இயேசு ஒருவர் மட்டுமே பரிபூரணமாக பிதாவைப் பிரியப்படுத்தக் கூடியவர். விசுவாசத்தின் மூலமாக மட்டும் பிதாவின் பிரசன்னத்துக்குள் கடந்து செல்ல முடியாது. இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது, விசுவாசிகளின் ஐக்கியத்தில் நாம் சேர்க்கப்படுகிறோம். இயேசுகிறிஸ்து ஒருவரே பிதாவுக்குப் பிரியமானவராக இருப்பதால் . இயேசு வின் மூலமாய் இயேசுவுக்குள் பிதாவினாலே ஏற்றுக்கொள்ளப்படுகிறோம். 

ஏனென்றால் இயேசுகிறிஸ்து ஒருவரே பூரணமான தேவ ஆட்டுக்குட்டி. இயேசு மூன்றரை ஆண்டுகள் சோதிக்கப்படவேண்டியிருந்தது. அவர் உலக ஜனங்களின் பாவத்திற்காகச் சிலுவையில் மரிக்கும்படியாகப் போகப்போகிறார். தேவனுக்குத் தேவை ஒரு குற்றமில்லாத ஆட்டுக்குட்டி. மனுக்குலத்திற்குப் பதிலாக சிலுவை யில் மரிக்க ஒப்புக்கொடுத்த ஒரே ஒருவர் இயேசுகிறிஸ்து மட்டுமே. ஏனென் றால் அவரே பாவமில்லாதவராக இருந்தார். அவர் பரிபூரணமாய் மனிதனாக இருந்த போது மறுரூபமானார். மனுக்குலத்தின் நம்பிக்கை விஞ்ஞானத் தினாலேயோ, கல்வியினாலேயோ இல்லை. விஞ்ஞானம் பிரச்சனைக்குத் தீர்வு கொடுக்க முடியாது. இந்த உலகத்திற்கான நம்பிக்கை இயேசுகிறிஸ்துவிடம் மட்டுமேயுள்ளது. குறைவுள்ளதாக இருக்கிற நம்முடைய சரீரமும் ஒருநாள் மறுரூபமாக்கப்படும். கிறிஸ்து மீண்டும் வரும்போது உயிரோடிருக்கிறவர்களும் மரூபமாக்கப்படுவார்கள். இதுதான் மனுக்குலத்திற்கான பெரிய நம்பிக்கை. ஆமென்.

Related Posts