Menu Close

அநீதியுள்ள உக்கிராணக்காரன் பற்றிய உவமை – லூக்கா 16 : 1 – 12

லூக்கா 16 : 1 – 12
1. பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.
2. அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.
3. அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன்.
4. உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;
5. தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.
6. அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான்.
7. பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டைவாங்கி, எண்பது என்று எழுது என்றான்.
8. அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.
9. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.
10. கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
11. அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?
12. வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?

ஐசுவரியவானான ஒருவனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான். அவன் ஆஸ்திகளை அழித்துப் போடுகிறதாக எஜமான் கண்டு அவனிடம் தன் கணக்குகளை ஒப்புவிக்கச் சொன்னான். தன்னுடைய வேலை போகப்போவதால் தன்னை ஏற்றுக்கொண்டு உதவி செய்வதற்கு மக்களைத் தயார்படுத்த தன் எஜமானிடம் கடன் பட்டவர்களை அழைத்து அவர்கள் சீட்டுகளில் கடன்களை குறைவுபடுத்தி எழுத வைத்தான். இதை சரியென்று உரிமையாளர் கூறவில்லை. அவனுடைய அறிவுத்திறனை மட்டுமே பாராட்டினார். இதே போல் விசுவாசிகள் பலநேரங்களில் பரலோக சிந்தையற்றவர்களாய் பரலோக காரியங்களில் முன்னேறத் தவறி விடுகிறார்கள். நாம் நம்முடைய ஐசுவரியத்தையும், பணத்தையும் தேவனுடைய காரியங்களுக்காகவும், மற்றவர்களின் இரட்சிப்புக்காகவும் செலவிட வேண்டும். உலக சம்பத்துகளைச் சேர்ப்பதிலும், பயன்படுத்துவதிலும் உண்மையில்லாதவர்கள் ஆவிக்குரிய காரியங்களிலும் அப்படியே இருப்பார்கள். எந்த சிறிய பணியிலும் கடமை தவறாமை, கவனம், உண்மை ஆகியவற்றோடு நடந்து கொள்ளுகிறவர்களுக்கு அதிக பொறுப்புகளும், மதிப்பும் கொடுக்கப்படும்.

Related Posts