Menu Close

தாலந்துகள் பற்றிய உவமை – மத்தேயு 25 : 14 30

இந்த உவமையில் இயேசு பரலோகராஜ்ஜியம் புறதேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன் தன் ஆஸ்தியை தன் ஊழியக்காரர்களிடம் ஒப்படைத்துப் போவதை ஒப்பிட்டுக் கூறுகிறார். எஜமான் தன் வேலைக்காரனின் திறமைக்குத் தக்கதாக 5 தாலந்து, 2 தாலந்து, 1 தாலந்து கொடுத்துச் சென்றான். ஐந்து தாலந்தை வாங்கினவன் அவற்றைக்
கொண்டு வியாபாரம் செய்து மேலும் ஐந்து தாலந்தை சம்பாதித்தான். இரண்டு தாலந்தை வாங்கினவன் அவற்றைக் கொண்டு மேலும் இரண்டு தாலந்தை சம்பாதித்தான். ஒரு
தாலந்தை வாங்கினவன் நிலத்தைத் தோண்டி பணத்தைப் புதைத்து வைத்தான்.

வெகுகாலத்திற்குப் பின் எஜமான் திரும்பி வந்து அவர்களிடம் கணக்கு கேட்ட
போது முதல் இரண்டு பேரும் தான் சம்பாதித்ததைக் கூறினர். எஜமான் அவர்களை அநேகத்தின் மேல் அதிகாரியாக வைப்பதாகக் கூறினான். மூன்றாவதுள்ளவனிடம் கேட்ட
போது “நீர் கொடுத்த இந்தப் பொருளில் நஷ்டம் வந்தால் தண்டனை நீர் தருவீர் என்று பத்திரமாகப் புதைத்து வைத்துள்ளேன்” என்றான். அதற்கு எஜமான் “அப்படியானால் நீ என் பணத்தை காசுக்காரரிடத்தில் போட்டிருந்தால் வட்டியாது கிடைத்திருக்குமே” என்றான்.

இதில் தாலந்து என்பது தேவன் நம்மிடம் ஒப்புவிக்கப்பட்ட தனித்திறமைகள், காலம், வசதிகள், பூமியிலிருக்கும் போது ஆண்டவருக்குச் சேவை செய்யும் வாய்ப்பு ஆகியவையாகும். இவற்றை ஒப்புவித்த தேவன் நாம் அதை ஞானத்துடன் பயனுள்ள
வகையில் பயன்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். சரியாக ஊழியம் செய்யத் தெரியா விட்டால் ஊழியருக்கு உதவி செய்ய மருத்துவமனை ஊழியம், கிராம ஊழியங்களுக்கு செல்பவர்களோடு சேர்ந்து செல்லலாம்.

உண்மையாக ஊழியம் செய்பவர்களுக்கு கிருபைகள் பெருகும், புதிய வழிகள் திறக்கும், இன்னும் பெரிய பொறுப்புகள் கொடுக்கப்படும். பல ஆசீர்வாதங்கள் கிடைக்கும். குறைந்த அளவில் உண்மையாய் ஊழியம் செய்பவர்களுக்கு சிறிய இடமும், கொஞ்ச பொறுப்பும் கொடுக்கப்படும்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில் சரியாக தேவனுடைய பணியைச் செய்யாமல், புதிதாக ஒரு ஆத்துமாவையும் வழிநடத்தாமல் இருக்கிறவர்களைப் போல் நாம் இருக்காமல், தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் பணியை செவ்வனே செய்து முடிக்க இறைவனிடம் இறைஞ்சுவோம்.

Related Posts