Menu Close

இயேசுவும் சமாரிய ஸ்திரீயும்: யோவான் 4:1-29

இயேசு நண்பகலில் கொழுத்தும் வெயிலில் தண்ணீர் எடுக்க வந்த ஒரு நபரை அதுவும் பாவியாகிய ஒரு பெண்ணை சந்திக்கிறார். அந்தப் பெண் சீகார் என்னப்பட ஊரில் யாக்கோபுடைய கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்தாள். இயேசு அவளிடம் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டார் யூதர்கள் சமாரியரைத் தீண்டத்தகாதவர்களாகக் கருதியதால் அந்தப் பெண் இயேசுவிடம் “நீர் யூதனாயிருக்க என்னிடத்தில் எப்படி தண்ணீர் கேட்கலாம்” என்றாள். இயேசு அவளிடம்

  • யோ 4:10 “தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும்  அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில்  கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.
    மேலும் அவள்
  • யோ 4:11 “உம்மிடத்தில் மொண்டு கொள்ள பாத்திரம் இல்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னே எங்கிருந்து உமக்கு ஜீவத்தண்ணீருண்டாகும்“ என்றெல்லாம் கேள்விகளை அடுக்கினாள். இயேசு அந்தக் கேள்விகளில் ஜீவத்தண்ணீர் என்ற கேள்விக்கு மட்டும் விளக்கமளித்தார்.
  • யோ 4:13,14 “இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்.” “நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது. நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்” என்று கூறினார்.”

அவளுடைய புருஷனை அழைத்து வரக் கூறினார். அவள் எனக்குப் புருஷன் இல்லை என்றவுடன் இயேசு அவளைப் பார்த்து “உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள்” என்றார். இதைக் கேட்டவுடன் இயேசு தீர்க்கதரிசி என்றாள்.
மேலும் தொழுதுகொள்வதைப் பற்றிப் பேசினார். எங்கு தொழுதுகொள்வது என்பது முக்கியமல்லவென்றும் எவ்விதம் தொழுதுகொள்கிறோம் என்பதே முக்கியம் என்றார். மேலும் பிதாவானவர் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டுமென்று விரும்புகிறார் என்றார், அந்தப் பெண் “மேசியா வருவார், வரும்பொழுது எல்லாவற்றையும் எங்களுக்கு அறிவிப்பார் “என்றாள். உடனே இயேசு “நானே அவர் என்றார். போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள் சென்ற சீஷர்கள் வந்து அவர் பேசுகிறதைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். அந்த ஸ்திரீ குடத்தை விட்டுவிட்டு தான் பெற்ற அனுபவத்தை மற்றவர்களுக்கு அறிவித்தாள். இந்த சமாரியப் பெண்ணைப்போல நாமும் நாம் பெற்ற அனுபவத்தை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும் –யோ 4:1-26 சமாரியப் பெண் முதலில் கிறிஸ்துவை யூதராகக் காண்கிறாள். பின் தீர்க்கதரிசியாகக் காண்கிறாள். இறுதியில் மேசியாவாக அறிந்த்துகொள்கிறாள்.
நிக்கொதேமு என்ற சன்மார்க்கரான உயர்வகுப்பைச் சார்ந்த மனிதரையும், ஒழுக்கக் கேடான வாழ்க்கை வாழ்ந்த ஒதுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த சமாரியப் பெண்ணையும் கிறிஸ்து சந்திக்கின்ற நிகழ்ச்சிகளை யோவான் அருகருகே குறிப்பிடுகிறார் யோ 3, 4 அதி மக்கள் பயத்தினால் இரவில் இரகசியமாக வரும் நிக்கொதேமுவுக்கும், நடுப்பகலில் பொது இடத்தில் தேடிச் சென்று சந்தித்த சமாரியப் பெண்ணுக்கும் ஒரே செய்தியைத் தான் கிறிஸ்து அறிவிக்கிறார். ஒரே உருவகத்தைக் கையாளும் இயேசு அவரவர் புரிந்து கொள்வதற்கேற்ப தொடர்புபடுத்திப் பேசுகிறார். கிறிஸ்துவின் சந்திப்புக்குப்பின் சமாரியப் பெண்ணால் சீக்கிரமாக அவரை அறிவிக்க முடிந்தது. அநேகரை கிறிஸ்துவண்டை வழிநடத்தவும் முடிந்தது. அவளது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை அத்தேசமக்கள் விரைவில் உணர்ந்தனர். நிக்கொதேமுவால் அவ்வளவு எளிதில் அவற்றை சாதிக்க முடியவில்லை. அவரது வாழ்க்கைச் சூழல் அவ்வளவு நெருக்கமுடைய முட்செடிகளால் சூழ்ந்ததாக இருந்தது. அதனைவிட்டு சீக்கிரமாக வெளியேற அவர் துணியவில்லை. தம்மால் இயன்றதை இறுதியில் கர்த்தருக்காகச் செய்தார்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவெனில்:

  1. பாவியாகிய சமாரிய ஸ்திரீயைத் தேடி இயேசு வந்ததைப் போல நாமும் பாவிகளை நரகத்திற்குச் செல்லவிடாமல் அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.
  2. சமாரிய ஸ்திரீ தாம் கண்டதை மற்றவர்களுக்கு அறிவித்து அவர்களை இயேசுவண்டை வழிநடத்தியதைப்போல நாம் பெற்ற அற்புதத்தை, சுகத்தை, சாட்சியாக மற்றவர்களுக்கு அறிவித்து அவர்களை கிறிஸ்துவண்டை வழிநடத்த வேண்டும்.  

Related Posts