Menu Close

ஏழை விதவையின் காணிக்கை – மாற்கு 12 : 41 – 44, லூக்கா 21 : 1 – 4

இயேசு தேவாலயத்தில் காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து ஜனங்கள் காணிக்கைப் பெட்டியிலே பணம் போடுகிறதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமான காணிக்கைகளைப் போட்டனர். ஏழையான ஒரு விதவையும் இரண்டு
காசு காணிக்கை போட்டாள். இதைப் பார்த்த இயேசு “இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்றார். ஏனெனில் ஐசுவரியவான்கள் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்துப் போட்டார்கள். இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனுக்கு உண்டாயிருந்ததையெல்லாம் போட்டு விட்டாள்” என்றார்.

தேவன் நாம் கொடுக்கும் காணிக்கையின் அளவையும், பணத்தின் தொகையையும் பார்த்து மதிப்பிடுவதில்லை. மேலும் அவர்கள் காணிக்கையைக் கொடுப்பதின் மூலம்
எவ்வளவு தியாகம் செய்துள்ளார்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஐசுவரியவான்கள் தங்களுக்குத் திரளாக உள்ள ஆஸ்தியில் ஒரு பங்கைக் கொடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யவில்லை. அந்த விதவையின் காணிக்கை அப்படிப்பட்டதல்ல. அவளிடமிருந்த அனைத்தையும் கொடுத்து விட்டாள். தன்னால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அத்தனையையும் கொடுத்து விட்டாள்.

இந்த கொள்கையை நாம் ஆண்டவருக்குச் செய்யும் ஒவ்வொரு ஊழியத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். அவர் நம்முடைய வேலையையும், ஊழியத்தையும் அதன் அளவு, அதன் செல்வாக்கு, வெற்றி ஆகியவற்றைக் கொண்டு மதிப்பிடுவதில்லை. கொடுப்பவர்களின் பக்தி, தியாகம், அன்பு ஆகியவற்றைப் பார்த்து அவர்களை மதிப்பிடுகிறார்.

Related Posts