இயேசு கெர்கெசேனர் நாட்டில் வந்த போது பிசாசு பிடித்திருந்தவன் பிரேதக் கல்லரைகளிலிருந்து இயேசுவை நோக்கி வந்தான். அவர்களுடைய குடியிருப்பு கல்லறைகளில். அவனை அநேகர் சங்கிலிகளினாலும், விலங்குகளினாலும் கட்டிப்போட்டிருந்தனர். அவைகளை கூட அவன் தகர்த்துப் போடுவான். அவனை அடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது. இரவும், பகலும் மலைகளிலும், கல்லறைகளிலும் இருந்தது கூகுரலிட்டு கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக் கொண்டான். அவன் சமுதாயத்தால் தள்ளப்பட்டு தொடுவதற்கு அருவருப்பாயிருந்தவன். அவன் செய்கிற ஒவ்வொரு செயல்களையும் பார்க்கும் போது அசுத்த ஆவிகள் தங்கள் விருப்பப்படி அவனை செய்ய வைக்கின்றன என்று அறிகிறோம்.
இந்தக் கெர்கெசேனர் நாடு கலிலேயாக் கடலின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. கதிரியா அந்தநாட்டின் தலைநகரம். தெக்கப்போலி என்று அழைக்கப்பட்ட பத்து நகரங்களில் ஒன்று இந்தக் கதிரேயா. இப்பத்து நகரங்களில் வாழ்ந்த பெரும்பான்மை மக்களும் புறஜாதிகளாவார். அவ்விடங்களில் பன்றி வளர்ப்பைத் தொழிலாகக் கொண்டவர்கள் காணப்பட்டனர். பன்றி அசுத்த விலங்கானதால் யூதர்கள் அதை வளர்ப்பதில்லை. பன்றி இறைச்சி உண்பதும் யூதருக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. (லேவி 11:7,8 உபா 14:8)
பிசாசு பிடித்தவன் இயேசுவண்டை வந்தவுடன் அவரை பணிந்து கொண்டான். அதோடு ”இயேசுவே உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப் படுத்தாதபடிக்கு தேவன் பேரில் உமக்கு ஆணையென்று” மிகுந்த சத்தமிட்டுக் கூறினான். இதிலிருந்து அசுத்த ஆவிகள் தாங்கள் பிடித்திருந்த மனிதன் மூலம் பேசமுடியும் என அறிகிறோம். பிசாசுக்கு இயேசுவைப் பார்த்தவுடன் இயேசு தேவகுமாரன் என்று தெரிகிறது. அதனால் தான் இயேசுவைப் பார்த்தவுடன் பணிந்து கொண்டது.
இயேசு அவனை நோக்கி பேரைக் கேட்டதற்கு “நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன்” என்றது. ரோமப்படையில் மிக அதிக எண்ணிக்கையுள்ள படைப்பிரிவுகளை லேகியோன் என்ற பெயரால் அழைப்பர். ஒரு லேகியோனில் 3000 த்துக்கும் 6000 த்துக்கும் இடைப்பட்ட என்னிக்கையுள்ளோர் காணப்படுவர் அத்தனை பிசாசுகள் அவனுக்குள் இருந்ததன. அதுமட்டுமல்லாமல் பிசாசுகள் இயேசுவை நோக்கி பன்றிக்குள் அவைகளை அனுப்பும்படி வேண்டிக் கொண்டன. இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே அசுத்தாவிகள் புறப்பட்டு பன்றிக்குள் போயின. உடனே இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக் கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி கடலில் பாய்ந்து மாண்டன. பன்றிகளை மேய்த்தவர்கள் இவைகளைப் பார்த்து பட்டணத்திலும், சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அதைக் கேட்ட மக்கள் சம்பவித்ததைப் பார்க்கும்படி இயேசுவினிடம் வந்தார்கள்.
பிசாசு கேட்டபடி அவைகளை இயேசு பன்றிக்குள் அனுப்பியதிலிருந்து ஒரு மனிதனின் வேண்டுதலை மட்டும் தான் இயேசு கேட்பார் என்பதில்லை. பிசாசுகளின் வேண்டுதலுக்கும் இயேசு அனுமதியளித்ததைப் பார்க்கிறோம். ஏனெனில் அந்த மனிதனைப் பற்றி இயேசுவுக்கு ஒரு சித்தம் இருந்தது. பிசாசுகளை கர்த்தர் அழிக்காதது ஏனென்றால் அதற்கான காலம் வரவில்லை. வெளிப்படுத்தின விசேஷத்தில் சாத்தானின் மேலுள்ள இறுதி வெற்றியைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
ஜனங்கள் பிசாசு பிடித்த மனிதன் வஸ்திரம் தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டார்கள். அங்குள்ள ஜனங்கள் இதைப் பார்த்து பயமடைந்து இயேசுவிடம் அவ்விடத்தை விட்டுப் போகும்படி வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டுதலின்படி இயேசு அவ்விடத்தை விட்டுப் போனார். இயேசு செல்லும் பொழுது பிசாசிலிருந்து விடுதலை பெற்ற மனுஷன் அவரோடு கூட வருவதற்கு உத்தரவு கேட்டான். இயேசுவோ அவனிடம் “நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய் தேவன் உனக்குச் செய்தவைகளை அறிவி” என்று அனுப்பி விட்டார். இதில்
1. பிசாசுகளின் விண்ணப்பத்திற்கு செவிகொடுத்து பன்றிக்குள் இயேசு அனுப்பினார்.
2. மக்களின் விண்ணப்பத்தைக் கேட்டு அந்த இடத்தை விட்டுச் சென்றார். ஆனால்
3. சுகமளிக்கப்பட்டவனின் வேண்டுதலை மறுத்து விட்டார்.
ஏனெனில் தன் குடும்பத்தை விட்டுப் பலகாலம் பிரிந்திருந்தவனுக்கும், அவனுடைய குடும்பத்திற்கும் மகிழ்ச்சி உண்டாகும்படி வீட்டிற்கு அனுப்பினார். மேலும் தங்கள் பகுதியை விட்டுப் போகும்படி மக்கள் கேட்டுக் கொண்டதால் அந்த இடத்தில் ஊழியம் செய்ய அந்த மனிதனை ஏற்படுத்தினார். அவன் கேட்டுக்கொண்டதைவிட அதிகமான நன்மையை (ஊழியனாக) அவனுக்குச் செய்தார்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில் எப்படிப்பட்ட பிசாசுகளும் இயேசுவைக் கண்டவுடன் நடுங்குகின்றன. நாம் கேட்பதற்கு அதிகமாகவே தேவன் நமக்குச் செய்வார்.