Menu Close

லாசருவை உயிரோடெழுப்பியது – யோவான் 11 : 1 – 45

கர்த்தருக்குப் பரிமளத்தைலம் பூசிய மார்த்தாளின் சகோதரனாகிய லாசரு வியாதியாயிருந்ததால் மார்த்தாளும், அவளுடைய சகோதரியான மரியாளும் இயேசுவினிடத்தில் ஆள் அனுப்பி தன் தம்பி வியாதியாயிருப்பதை சொல்லி அனுப்பினாள். இயேசு அதைக் கேட்டு

“இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது. தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார்.” என்றார்.

இயேசுஅந்த குடும்பத்திலிலுள்ளவர்களிடம் மிகவும் அன்பாயிருந்தார். அப்படியிருந்தும் பின்னும் இரண்டு நாள் கழித்துப் போகலாம் என்றார். அதற்குக் காரணம் அவர்களின் விசுவாசமும், சீஷர்களின் விசுவாசமும்  பலப்பட அப்படிச் செய்தார். அப்பொழுது சீஷர்கள் “அந்த இடத்தில் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா” என்றனர். இயேசு அவர்களிடம் “வெளிச்சம் இல்லாததால் அவர்கள் இடறுகிறார்கள்” என்று கூறி “லாசரு நித்திரையடைந்திருக்கிறான். அவனை எழுப்பப் போகிறேன்” என்றார்.
இதில் லாசரு மரணமடைந்து விட்டதை தமது ஆற்றலால் அறிந்ததுமின்றி, அவனை மரணத்தினின்று தாம் உயிர்பெறச் செய்யப்போவதையும் முன்னறிந்திருந்தார். சீசர்கள் அதன் அர்த்தம் புரியாமல் “நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான்” என்றனர். அப்பொழுது இயேசு வெளிப்படையாக “லாசரு மரித்துப்போனான்” என்றார். இயேசுவின் சீஷரான தோமா மீண்டும் யூதேயாவுக்குச் சென்று ஆபத்தை எதிர்நோக்குவதை விரும்பாவிட்டாலும் இயேசுவை விட்டுப் போகாமல் “அவரோடு கூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்” என்றார். இயேசு பெத்தானியாவுக்குச் சென்றபோது லாசரு இறந்து அடக்கம் பண்ணி நான்கு நாளாயிற்று என்றறிந்தார்.

இயேசு வருவதைக் கேள்விப்பட்டு மார்த்தாள் எதிர்கொண்டு போனாள். மரியாளோ வீட்டில் இருந்தாள். மார்த்தாள் இயேசுவிடம் “ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான்” என்றாள். இயேசு அவளிடம் “உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்” என்றார். இதை மார்த்தாள் சரியாகப் புரிந்தது கொள்ளாமல் “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்” என்றாள். அநேக இடங்களில் நாமும் கர்த்தருடைய வார்த்தையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் செயல்படுகிறோம். இதுமாற ஆவியானவரின் வழிநடத்துதல் நமக்குத் தேவை. இயேசு அவளிடம் “நானே உயித்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்.” என்றார். அதற்கு அவள் “நீர் தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று விசுவாசிக்கிறேன்” என்றாள்.

மார்த்தாள் மரியாளிடம் சென்று இயேசு அங்கு வந்திருப்பதைக் கூறினவுடனே இயேசு இருந்த இடத்திற்கு வந்து “ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்.” அவள் அழுகிறதை இயேசு கண்டு ஆவியில் கலங்கி துயரத்துடன் கண்ணீர் விட்டார். இயேசு கல்லறைக்கு வந்து அங்கு கல் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து கல்லை எடுத்துப் போடுங்கள் என்றார். அப்போது மார்த்தாள் “ஆண்டவரே, இப்போழுது நாறுமே, நாலு நாளாயிற்றே என்றாள்.” இயேசு அவளை நோக்கி “நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்” என்றார்.

ஜனங்கள் கல்லை எடுத்துப் போட்டவுடன் பிதாவை நோக்கி ஜெபித்து “லாசருவே வெளியே வா” என்று உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். மரித்த லாசரு வெளியே வந்தான். அவனுடைய கைகளும், கால்களும் பிரேதச் சீலையினால் கட்டப்பட்டிருந்தது. இயேசு அவைகளை அவிழ்த்து விடச் சொன்னார். இதைப் பார்த்த யூதர்கள் இயேசுவை விசுவாசித்தனர். இதில் யாரும் லாசருவை உயிரோடெழுப்பும் படி வேண்டிக்கொள்ளவில்லை என்று பார்க்கிறோம்.. இயேசு உயிரோடிருப்பவனைக் கூப்பிடுவதைப்போல கூப்பிடுவதையும், லாசருவும் கர்த்தரின் சத்தத்தை (ஆவியில்) கேட்டு வெளியே வந்தததையும் பார்க்கிறோம். இந்த அற்புதம் யாரும் செய்யமுடியாத அற்புதம்.

Related Posts