Menu Close

குஷ்டரோகியை குணப்படுத்தினார்

மத்தேயு 8 :1 – 4; மாற்கு 1 : 40 – 44; லூக்கா 5 : 12 – 14

குஷ்டரோகியின் வேண்டுகோள்:

மத்தேயு 8 : 1, 2 “ இயேசு  மலையிலிருந்து  இறங்கின  போது,  திரளான  ஜனங்கள்  இயேசுவுக்குப் பின்சென்றார்கள். குஷ்டரோகி  ஒருவன்  வந்து  இயேசுவைப்  பணிந்து:  ஆண்டவரே  உமக்குச்  சித்தமானால்,  என்னைச்  சுத்தமாக்க  உம்மால் ஆகும் என்றான்.”

இயேசு  மலைப்பிரசங்கம்  செய்து விட்டு  மலையிலிருந்து  இறங்கிய போது திரளானஜனங்கள்  இயேசுவுக்குப்  பின்  சென்றனர்.  இயேசு  இந்த 8ம்  அதிகாரத்தில்  அநேக  அற்புதங்கள்  செய்ததைப் பார்க்கிறோம்.  இது  எதைக்  காண்பிக்கிறதென்றால்  அவர்  மேசியா  என்றும்,  தேவகுமாரன்  என்றும்  இதன்  மூலம்  விளங்கப்  பண்ணினார். அதனால்  இயேசுவின்  பின்னால்  திரளான  ஜனங்கள்  பின்  சென்றனர் (யோவான் 6 : 2). பரிசேயர்கள்  இயேசுவை  மேசியா  அல்ல  என்றனர் (1கொரிந்தியர் 1 : 22).  இயேசு  மேசியா  என்று  தெரிவதற்கு  அத்தனை  அற்புதங்களை  செய்தார். அப்பொழுது  குஷ்டரோக வியாதியால்  பாதிக்கப்பட்ட  ஒருவன்  இயேசுவைப்  பற்றி  அறிந்திருந்ததால் இயேசுவைப்  பார்த்து  ஆண்டவரே  என்று  அழைத்து “உமக்குச் சித்தமானால் என்னைச்  சுத்தமாக்க  உம்மால்  ஆகும்”. என்று  கூறுகிறான்.  

மாற்கு 1 : 40 ல்  இயேசுவுக்கு  முன்னால் முழங்கால்  படியிட்டு  தன்  இயலாமையை  அறிக்கையிட்டதைப் பார்க்கிறோம்.  அந்தக்காலத்தில்  குஷ்டரோகி  அவ்வாறெல்லாம்  வெளியே  வரமுடியாது.  ஏனென்றால்  மோசே கூறின  சட்டம்  அவ்வாறுள்ளது.  பிரமாணம்  அவனைத்  தடுத்தாலும்,  கலாச்சாரம்  அவனைத்  தடுத்தாலும்  குஷ்டரோகி  துணிந்து  இயேசுவிடம்  போவேன்  என்று  விசுவாசத்துடனும்,  நம்பிக்கையுடனும் வந்தான்.  ஆண்டவருடைய சித்தம்  என்னவென்றால் 1 தெசலோனிக்கேயர் 4 : 3 ல்  “நீங்கள் பரிசுத்தமாக வேண்டுமென்பதே தேவனுடைய  சித்தமாயிருக்கிறது.” என்றும் 5 : 18 ல்  “எல்லாவற்றிலேயும்  ஸ்தோத்திரம்  ……செய்வதே தேவனுடைய  சித்தமாயிருக்கிறது.” என்றும்  பார்க்கிறோம். குஷ்டரோக  வியாதி  மிகவும்  கொடிய  வியாதி. மற்றவர்களுக்குத்  தொற்றக்கூடியது. 

எனவேதான்  லேவியராகமம் 13 : 45, 46 ல்  குஷ்டரோகியை  யாரும்  தொடக்கூடாது  என்றும், தொட்டு  விட்டால் அவன்  ஏழு நாட்கள்  தீட்டுப்பட்டிருப்பான்  என்றும், தீட்டுப்பட்டவன்  தேவாலயத்துக்குள் வரமுடியாதென்றும்  கூறப்பட்டிருக்கிறது. குஷ்டரோகி என்ன  பண்ண  வேண்டுமென்றால்  தன்  தலையை  மூடாதவனாய்  அவனுடைய தாடியை  மூடிக்கொண்டு  தீட்டு தீட்டு  என்று  சத்தமிட  வேண்டும். அப்போது குஷ்டரோகி  வருகிறான்  என்று  மற்றவர்கள்  அறிந்து  கொள்வார்கள். இவனுடைய  பெயரை  ஆலயத்தின்  பதிவேட்டிலிருந்து கிறுக்கிப்  போடுவார்கள் அவனைப் பாளையத்திற்கு  வெளியே  தனியே  இருக்கச்  செய்வார்கள்  என்று பழையஏற்பாட்டில்  கூறப்பட்டிருக்கிறதைப்  பார்க்கிறோம். 

இயேசு தொட்டு சுகமாக்கினார்:

மத்தேயு 8 : 3 “ இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்கு சித்தமுண்டு, சுத்தமாகு  என்றார். உடனே  குஷ்டரோகம்  நீங்கி  அவன்  சுத்தமானான்.”

குஷ்டரோகியை அவனுடைய  மனைவி  பிள்ளைகள் கூடத்  தொட மாட்டார்கள் ஆனால்  இயேசு அந்த மனிதனைத் தன்னுடைய  பரிசுத்தமான கரங்களால் தொட்டு  “எனக்குச்  சித்தமுண்டு சுத்தமாகு” என்றார்  அவன்  இயேசுவின்  சித்தத்தை சந்தேகப்பட்டான்.  இயேசுவுக்குத் தன்னைக் குணமாக்க  விருப்பமுண்டா  என்று  சந்தேகப்பட்டான். இன்றும்  அநேகர்  அதேபோல்  தான் சந்தேகப்படுகின்றனர். ஆனால்  இயேசு  தொட்டவுடன்  குஷ்டரோகம்  நீங்கி  சுத்தமானான். இரண்டு  குருடர்கள்  தாவீதின்  குமாரனே  எங்களுக்கு  இரங்கும்  என்று  இயேசுவை  நோக்கிக்  கூப்பிட்ட  போது  இயேசு  அவர்களுடைய  கண்களைத்  தொட்டார்.  உடனே  அவர்களுடைய  கண்கள்  திறக்கப்பட்டது  என்று  மத்தேயு  9 :  30  ல்  பார்க்கிறோம்.  இயேசு  இதில்  பழையஏற்பாட்டுப் போதனையை  மாற்றினார்  

2 கொரிந்தியர் 5 : 21  ல் நமக்காகப்  பாவமறியாத  அவர்  பாவமானார்  என்றிருப்பதைக்  காண்கிறோம். ஆனால்  அவர்  தீட்டுப்படவில்லை. எலிசா  குஷ்டரோகியான  நாகமானைத்  தொடவில்லை.  மூழ்கு என்று மட்டும்  கூறினார். கிறிஸ்துவுக்குள்ளிருந்த  வல்லமையானது  குஷ்டரோக வியாதியை  மாற்றக்கூடியதாக  இருந்தது. அந்த வல்லமையினால்  குஷ்டரோகக்  கிருமிகளை அழித்து,  பரிபூரண  சுகம்  கிடைக்கச்  செய்தார்.  அவனுடைய  வியாதி  நீங்கியதால்  அவன்  தன் குடும்பத்தாருடன்  சேர்க்கப்  பட்டான். தேவனுடைய குடும்பத்திலும்  இணைக்கப்பட்டான். தேவாலயத்தின்  பதிவேட்டில்  நீக்கப்பட்ட அவனுடைய  பெயர்  சேர்க்கப்பட்டது. எந்தப்பாவியும்  இயேசுவிடம்  வந்தால்  அவர்களுடைய  பாவங்களை  இயேசு  மன்னிப்பார். அதேபோல் இயேசு  தொடாமல்  அவருடைய  வஸ்திரத்தை  அவருக்குத்  தெரியாமல்  தொட்ட  பெரும்பாடுள்ள  ஸ்திரீ  குணமடைந்ததை மாற்கு 5 : 27 – 29 ல்  பார்க்கிறோம். 

இயேசு காணிக்கையை செலுத்தக் கூ றினார்:

மத்தேயு 8 : 4 “ இயேசு அவனை நோக்கி: இதை நீ ஓருவருக்கும்  சொல்லாதபடி  எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச்  சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக்  காண்பித்து, மோசே கட்டளையிட்ட  காணிக்கையைச்  செலுத்து  என்றார்.”

இயேசுகிறிஸ்து  அவனைக்  குணமாக்கிய  பின்  அதை யாரிடமும் கூற வேண்டாமென்று  அவனிடம்  கூறினார். அவ்வாறு  சொல்லியும்  இயேசுவின்  கீர்த்தி  அதிகமாய்ப்  பரவிற்று  (லூக்கா 5 : 15, மத்தேயு : 24).  ஆனால்  இந்த  சாட்சியை ஆசாரியனிடம் போய்க்  காண்பிக்கக்  கூறினார். ஏனென்றால் லேவியராகமம் 14 ம்  அதிகாரத்தில் குஷ்டரோகி  ஒருவன்  குஷ்டரோகம்  நீங்கினால்  என்ன  செய்ய வேண்டுமென்று சில  கட்டளைகளை  மோசேயின்  மூலமாகத்  தேவன்  கொடுத்திருக்கிறார். அதை  அந்தக்  குஷ்டரோகி செலுத்தும்படி  இயேசு  கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.  இதிலிருந்து  இயேசு பழையஏற்பாட்டிலுள்ள  மோசேயின்  மூலம்  கர்த்தர் கொடுத்த  சட்டங்களுக்கு மதிப்பளித்ததைக்  காண்கிறோம். நமக்கும்  இயேசு  கைகளை  வைத்து  ஜெபிக்கும்  அதிகாரத்தைக்  கொடுத்திருக்கிறார். நம் மீது அபிஷேகம் நிறைவாக இருக்குமென்றால், நம்மிலிருக்கிற வல்லமை  அவர்களை  மேற்கொள்ளுமே  தவிர  அவர்களுக்குள்ளிருக்கிற  எந்த வல்லமையும்  நம்மைத்  தொட முடியாது. ஆனால்  தகுதியில்லாதவர்களாக இருந்தால்  அவர்களின்  மேலிருக்கிற  தீய  வல்லமை  நம்மேல்  வருவதற்கு வாய்ப்பு  உண்டு. ஆகவே  மற்றவர்கள்  மேல்  கைகளை  வைப்பதற்கு  எச்சரிக்கையாயிருங்கள். இன்றைக்கும்  கர்த்தர்  நம்மைத்  தொட்டு  அற்புதம்  செய்ய விரும்புகிறார். 

 இயேசுவின்  தொடுதல்  ஊமையைப்  பேச  வைக்கிறது. செவிடர்களைக் கேட்க வைக்கிறது. மரித்தோரை  உயிரோடு  எழுப்புகிறது. நடக்க  முடியாதவர்களை நடக்க  வைக்கிறது. குஷ்டரோகிகளைக்  குணமாக்குகிறது. பிசாசுகளை ஓட ஓட விரட்டுகிறது. அதேபோல்  கிறிஸ்துவின்  தொடுதல்  நம்முடைய  வாழ்க்கையை மாற்றி  விடும். ஆகவேதான்  மனுஷனை  உருவாக்கும்  போது வார்த்தையினால் உருவாக்காமல்,  மண்ணை  எடுத்து  வனைந்து  உருவாக்கினார். இன்றைக்கும் இயேசு  அவருடைய  கரத்தை  நம்முடைய  கரத்தோடு இணைத்து  ஜனங்களைத்  தொட  விரும்புகிறார். வேதத்தில்  மோசேயின்  சகோதரி  தற்காலிகமாக  குஷ்டரோகியாக  இருந்து  சுகம்  பெற்றதையும்,  நாகமான்  என்ற சீரிய ராஜாவின்  படைத்தலைவன்  எலிசா தீர்க்கதரிசியின்  சொல்படி  செயல்பட்டு  குஷ்டரோகம்  நீங்கியதையும்,  பழையஏற்பாட்டில் பார்க்கிறோம். நாமும்  இயேசுவிடம்  நம்மைத்  தொட்டு  ஆசியளிக்க  வேண்டுவோம்.  ஆமென்.

Related Posts