பெந்தேகோஸ்தே நாளில் கூடிய கூட்டம்:
அப்போஸ்தலர் 2 : 1 “பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.”
யூதர்களின் வருஷத்தில் இரண்டாவது பெரிய திருவிழா பெந்தேகோஸ்தே பண்டிகையாகும். பெந்தேகோஸ்தே என்பது ஐம்பதாவது நாள் என்று பொருள். கதிர் அசைவாட்டும் நாளுக்கு அடுத்த ஐம்பதாவது நாளன்று புதிய ஆகாரபலி செலுத்தும் சிறப்பு வழிபாடு தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெற்றது (லேவியராகமம் 23 : 15, 16). இந்த நாளில்தான் ஆவியானவரின் அபிஷேகம் பழைய ஏற்பாட்டில் முதன்முதலில் அருளப்பட்டது. இந்தப் பண்டிகையானது உலகத்தின் ஆத்துமாக்களைத் தேவனுக்கு அறுவடை செய்யும் ஆரம்பத்தில் அடையாளமாக உள்ளது. கர்த்தருடைய பிள்ளைகள் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் கண்டிப்பாகப் பெறவேண்டும். கர்த்தருடைய பிள்ளைகளிடையில் ஒருமனமும், ஒற்றுமையும் காணப்படுமிடத்தில் ஆவியானவரின் செயல்கள் அதிகமாகக் காணப்படும். இதேபோல் அப்போஸ்தலர் 1 : 14 லும் சீஷர்களெல் லாரும் ஸ்திரீகளோடும், இயேசுவின் தாயாகிய மரியாளோடும் அவருடைய சகோதரரோடுங் கூட ஒரேமனதுடன் ஜெபத்தில் தரித்திருந்தார்கள். அப்பொழுது காற்று அடிக்காமல், காற்று அடிப்பதைப் போன்ற சத்தம் அவர்கள் இருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
ஆவியானவரின்அபிஷேகம்: அப்போஸ்தலர் 2 : 3, 4 “அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். அப்பொழுது அக்கினிமயமான நாவுகள் போல நாவுகள் காணப்பட்டன.
மத்தேயு 3 : 11 ல் …. அக்கினி அபிஷேகம் என்று தனியான ஒரு அபிஷேகம் வேதத்தில் இல்லை. அங்கு கூடியிருந்த அனைவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டனர். யோவான்ஸ்நானன்
மத்தேயு 3 : 11 “மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.”
இயேசு எடுத்துக் கொள்ளப்படுவதெற்கு முன் சீஷர்களுக்குக் கொடுத்த கட்டளை என்னவென்றால் “நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் ஆவியானவர் உங்களிடத்தில் இறங்கி வருகிற வரையிலும் எருசலேம் நகரத்தில் காத்திருங்கள்.” என்றார். இயேசுவின் கட்டளைப்படி எருசலேமில் ஆண்களும் பெண்களும் 10 நாட்கள் மேல்வீட்டரையில் உபவாசத்தோடு காத்திருந்து, தீவிரமாக ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தனர். அங்கிருந்த அனைவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டனர். பரிசுத்த ஆவி நமக்குள் வருவது முதல் அனுபவம். நம்மேல் வருவது இரண்டாவது அனுபவம். இது யோவேல் 2 : 28, 29 ல் “நான் மாம்சமான யாவர் மேலும் ஆவியை ஊற்றுவேன்.” என்று தேவனால் கொடுக்கப்பட்ட நிறைவேறுதலின் ஆரம்பமாயிருந்தது. இதனால் சீஷர்கள் ஆவியினால் நிறைந்த ஊழியர்களானார்கள். சீஷர்கள் மற்றவர்களை மனந்திரும்பச் செய்தது மட்டுமல்லாமல், பெந்தேகோஸ்தே நாளில் தாங்கள் பெற்ற அதே ஆவியை, மனந் திரும்பிய புது விசுவாசிகள் பெற்றுக் கொள்ளவும் வழி காட்டினார்கள். இது தான் அப்போஸ்தலர்கள் ஊழியத்தின் திறவுகோலாயிருந்தது. அதன்பின் பேதுரு பிரசங்கம் பண்ணியபோது ஒரே பிரசங்கத்தில் 3000 பேர் இரட்சிக்கப்பட்டனர். பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் தருபவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான். பிதாவானவர் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவருக்குள் (லூக்கா 11 : 13) கிறிஸ்து ஞானஸ்நானம் தருகிறார். இரட்சிப்பு என்பது ஒருவன் ஆவியானவரின் ஏவுதலால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதாகும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளுகிறவன் அப்பொழுது கிறிஸ்துவின் சரீரத்துக்குள் (சபைக்குள்) ஆவியானவரால் ஞானஸ்நானம் பெறுகிறான் (1கொரிந்தியர் 12 : 13). பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் தருவதும், பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் தருவதும் ஒன்று தான். அப்பொழுதிலிருந்து ஆவியானவரின் காலம் தொடங்கியது. இதற்கு முந்தி இயேசு வந்தபின் இயேசுவின் காலம். அதற்கு முந்தி பிதாவின் காலம். பரிசுத்த ஆவியானவர் இறங்கினபின் அப்போஸ்தலர்கள் கைகளினால் அநேக அற்புதங்களும், அடையாளங்களும் நடந்தது. அப்போஸ்தலர் 5 : 15 ல் அவர்களுக்குள் இருந்த அபிஷேகம் பிணியாளிகளைக் குணமாக்கியது. மரித்தவர்களைக்கூட எழுப்பினர்.
தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரென்று எபிரேயர் 12 : 29 லும், ஏசாயா 10 : 17 ல் தேவன் அக்கினிஜ்வாலையுமானவர் என்றும், வெளிப்படுத்தல் 1 : 14 ல் தேவனது கண்கள் அக்கினி ஜ்வாலையைப் போலிருந்தது என்றும், ஏசாயா 30 : 27 ல் அவரது நாவு பட்சிக்கிற அக்கினி என்றும், எசேக்கியேல் 1 : 27 ல் அவரது இடுப்பின் கீழ் அக்கினிமயமாயிருந்தது என்றும், அவர் அமர்ந்திருக்கிற சிங்கா சனம் அக்கினிஜ்வாலையாயிருந்தது என்று தானியேல் 7 : 9 லும் , அக்கினி நதியானது அவருடைய சந்நிதியிலிருந்து புறப்படுகிறது என்று தானியேல் 7 : 10 லும், 2சாமுவேல் 22 : 9 ல் அவரது வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது என்றும், வேதத்தில் பார்க்கிறோம். அக்கினி என்பது வல்லமையைக் குறிக்கி றது. தேவனின் அக்கினியை இரண்டாகப் பிரிக்கலாம். பாவம் நிறைந்தவர்களு க்கு பட்சிக்கும் அக்கினியாய் செயல்படுகிறார். பரிசுத்தவான்களுக்கு பாதுகாக் கும் அக்கினியாய், பிரகாசிக்கச் செய்யும் அக்கினியாய் செயல்படுகிறார். பரிசுத்த அக்கினி நமக்குள் செயல்பட தேவனோடு ஆழமான ஐக்கியம் கொள்ள வேண்டும்.
பரிசுத்த ஆவியானவர் இறங்குகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அக்கினி இறங்குகிறார் என்று கூறக் கூடாது. 1கொரிந்தியர் 3:16 ல் பவுல் கூறியிருப்பது போல நாம் தேவனுடைய ஆலயமாகவும், தேவனுடைய ஆவி நம்மில் வாசமு மாயுமிருக்கிறது. 2இராஜாக்கள் 1 :12 ல் எலியா தீர்க்கதரிசி கூற்றின்படி அக்கினி இறங்கினால் அழித்து விடும். பரிசுத்த ஆவியில் நிரம்பி ஜெபம் பண்ணுகிற தற்கும், பரிசுத்த ஆவியில்லாமல் ஜெபம் பண்ணுகிறதற்கும் வித்தியாசம் உண்டு. பரிசுத்த ஆவியில் நிரம்பி பிரசங்கம் பண்ணுவதற்கும், பரிசுத்த ஆவியில்லாமல் பிரசங்கம் பண்ணுவதற்கும் வித்தியாசம் உண்டு. ஆவியானவர் கொடுத்துக் கொண்டிருந்த பல மொழிச் சொற்களை அவர்கள் பேசத்தொடங்கினார். புதிய ஏற்பாட்டுக் காலத்தில் ஞானஸ்நானம் பெறும் ஒவ்வொரு விசுவாசிக்கும், அந்நிய மொழியில் பேசுவதற்கான சொற்களைத் தருகிறார்.
அப்போஸ்தலர் 10 44 – 46 ல் புறஜாதி மனுஷனான கொர்நேலியு வீட்டில் பேதுரு பிரசங்கித்தபோது வசனத்தைக் கேட்ட அனைவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கி, அவர்கள் பல பாஷைகளைப் பேசினதைப் பார்க்கி றோம். தேவன் மாறாதவர். அவருடைய செயல்கள் மாறுவதில்லை. எனினும் வாஞ்சையுடன் கேட்கும் ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளைக்கும் இந்த அனுபவம் கிடைக்கிறது. (ஏசாயா 26 : 11, 12, மாற்கு 16 : 17, அப்போஸ்தலர் 2 : 23, 8 : 18). நியாயப்பிரமாண காலத்தில் அக்கினியானது பலியைப் பட்சிக்க வந்த போது, கிருபைப் பிராமண காலத்திலோ கிறிஸ்துவில் பலியை முற்றிலும் அங்கீகரித்ததின் நிறைவான வெளிப்பாடாகவும் , ஆவியானவர் இறங்கியதின் அடையாளமாகவும் உள்ளது. பரிசுத்த ஆவியானவரின் அக்கினி நமக்குள் அக்கினிமயமான நாவுகள் இறங்கிய காட்சியை அன்றைய மக்கள் தரிசித்தனர். இது ஒரு அபூர்வ நிகழ்ச்சி. நாமும் இதேபோல் ஆவியில் நிரம்பி ஜெபம் பண்ணி கர்த்தரின் ஆசியைப்பெற வாஞ்சிப்போம். ஆமென்.