விபச்சார ஸ்திரீயை இயேசுவிடம் கூட்டி வந்தனர்:
யோவான் 8 : 2 – 6 “அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றஞ்சுமத்து வதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.”
விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, போதகரே என்று மிகுந்த மரியாதையோடு இயேசுவை அழைத்து, அந்த ஸ்திரீயை அவருக்கு முன்பாக நிறுத்தினார்கள். விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டு அழைத்து வந்திருப்பதாகக் கூறினார்கள். . இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் கட்டளையிட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்கள். இந்த யூதர்களின் நோக்கம் பாவத்தில் பிடிபட்ட அந்த ஸ்திரீயைத் தண்டிப்பது மட்டுமல்ல, கிறிஸ்துவை ஒரு கண்ணியில் அகப்படுத்த வேண்டுமென்று திட்ட மிட்டுச் செயல்படுகிறார்கள். இது வேதபாரகர், பரிசேயரின் கபடமான திட்டம். அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள்.
லேவியராகமம் 20 : 10 ல் “ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.”
உபாகமம் 22 : 22 “புருஷனுக்கு விவாகம்பண்ணப்பட்ட ஸ்திரீயோடே ஒருவன் சயனிக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஸ்திரீயோடே சயனித்த மனிதனும் அந்த ஸ்திரீயும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்.”
இவைகள் வேதத்தில் தேவன் கொடுத்த சட்டங்கள். நியாயப் பிரமாணத்தின் விதி முறைப்படி விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆணும், பெண்ணும் இருவருமே தண்டிக் கப்பட வேண்டும். இவர்கள் பாவம் செய்த ஆணைக் கூட்டிவரவில்லை. பெண்ணை மட்டும் கூட்டி வந்திருந்தனர். மோசேயின் நியாயப்பிரமாணத்துக்கு எதிரான நியாயத்தீர்ப்பு கிறிஸ்துவிடம் வெளிப்படுதா என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
இயேசுவின் கரம் எழுதிய தீர்ப்பு:
யோவான் 8 : 7 –9 “அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்து கொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொரு வராய்ப் போய் விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.”
இயேசுவைச் சுற்றிலும் திரளான ஜனங்கள் நின்றுகொண்டு அவர்கள் பிடித்துக் கொண்டுவந்த பெண்ணை நியாயந்தீர்க்கும்படியாக, கிறிஸ்து என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்கு அறிந்த இயேசு, எந்தப் பதிலும் சொல்லாமல் குனிந்து தரையில் ஏதோ எழுதிக் கொண் டிருந்தார் என்று வேதம்சொல்லுகிறது. பாவத்தைப் பார்க்காத, பாவமே செய்யாத, பரிசுத்தரான இயேசு, பாவத்தில் பிடிக்கப்பட்ட பெண்ணைப் பாவம் நிறைந்த மனிதர்கள் சூழ்ந்து கொண்டு நியாயந்தீர்க்க முற்படுவதை, இயேசு ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் என்ன எழுதினார் என்று வேதத்தில் சொல்லப் படவில்லை. யூதத்தலைவர்கள் மறுபடியும் மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். கிறிஸ்துவின் அமைதி அவர்களை மேலும் கோபத்துக்குள்ளாக்கியது. இயேசு கிறிஸ்து நிமிர்ந்து அங்குள்ளவர்களை ஒரு பார்வை பார்த்தார். அந்தப் பார்வை அந்த ஸ்திரீ செய்த பாவம் தண்டனைக் குரியது என்பதை அங்கீகரித்தாகவுள்ளது. அதன்பின் கிறிஸ்து தன் வாயால் உங்களில் பாவமில்லாதவன் முதலில் அவள் மீது கல்லெறியட்டும் என்றார். மோசே உபாகமம் 4 : 31 ல் “அவருடைய இரக்கங்கள் மகா பெரியது” என்றார்.
எரேமியா 17 : 1 ல் “யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியிலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.”
வேதத்தில் தேவன் யூதாவைப் பற்றி எழுதியதை இந்த ஒரு இடத்தில்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து கூறிய வார்த்தை அவர்களைத் திகில டையச் செய்து குற்றம் சுமத்தியவர்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து புறப்பட்டுப் போனார்கள். அங்கு குற்றம் சொன்ன எல்லோரும் இயேசுவை விட்டு விலகிச் சென்றனர். மற்றவர்கள்மேல் குற்றம் சாட்டுகிறவர்கள் தங்கள் குற்றமற்றவ ர்களாக இருக்க வேண்டும். போனவர்கள் பாவ உணர்வடைந்து சென்றதாகச் சொல்லப்படவில்லை. இதைத்தான் மலைப் பிரசங்கத்தில் இயேசு
மத்தேயு 7 : 2 – 5 “ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.”
என்றார். இயேசு மீண்டுமாக நிமிர்ந்து பார்த்தபோது அந்த ஸ்திரீயைக் குற்றம் சுமத்தியவர்கள் ஒருவரும் அங்கு இல்லை. அந்தப் பெண்ணோ பயத்தோடும், கலக்கத்தோடும் நின்று கொண்டிருந்திருப்பாள்.
இயேசு கொடுத்த பாவமன்னிப்பு:
யோவான் 8 : 10,11 “இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ் சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.”
இயேசு கிறிஸ்து திரும்பவும் அந்த ஸ்திரீயோடு பேச ஆரம்பிக்கிறார். “உன்னைக் குற்றப்படுத்தின எல்லோரும் போய் விட்டார்களே, ஒருவனும் உன்னை விபச் சாரம் என்ற பாவத்தைச் செய்த குற்றவாளி என்று தீர்க்கவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவள் “இல்லை ஆண்டவரே” என்றார். உடனே இயேசு அவளை ஆக்கினைக்குட்படுத்தாமல் “நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே” என்றார். கிறிஸ்து இந்த உலகத்தை நியாயந்தீர்க்கும்படி அனுப்பப்படவில்லை (யோவான் 3 : 17). பாவியாகிய ஒரு ஸ்திரீ கிறிஸ்துவின் பாதங்களில் பரிமளத்தைலம் பூசிய போது இயேசு அவளிடம் “இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே என்றார்”. ஆனால் இயேசு இந்தப் பெண்ணிடம் “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது ” என்று கூறவில்லை. ஏனென்றால் அந்த ஸ்திரீ இன்னும் மனந்திரும்பவில்லை. இயேசுவிடம் மன்னிப்பும் கேட்கவில்லை. கிறிஸ்து பாவத்தைப் பாராதுபோல் விட்டுவிட மாட்டார். கடைசி நியாயத்தீர்ப் பில் அறிக்கையிடாத நம்முடைய பாவங்கள் எல்லாம் புத்தகத்தில் எழுதப்பட்டு அவருக்கு முன்பாக வெளிப்படுத்தப்படும். அந்தநாளில் யாரும் இரக்கம் பெறுவ தில்லை. கர்த்தர் நியாயப்பிரமாணம் முழுவதையும் யாத்திராகமம் 32 : 16 ல் தமது கரத்தினால் எழுதிக் கொடுத்தார். 1 நாளாகாமம் 28 : 19ல் தாவீது கர்த்தருக்கென்று மகிமையான ஆலயம் ஒன்றைக் கட்ட நினைத்தபோது கர்த்தர் அந்த ஆலயத்தின் மாதிரியை தன்னுடைய கரத்தினால் எழுதிக் கொடுத்தார்.
நாமும் நம்முடைய சகோதரர்கள் பாவம் செய்தால் அதை மன்னிக்க வேண்டுமென்று இயேசு தன்னுடைய மலைப்பிரசாங்கத்தில் கூறியுள்ளார் (மத்தேயு 7 : 1 – 5). பவுலோ,
ரோமர் 2 : 1 “ ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.” என்றார்.
எனவே யாரையும் குற்றம் சொல்லா மலும், நியாயந்தீர்க்காமலும் இருக்கப் பிரயாசப்படுவோம். இன்றும் இயேசுவின் கரங்கள் ஜீவ புத்தகத்தில் எழுதிக் கொண்டிருக்கிறது. ஜீவபுஸ்தகத்தில் எழுதப் பட்டவர்கள் மட்டுமே பரலோகத்தில் பிரவேசிக்க முடியுமென்று வெளிப்படுத்தல் 21 : 27 ல் பார்க்கிறோம். நாம் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு இரட்சிக்கப்படும்போது நம்முடைய பெயரை ஜீவ புத்தகத்தில் எழுதுகிறார். ஆமென்.
- பெல்ஷாத்சார் ராஜாவுக்கு தேவன் நியாயத்தீர்ப்பை கரத்தினால் எழுதினார்:
பெல்ஷாத்சார்:
நேபுகாத்நேச்சாருக்குப் பின் அவருடைய ஒரே மகன் கொஞ்சகாலம் தான் ஆட்சி செய்தான். அவன் அகால மரணமடைந்ததினால் அவனுக்குப்பின் நேபுகாத் நேச்சாருடைய மகளை மணந்த நம்போனிடஸின் (nambonidus) மகனான பெல்ஷா த்சாரை ஆட்சியில் அமரச் செய்தான். நேபுகாத்நேச்சாரின் பேரன் தான் பெல்ஷாத் சார். பெல்ஷாத்சார் சரித்திரத்தில் வித்தியாசமானவனாகக் காணப்பட்டான். பாபிலோனிய ராஜ்ஜியத்தின் பொன்னான ஆட்சி காலம் பெல்ஷாத்சாரோடு முடிவடையப் போகிறது. எரேமியா தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனமானது இந்த ராஜாவோடு நிறைவேறப்போகிறது (எரேமியா 27 : 6, 7). பெல்ஷாத்சாருக்கு தேவனளித்த நியாயத்தீர்ப்பைப் பார்க்கலாம்.
பெல்ஷாத்சார் அளித்த விருந்து:
தானியேல் 5 : 1 “பெல்ஷாத்சார் என்னும் ராஜா தன் பிரபுக்களின் ஆயிரம் பேருக்கு ஒரு பெரிய விருந்துசெய்து அந்த ஆயிரம் பேருக்கு முன்பாகத் திராட்சைரசம் குடித்தான்.”
பெல்ஷாத்சார் ராஜா தன்னுடைய பிரபுக்கள் ஆயிரம் பேருக்கு ஒரு பெரிய விருந்து செய்தான். அந்த விருந்தில் ஆயிரம் பேருக்கு முன்பாக ராஜா திராட்ச ரசம் குடித்தான். இது தேசத்தின் முன்னேற்றத்திற்காகக் கூட்டின கூட்டமல்ல. பாபிலோனை எவ்வாறு மேன்மைப்படுத்த வேண்டும் என்பதற்குக் கூட்டின கூட்டமுமல்ல. ராஜா தன்னை மேன்மைப்படுத்தி, தன்னை மகிமைப்படுத்தும்படி இந்த விருந்தைச் செய்தான். ஒரு மனிதன் தன்னுடைய சுய விளம்பரத்துக்காக எதைச் செய்தாலும் அது நாசத்திலும், மோசத்திலும், வேதனையிலும் தான் முடியும். மேதியப் படையானது பட்டணத்தில் நுழைந்திருக்கும் வேளையில் இந்த விருந்து நடக்கிறது. இந்தப் பட்டணம் யாராலும், எவராலும் கைப்பற்ற முடியாது என்ற எண்ணத்தில் ராஜா இருந்திருக்க வேண்டும். பட்டணத்தைச் சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்திருக்கிறார்கள் என்றறிந்த பின்பும், இந்த விருந்தை ராஜா செய்தான்.
பெல்ஷாத்சார் போட்ட கட்டளையும், செய்ததும்:
தானியேல் 5 : 2 — 4 “பெல்ஷாத்சார் திராட்சரசத்தை ருசித்துக் கொண்டிருக்கையில், அவன் தன் தகப்பனாகிய நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களில், ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டு வரும்படி கட்டளையிட்டான். அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களைக் கொண்டு வந்தார்கள்; அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள். அவர்கள் திராட்சரசம் குடித்து, பொன்னும் வெள்ளியும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தார்கள்.”
பெல்ஷாத்சார் ராஜா தன்னுடைய மனைவிமார்களையும், தன்னுடைய வைப்பாட்டிகளையும் அந்த விருந்தில் கலந்து கொள்ளச் செய்து, மதிமயங்கி, பாவசேற்றுக்குள் போவதற்குக் காரணமானான். நீதிமொழிகள் 23 : 31 ல் மதுபான த்தை பார்க்கக்கூடாது என்றுள்ளது. அதேபோல் ஆபகூக் 2 : 15 ல் மதுபானம் குடிக்கிறவர்களை “ஐயோ” என்று கூறுகிறது. தேவாலயத்துப் பாத்திரங்களைத் தவறாகவும், இழிவாகவும் பயன்படுத்துவது தேவனை அவமதிப்பதாகும். ராஜா வின் தாத்தாவான நேபுகாத்நேச்சார் எருசலேமைக் கைப்பற்றியபோது தேவனை அறியாத ஒரு மனிதனாக இருந்தான். அந்தப் பட்டணத்தை முற்றுகையிட்டு, சாலமோன் தேவாலயத்தில் வைத்திருந்த பொற் பாத்திரங்களை எல்லாம் தன்னுடைய ஆலயத்துக்குக் கொண்டு வந்தான். ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் அந்த அபிஷேகம் பண்ணப்பட்டு, வேறு பிரிக்கப்பட்ட பாத்திரங்கள் அங்கேயே இருந்தது. தேவனைக் குறித்த அறிவுக்குள் நேபுகாத்நேச்சார் வந்தபின் அதைத் தனியாகப் பத்திரமாக வைத்து விட்டான்.
கர்த்தருடைய உபயோகத்துக்கு மாத்திரமே பயன்படுத்தக் கூடிய பாத்திரங்கள். அந்தப் பாத்திரங்களை பெல்ஷாத்சார் கொண்டு வரும்படி கட்டளையிட்டான். அந்தப் பாத்திரங்களில் திராட்சை ரசத்தை ஊற்றி அனைவரும் குடித்தார்கள். பெல்ஷாத்சார் தேவனுடைய பரிசுத்த பாத்திரங்களை ஈடுபடுத்தியது ஜீவனுள்ள தேவனுக்கு எதிராக வேண்டுமென்றே செய்யப்பட்ட அகந்தையான செயலாகும். தனது செயலினால் அந்தப் பாத்திரங்களை அசுசிப்படுத்துகிறான். நம்முடைய ஒவ்வொரு அவயங்களும் ஆண்டவர் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்கள் தான். நாம் தேவனுடைய பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாக இருக்கிறோம் என்று வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஒரு அவயத்தைக் கூடத் தவறாக பயன்படுத்தினால், தேவன் அதற்குக் கேள்விகள் கேட்பார். மேலும் பெல்ஷாத்சார் கொடுத்த விருந்தில் அவர்கள் குடிவெறியில் கல்லும் மண்ணுமான தேவர்களைப் புகழ்ந்தனர். ஆண்டவர் வெறுக்கிற ஒரு பாவம் விக்கிரகாராதனை. தேவன் ஒருபோதும் தன்னுடைய மகிமையை விக்கிரகங்களுக்குப் போக விடுவதில்லை.
தேவனது நியாயத்தீர்ப்பு:
தானியேல் 5 : 5 “அந்நேரத்திலே மனுஷ கைவிரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்த கையிருப்பை ராஜா கண்டான்.”
தேவன் பெல்ஷாத்சாரோடு சொப்பனத்தின் மூலமாகவோ தரிசனத்தின் மூலமாகவோ பேசவில்லை. தேவனைத் துக்கப்படுத்தும் செய்கைகளைத் தேவன் பொறுத்துக் கொள்ளாமல், ஆண்டவருடைய கைவிரல்கள் தோன்றி சுவரில் எழுத ஆரம்பித்தது. ஒரு நீதியுள்ள நியாயாதிபதி நியாயத்தீர்ப்பை எழுதுவது போல, தேவனுடைய கைவிரல் எழுதினது. ராஜா அதைப் பார்த்தார். சுவரில் எழுதிய அந்த எழுத்து வாக்குத்தத்தமான ஒரு வார்த்தையுமல்ல, ஆசீர்வாதமான வார்த்தையுமல்ல. தேவனுடைய கோபாக்கினையில் வந்த நியாயத்தீர்ப்பு. அப்பொழுதும் ராஜா தேவாலயத்திலுள்ள பரிசுத்தமான பொற்பாத்திரங்களை தான் எடுத்ததும் ஒன்றான மெய்தேவனை அவமதித்ததும் தவறு என்பதை உணரவில்லை. ராஜா தேவனின் இறுதியான நியாயத்தீர்ப்பைத் தானே வருவித்துக் கொண்டான். தேவன் அன்பு நிறைந்தவர் மட்டுமல்ல, பயங்கரமுமானவர் என்பதை ராஜா அறியவில்லை.
ராஜாவின் கலக்கம்:
தானியேல் 5 : 6 “அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனை கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டது.”
சுவரில் எழுதப்பட்ட நான்கு சொற்களைப் பார்த்த ராஜாவின் முகம் வேறுபட்டது. கலங்கினான். அதற்குக் காரணம் போரின் உச்சகட்டத்தில் தேசம் இருந்ததால் தனக்கு என்ன நேரிடுமோ என்ற அச்சம் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும். தேவனே இந்த பயத்தை உண்டாக்கியிருக்கவும் கூடும். தேவன் பயங்கரமானவர். அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது. அவனுடைய முழங்கால்கள் நடுங்கி ஒன்றையொன்று மோதின. சரித்திர ஆசிரியர்கள் அந்த எழுத்தை வாசித்தவுடன் ராஜாவின் இடுப்புக்குக் கீழ் செயல்படாமல் போயிற்று என்று கூறுகின்றனர். இடுப்பின் கட்டுகளைத் தேவன் அறுத்தார். ராஜாவுக்கு மரண பயம் உண்டானது. ராஜா திகிலோடும் நடுக்கத்தோடும் உரத்த சத்தத்துடன் கல்தேயரையும், குறி சொல்லுகிறவர்களையும், ஜோசியரையும் அழைத்து வரச் சொன்னான். அவர்கள் அந்த எழுத்தை வாசிக்கவும், அதின் அர்த்தத்தை ராஜாவுக்குத் தெரிவிக்கவும் கூடாதிருந்தது.
சுவரில் எழுதிய எழுத்தும், தானியேல் கொடுத்த விளக்கமும்:
தானியேல் 5 : 24 – 28 “ அப்பொழுது அந்த கையிறுப்பு அவரால் அனுப்பப்பட்டு, இந்த எழுத்து எழுதப்பட்டது. எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே. இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும், தெக்கேல் என்பதற்கு, நீ தராசியிலேநிறுக்கப்பட்டு குறையக் காணப்பட்டாய் என்றும், பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்ஜியம் பிரிக்கப்பட்டு, மேதியிருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தமாம் என்றான்.”
இதை ஒவ்வொரு வார்த்தையாக தானியேல் விளக்கினான். மெனே என்ற சொல் இருமுறை கூறப்பட்டிருப்பதால் தேவன் உம்மைக் கணக்கிட்டு, உம்முடைய ராஜ்யத்திற்கு முடிவுண்டாக்கினார் என்று தானியேல் கூறினான். தேவன் பாபிலோனுடைய நாட்களை எண்ணி முடித்து விட்டார் என்றான். தெக்கேல் என்பதற்கு தேவனுடைய தராசில் வைத்து பாபிலோனை நிறுத்துப் பார்க்கிறார் என்றும், அது குறைவானதாகவே காணப்படுகிறது என்றும் விளக்கினான். தேவனே அதை உண்டாக்கினார். உயர்த்தினார். இப்பொழுது அதை தாழ்த்தப் போகிறார் என்றும் கூறினான். தேவன் எதிர்பார்த்ததற்கு ஏற்றாற் போல் ராஜாவின் செயல்கள் காணப்படாததால் அவ்வாறு செய்யப்போகிறார் என்றான். பெரேஸ் என்பதற்கு இப்போது பாபிலோன் ராஜ்ஜியம் பிரிக்கப்பட்டு, அது மேதியருக்கும், பெர்சியருக்கும் கொடுக்கப்படப் போகிறது என்றான். பொன்னான தலை அகற்றப்படப் போகிறது,. வெள்ளியிலான புயங்களும் மார்பு பகுதியும் ஆளப்போகிறது என்று விளக்கினான்.
பெல்ல்ஷாத்சாரின் முடிவு:
தானியேல் 5 : 30, 31 “அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டான். மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டான்.”
அரண்மனையில் விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த வேளையில் மேதியர்கள் யூப்ரட்டீஸ் நதியைத் திசை திருப்பி, பாபிலோன் பட்டணத்திற்குள் நுழைந்தனர். அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். பாபிலோனியக் காவலாளிகளுக்கு என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதற்கு முன்பாகவே, அந்தப் படை அரண்மனைக்குள் நுழைந்து விட்டது. திடீரென்று பாபிலோன் ராஜ்ஜியம் பிடிக்கப்பட்டது. தராசில் நிறுக்கப்பட்டு குறைவாகக் காணப்பட்ட பெல்ஷாத்சார், தேவனைப் புறக்கணித்ததால் அன்றே கொலை செய்யப்பட்டான். தேவனே அதைச் செய்தார். அவருடைய அளவுகோலின் மூலம் அதைச் செய்தார்.
தேவன் பாபிலோன் ராஜ்ஜியத்தை மேதிய பெர்சியர்களுக்குக் கொடுத்தார். மேதிய சாம்ராஜ்யத்தில் அரசனாக தரியு பதவியேற்றார்.
எசேக்கியேல், தானியேல் புத்தகங்களில் மனிதர்கள் மேல் கர்த்தருடைய கரம் வந்து அமர்ந்ததாகவும், அந்த நாளில் அவர்கள் ஆவிக்குள்ளானதாகவும், நாவின் கட்டுகள் அறுக்கப்பட்டதாகவும் பார்க்கிறோம். இதேபோல் கர்த்தருடைய கரம் நம்மைத்தொட வாஞ்சிப்போம். ஆமென்.