யோசேப்பின் சகோதரர்களின் பொறாமைக்கான காரணங்கள்:
முற்பிதாக்களில் ஒருவரான யாக்கோபுக்கு 12 பிள்ளைகள். யாக்கோபின் ஆசை மனைவி ராகேல். அவளது முதல் மகன் யோசேப்பு. யாக்கோபு மற்ற பிள்ளைகளை விட யோசேப்பின் மேல் மிகவும் அன்பு செலுத்தினான். இதனால் யோசேப்பின் சகோதரர்கள் தகப்பன் யோசேப்பை அதிகமாக நேசிப்பதைக் கண்டு யோசேப்பின் மேல் பொறாமை கொண்டனர். இரண்டாவதாக யாக்கோபு யோசேப்புக்கு ஒரு பல வர்ண அங்கியைச் செய்வித்துத் கொடுத்தான். மற்றவர்கள் சாதாரண உடைகளை அணிந்திருந்தனர். இந்த அங்கி யோசேப்புக்கு தன்னுடைய தகப்பனிடம் கிடைத்த தனிச் சலுகை, தனிப்பிரியம், கெளரவம் ஆகியவற்றைக் காட்டிற்று. மூன்றாவதாக யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு அதைத் தன்னுடைய தகப்பனிடமும், தன்னுடைய சகோதரர்களிடமும் கூறினான். அவனது சகோதரர்கள் இன்னும் அதிகமாக யோசேப்பின் மேல் பொறாமை கொண்டனர். அந்தச் சொப்பனத்தினிமித்தம் அவர்கள் யோசேப்பை அதிகமாகப் பகைத்தார்கள். நான்காவதாக யோசேப்பு கூறிய வார்த்தைகளினி மித்தம் அவர்கள் அவனை இன்னும் அதிகமதிக்கமாய்ப் பகைத்தனர் (ஆதியாகமம் 37 : 3 – 8). ஆனாலும் யோசேப்பு அவர்களை பகைத்ததாகவோ, வெறுத்ததாகவோ வேதத்தில் எங்கும் கூறப்படவில்லை.
யோசேப்பின் முதல் சொப்பனம்:
ஆதியாகமம் 37 : 6, 7 “அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்: நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான்.”
இங்கு சொப்பனம் என்பது நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் தேவன் நமக்களித்திருக்கிற தரிசனம். யோசேப்பு தான் கண்ட சொப்பனத்தில் தன் சகோதரரோடு சேர்ந்து தான் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக் கொண்டிருந்ததாகக் கண்டான். உண்மையில் யோசேப்பின் குடும்பத்தாரின் தொழில் பயிரிடுதல் அல்ல. அவர்கள் பரம்பரையாக ஆடு மேய்க்கிறவர்களாக இருந்தனர். இயேசுவுக்கு நாம் நம்மை அர்ப்பணிக்கும் போது நம்முடைய பழைய குறிக்கோள்கள், விருப்பங்கள் பழக்கவழக்கங்கள் அனைத்தும் மாறிப்போகும் என்பதை இது வெளிப்படுத்துகிறது (வெளிப்படுத்தல் 21 : 5) யோசேப்பு கண்ட சொப்பனத்தில், யோசேப்பின் கதிர் கட்டு . நிமிர்ந்து நின்றது அவனுடைய உத்தம ஜீவியத்தைக் காட்டுகிறது. மற்றக் கதிர்கள் வணங்கி நின்றது சாவியாய்ப் போன கதிர்களாய் மற்ற சகோதரர்கள் இருந்ததினால், அவர்களால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. அநேக ஆண்டுகளுக்குப் பின் நடக்கப் போவதை வெளிப்படுத்திக் காண்பித்த சொப்பனம் இது. சொப்பனத்தில் அர்த்தத்தை விளங்கிக் கொண்ட சகோதரர்கள் இதைக் கேட்டவுடன் சகோதரர்கள் நீ ஆளப்பார்க்கிறாயா? நீ எங்களோடு துரைத்தனம் பண்ணுகிறாயோ? என்று கோபத்தில் கேட்டனர் அதனால் அவனோடு பொறாமை கொண்டு கோபங்கொண்டார்.
யோசேப்பின் இரண்டாவது சொப்பனம்
ஆதியாகமம் 37 : 9 – 11 “அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான். இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்க வருவோமோ? என்று அவனைக் கடிந்துகொண்டான்.”
இந்தச் சொப்பனத்தில் ஆவிக்குரிய அர்த்தம் வேறாக இருப்பினும், யோசேப்பின் ஜீவியத்தைப் பொறுத்தவரையில் அதன் பொருள், அவனுடைய தகப்பனும், தாயும், அவனுடைய பதினோரு சகோதரர்களும் யோசேப்பைப் பணிந்து கொள்வார்கள் என்பதாகும். யோசேப்பின் இரண்டாவது சொப்பனத்தை யோசேப்பின் தகப்பனுக்கும், சகோதரருக்கும் அறிவித்தபோது அவனுடைய தகப்பன் கோபத்தில் தானும், அம்மாவும், உன் சகோதரரும் தரை மட்டும் குனிந்து உன்னை வணங்க வருவோமோ என்று அவனைக் கடிந்து கொண்டான். பின்பு யோசேப்பின் சகோதரர்கள் சீகேமில் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப் போனார்கள். யாக்கோபு யோசேப்பிடம் ஆடு மேய்க்கச் சென்ற சகோதரர்களின் நலனை விசாரித்து வரும்படி எபிரோனிலிருந்து சீகேமுக்கு அனுப்பினான். யோசேப்பு மறுப்பேதும் கூறாமல் தகப்பனின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவர்களுக்கு உணவுகளையும் எடுத்துக் கொண்டு சென்றான்.
ஆதியாகமம் 37 : 18 – 20 “அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும் படி சதியோசனை பண்ணி, ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான், நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள். “
யோசேப்பு பலவர்ண அங்கியைத் தரித்துக் கொண்டு தன் சகோதரரிடத்தில் வந்தான். அவன் யோசேப்பு அருகில் வருவதற்கு முன்பாகவே சகோதர்கள் அனைவரும் அவனைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். இதேபோல் மத்தேயு 27 : 17 ல் கர்த்தராகிய இயேசுவைக் கொலை செய்யும்படி வேதபாரக ரும், பரிசேயரும் பொறாமையினால் சதி ஆலோசனை பண்ணினார்கள் என்று பார்க்கிறோம். அதேபோல் சவுலும் பொறாமையினால் தாவீதைப் பலமுறை கொல்ல வகை தேடினான் என்று வேதத்தில் பார்க்கிறோம். யோசேப்பு கூறிய சொப்பனங்களுக்கு ஒரு முடிவுண்டாக்க வேண்டுமென்று நினைத்து யோசேப்பு வருகிறான் என்று கூறாமல் பொறாமையால் சொப்பனக்காரன் வருகிறான் என்றனர். யோசேப்புக்குத் தேவன் வைத்திருந்த உன்னத அழைப்பை சாத்தான் அறிந்திருந்ததால் யோசேப்பின் சகோதரர்கள் மூலமாக அதைச் செயல் படுத்தினான்.
இதேபோல் சிம்சோனைப் பெலிஸ்தியர்கள் பகைத்ததற்கு முக்கிய காரணம் அவனுடைய மேன்மையான அழைப்பேயாகும். பெலிஸ்தியர்கள் தங்களை அழித்து நிர்முலமாக்கும்படி சிம்சோன் தேவனால் அழைக்கப் பட்டிருக்கிறானென்று அறிந்து கொண்டது முதல், அவர்கள் அவனுக்கு விரோதமாக எழும்பினர். சிம்சோனோ தன்னுடைய அழைப்பின் மேன்மையைக் காத்துக் கொள்ளாததால், சாத்தான் அவனுடைய சதித் திட்டத்தில் வெற்றி கண்டான். அவர்கள் யோசேப்பைக் கொன்று அங்கிருந்த குழியில் போட்டுத் தன் தந்தையிடம் ஒரு துஷ்ட மிருகம் அவனைப் பட்சித்துப் போட்டது என்று சொல்லுவோம் என்றனர். துஷ்ட மிருகங்களான புலியோ, சிங்கமோ தன்னைப் போன்ற ஒரு சிங்கத்தையோ, புலியையோ அடித்துத் தின்பதில்லை. துஷ்டமிருகங்கள் யோசேப்பின் சகோதரர்களை பார்க்கிலும் நல்லெண்ணம் கொண்டவைகளே. பவுல்,
கலாத்தியர் 5 : 15 ல் “நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள். அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.”என்றார்.
யோசேப்பின் ஒரு சகோதரனான ரூபன் மற்ற சகோதரர்களின் கையிலிருந்து யோசேப்பைத் தப்புவிக்கவும், அவனைத் தன்னுடைய தகப்பனிடம் திரும்பிக் கொண்டு போகவும் எண்ணி, அவனைக் கொல்ல வேண்டாம் என்று கூறினான். ஆனால் மற்ற சகோதரர்கள் கூறிய படி, அவனைக் குழியில் போடுவதற்கு இசைந்தான் (ஆதியாகமம் 37 : 21, 22). யோசேப்பு புதியஏற்பாட்டில் இயேசுவுக்கு நிழலாட்டமாகவும், ரூபன் பிலாத்துவுக்கு நிழலாட்டமாகவும் இருக்கின்றனர். இயேசுவை மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கும் விஷயத்தில், தான் செய்வது தவறு என்று பிலாத்து தன்னுடைய மனசாட்சியில் உணர்ந்த போதிலும் யூதரைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய், அவரைக் கொலை செய்யும்படி ஜனங்களுக்கு இணங்கினான். சகோதரர்கள் தண்ணீரில்லாத குழியில் யோசேப்பைப் போட்டனர் (ஆதியாகமாம் 7 : 23, 24). அந்தக் குழிகள் மிகவும் ஆழமானவை. அதன் அடிப்பக்கம் அகலமாகவும், மேல் நோக்கி வரவர குறுகியும் இருக்கும். மேல் பகுதியைக் கல்லைக் கொண்டு அடைத்து விடலாம். எனவே அப்படிப்பட்ட குழியில் ஒருவனைப் போட்டு விட்டால் அவனால் எறிவரவே முடியாது.
தன்னுடைய சொந்த சகோதரர்கள் தன்னைப் படுகுழியில் போட முயற்சிப்பார்கள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அப்படிச் செய்ய முற்பட்டபோது தன்னைக் குழியில் போடாதபடிக்கு அவர்களிடம் யோசேப்பு மன்றாடியும், அவர்கள் கடின மனதுடன் அவனைக் குழியில் போட்டனர். குழிக்குள்ளிருந்து தன்னைத் தூக்கிவிடும்படி உரத்த சத்தமாய்க் கதறியிருப்பான். அவர்கள் யாரும் அதற்குச் செவி கொடுக்கவில்லை. கர்த்தாவே என்னுடைய வருங்காலம் குறித்துத் தாங்கள் காட்டிய சொப்பனங்கள் என்னவாயிற்று” என்று குழிக்குள்ளிருந்து கதறியிருப்பான். யோசேப்பு கொண்டு வந்த ஆகாரத்தை அவர்கள் மட்டும் புசிக்கும்படி உட்கார்ந்தார்கள். பாவமானது நம்முடைய இருதயத்தைக் கடினப்படுத்தும் தன்மையுடையது என்று எபிரேயர் 3 : 12, 13 ல் பார்க்கிறோம். அவர்கள் யோசேப்பு கொஞ்சம் கொஞ்சமாக தாகத்தினாலும், பசியினாலும் மரித்துப் போகட்டும் என்று எண்ணினர்.
ஆனால் தன்னுடைய பிள்ளைக்காகக் கீலேயாத்திலிருந்து இஸ்மவேலரின் கூட்டத்தார் எகிப்திற்குப் போகும்படி தங்கள் ஒட்டகங்களோடு அவ்வழியே வர தேவன் அனுமதித்தார். குழியில் போட்ட அவனது சகோதரர்கள் 20 வெள்ளிக்காசுக்கு அவனை இஸ்மவேலரின் கையில் விற்றுப்போட்டனர். அவ்வேளையில் அவர்கள் அங்கு வந்திராவிட்டால் யோசேப்பு தன்னந் தனிமையாய் அக்குழியில் கிடந்தது பரிதாபமாய் மரித்துப் போயிருப்பான். யோசேப்பின் சகோதரர்களும் அவனது கதை முடிந்து விட்டது என்ற திருப்தியுடன் தங்கள் வழியே சென்றிருந்திருப்பார்கள். யோசேப்பை அவனது சகோதரர்கள் இஸ்மவேலருக்கு விற்றுப் போட்டது. நன்மைக்கே. அதனால் அவன் அகோர மரணத்தினின்று உயிர் தப்பினான். அவன் எகிப்துக்கு கொண்டு செல்லப்பட்டான். யோசேப்புக்குக்குத் தனக்குச் சம்பவித்துக் கொண்டிருந்த வைகளை விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவனைக் குறித்து மேலான திட்டம் வைத்திருந்த தேவன் தம்முடைய சித்தத்தின்படியே அவனை வழி நடத்திக் கொண்டிருந்தார். கர்த்தர் யோசேப்பை உயர்த்தினார். பொறாமை கொண்ட யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்புக்கு முன் கைகட்டி நின்றனர். யோசேப்பு சொப்பனத்தில் கண்டதைப் போல் யோசேப்புக்கு முன் முகங்குப்புற விழுந்து வணங்கினார்கள் (ஆதியாகமம் 42 : 6, 43 : 26, 44 : 14).
கருத்து:
யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பிடம் கொண்டிருந்த பொறாமையினால் அவனைக் கொலை செய்யும் அளவுக்குத் துணிந்தனர். நீதிமொழிகள் 14 : 30 ல் பொறாமையென்பது எலும்புருக்கி என்று பார்க்கிறோம். அது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அழித்து விடும். யோசேப்பின் சகோதரர்கள் தாங்களிருந்த தேசத்தில் பஞ்சம் வந்த போது கர்த்தர் எகிப்திலிருந்த யோசேப்பிடம் செல்ல வைத்தார் (ஆதியாகமம் 42 : 2,3). அப்பொழுது அவர்கள் யோசேப்புக்குத் தாங்கள் செய்த குற்றத்தை நினைத்து மனம் வருந்தியதை ஆதியாகமம் 42 : 21, 22 ல் பார்க்கிறோம். அப்போஸ்தலர் 5 : 17 ல் பிரதான ஆசாரியனும் சதுசேய சமயத்தாரனைவரும் அப்போஸ்தலர்கள் மேல் பொறாமை கொண்டு அவர்களைப் பிடித்துச் சிறையிலடைத்ததை வேதத்தில் பார்க்கிறோம். இதேபோல் ஊழியத்தில் நாம் ஆர்வமாய்ச் செயல்படும் போதும் பொறாமை வரும். அந்தப் பொறாமைதான் தேவ ஜனங்களைச் சிறையில் வைக்கத் தூண்டியது. அதன் பின் கொலை செய்யத் தூண்டும் (அப்போஸ்தலர் 5 : 33). பின்பு அவர்கள்மேல் தாக்குதல் நடத்தும் (அப்போஸ்தலர் 5 : 40). அவமானப் படுத்தும் (அப்போஸ்தலர் 5 : 41). எனவே யாரிடமும், எதற்காகவும் பொறாமை கொள்ளாதபடி நமது சிந்தையை காத்துக் கொள்ளக் கர்த்தராகிய இயேசுவிடம் மன்றாடுவோம். ஆமென்.