Menu Close

கானானியப்பெண்ணின் மகளை இயேசு சுகமாக்கியது – மத்தேயு 15 : 22 -28 மாற்கு 7 :24 – 30

இயேசு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய் ஒரு வீட்டில் தங்கியிருந்த போது
அசுத்த ஆவி பிடித்த ஒரு சிறுபெண்ணின் தாய் இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டு இயேசுவின் பாதத்தில் விழுந்தாள். அவள் ஒரு கிரேக்க ஸ்திரீ. அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிட வேண்டுமென்று இயேசுவை வேண்டினாள். இயேசு
அவளை நோக்கி முந்தி பிள்ளைகள் திருப்தியடையட்டும் என்றும், பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது நல்லதல்ல என்றும் கூறினார். இங்கே பிள்ளைகள் என்பது இஸ்ரவேலரைக் குறிக்கிறது. நற்செய்தியானது முதலாவது இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று இயேசு சுட்டிக்காட்டுகிறார். அந்த ஸ்திரீ இதைப் புரிந்து கொண்டாள். எனினும் இயேசுவிடம் ஞானமாகவும், விடாமுயற்சியுடனும்,விசுவாசத்துடனும் பதில் சொல்லுகிறதைப் பார்க்கிறோம்.

“மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.” தேவன் இஸ்ரவேலரை ஆசீர்வதிக்கும்போது புறஜாதியார் மறைமுகமாக தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளலாமே என்று வாதிடுகிறாள். அவளுடைய விசுவாசத்தைக் கண்டு இயேசு இரங்கி “நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார்.”

அவள் தன் வீட்டுக்கு வந்ததபோது பிசாசு போய்விட்டதையும் தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள். நாமும் இந்த கானானிய ஸ்திரீயைப் போல தேவனிடம் போராடி சுகத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

Related Posts