- ஆறுகளும், நீரூற்றுகளும் இரத்தமாயின:
வெளிப்படுத்தல் 16 : 4 “ மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாயின.
மூன்றாம் தூதன் கோபக்கலசத்தை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான். உடனே நீரூற்றுகளிலும், ஆறுகளிலும் உள்ள தண்ணீர் அனைத்தும் இரத்தமாயின. மூன்றாவது எக்காளம் ஊதப்பட்டபோது ஏற்பட்ட வாதையை விட இந்த வாதை மிகவும் கொடூரமானதாக இருக்கும். அப்பொழுது மூன்றில் ஒரு பங்கு நீர்நிலைகள் மட்டுமே இரத்தமாயின. ஆனால் இதில் பூமியிலிலுள்ள நீர்நிலைகள் அனைத்தும் இரத்தமாக மாறிப் போயிற்று. இது எகிப்தின் முதல் வாதையோடு சம்மந்தப்பட்டது.
யாத்திராகமம் 7 : 20, 21 ல் “மோசே கோலை ஓங்கி; நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று.நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற் போயிற்று, எகிப்து தேசமெங்கும் இரத்தமாயிருந்தது.” . என்று பார்க்கிறோம்.
- தண்ணீர்களின் தூதன் தேவனைப்பற்றிக் கூறியது:
வெளிப்படுத்தல் 16 : 5, 6, 7 “ அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர். – அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்கு பாத்திரராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்.”
வெளிப்படுத்தல் 7 : 1ல் காற்றின் தூதன் என்று அழைக்கப்பட்ட ஒரு தூதனைப் பார்த்தோம். தண்ணீர்களின் தூதன் என்பவன் பூமியிலிலுள்ள நீர்நிலைகளுக்கு கண்காணியான தேவனுடைய தூதன் என்பதாகும். கர்த்தரின் சிருஷ்டிப்பை அழிப்பது தூதனின் மற்றுமொரு பணியாகும். தூதர்கள் இப்பிரபஞ்சத்தில் பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தூதன் இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவன் ஆறுகளின் தண்ணீரையும், நீருறுகளின் தண்ணீரையும் இரத்தமாக்கிய நியாயத்தீர்ப்பு சரியானதே என்று சொல்லுகிறான்.
எரேமியா 23 : 6 ல் “ அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.”
சங்கீதம் 97 : 2 ல் “ நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.”
சங்கீதம் 119 : 137, 138 ல் “ கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள். நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.”
ஆதியாகமம் 18 : 25 ல் ஆபிரகாம் “சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ என்றான்.”
மேற்கூறப்பட்ட வசனங்கள் தேவன் நீதிபரார் என்பதை நமக்கு உணர்த்துகிறது. தண்ணீர்களின் தூதன் மூன்றாவது கோபக்கலசம் ஏன் ஊற்றப்பட்டது என்று கூறுகிறான். பரிசுத்தவான்களையும், தீர்க்கதரிசிகளையும் துன்புறுத்தி இரத்தம் சிந்தவைத்து கொலை செய்தவர்கள் ஆதலால் அவர்களின் இரத்தத்தைக் குடிக்கக் கொடுத்து நியாயம் செய்கிறார்.
கலாத்தியர் 6 : 7 ல் “ மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்”
ஏசாயா 49 : 26 ல் “ உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்;” என்றுமுள்ளது.
எஸ்தர் 7 : 9 ல் மொர்தெக்காயைக் கொலை செய்ய ஐம்பதுமுழ உயரமான தூக்குமரத்தைச் செய்த ஆமான் அதே தூக்குமரத்தில் மரித்தான். தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாகச் செயல்படுகிறவர்களின் முடிவு மிகவும் பயங்கரமாயிருக்கும்.
- தேவனுடைய நியாயத்தீர்ப்பு நீதியுள்ளவைகள்:
வெளிப்படுத்தல் 16 : 7 “பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன்.”
தண்ணீர்களின் தூதன் 16 : 5, 6 ல் கூறியதை அங்கீகரித்து பலிபீடத்திலிருந்து வெளிப்பட்ட தூதன் ஆறுகளையும், நீரூற்றுகளையும் இரத்தமாக மாற்றிய தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியமும், நீதியுமானதுதான் என்கிறான். சத்தியத்துக்கு, நீதிக்கும் விரோதமான எந்தக் காரியத்தையும் தேவன் செய்வதில்லை. இதே பலிபீடத்தில் நின்று கொண்டிருந்த ஆத்துமாக்கள்,
வெளிப்படுத்தல் 6 : 10 ல் “ அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.”
இவர்களின் ஜெபத்திற்குப் பதில் கொடுக்கப்படுவதை இங்கு பார்க்கிறோம். அவர்கள் வேண்டிக்கொண்ட அந்தப் பழிவாங்குதல்தான் கோபக்கலசங்கள் ஊற்றப்படுவதின் மூலமாக உலக சரித்திரத்தின் கடைசி மூன்றரை ஆண்டுகளில் பூமியில் நிறைவேறிக் கொண்டிருக்கும். பலிபீடத்திலுள்ள வேறொருவன் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியமும், நீதியுமுள்ளதுதான் என்கிறான்.