லூக்கா 2 : 25 – 27 “அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியுமுள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்த ஆவியானவர் இருந்தார். கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடைய மாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது. அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்தில் வந்திருந்தான்.”
சிமியோன் நீதியும் தெய்வ பக்தியும் நிறைந்தவன். சிமியோனிடம் பரிசுத்த ஆவியானவர் இருந்தார். கிறிஸ்துவைக் காணும் முன் மரணமடைய மாட்டாய் என்ற வாக்குத்தத்தத்தைப் பெற்றிருந்தான். இஸ்ரவேலுக்கு ஆறுதல் வருவதற்காகக் காத்திருந்தான். வயது முதிர்ந்த நிலையிலும் நம்பிக்கையோடு காத்திருந்தான். இயேசு பிறந்த பின் நியாயப்பிரமாண முறைமையின்படி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையோ அல்லது இரண்டு புறாக் குஞ்சுகளையோ பலியாகச் செலுத்துவதற்காகத் தாய் தகப்பனார் இயேசுவை தேவாலயத்திற்குக் கொண்டு வந்தனர்.
புறாக்குஞ்சுகளை அவர்கள் கொண்டு வந்ததிலிருந்து, அந்தக் குடும்பம் எத்தனை ஏழ்மையான நிலமையில் இருந்தது என்பதை அறிகிறோம். அப்பொழுது அங்கிருந்த சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு தேவனை ஸ்தோத்தரித்தான். “ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போக விடுகிறீர்;” என்று கர்த்தரிடம் வேண்டினான். இயேசுவைப் பற்றி சிமியோன் புறஜாதிகளுக்கு பிரகாசிக்கிற ஒளியாக இந்தக் குழந்தை இருக்கும் என்றும், இஸ்ரவேலருக்கு மகிமையாக இருக்கும் என்றும், சகல ஜனங்களுக்கு முன்பாகவும், கர்த்தர் ஆயத்தம் பண்ணின இரட்சணியமான அந்தக் குழந்தையை என் கண்கள் கண்டது என்றும் கூறினார்.