கிறிஸ்தவ மார்க்கத்தில் முக்கியமான ஒரு நாள் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள். இயேசு மரணத்தை ஜெயித்து உயிரோடெழுந்தார். பாதாளத்தை ஜெயித்து, சத்துருவை ஜெயித்து, சாத்தானை ஜெயித்து உயிரோடெழுந்தார் கிறிஸ்தவத்தின் முதுகெலும்பும், அடிப்படை சத்தியமும், கிறிஸ்துவின் உயிர்த் தெழுதலின் தான் இருக்கிறது. எந்த மதத்திலும் மரித்து உயிரோடெழுந்த தேவனை நாம் பார்க்க முடியாது. ஆனால் கிறிஸ்தவ மார்க்கத்தில் இயேசு மரித்து உயிரோடு எழுந்தார். இன்றைக்கும் ஜீவிக்கிறார். ஆகவே கிறிஸ்தவ மார்க்கத்தில் ஜீவன் உண்டு. வல்லமை உண்டு. மற்ற மார்க்கங்களை விட உயிர்த்தெழுதலிலும் நம்பிக்கை உண்டு. இயேசுவை வைத்த கல்லறையா னது அவரைக் கட்டிக் காக்க முடியவில்லை. யூத போர் சேவகர்களாலும், ரோம போர்சேவகர்களாலும் இயேசுவின் கல்லறையைக் காக்க முடிய வில்லை. எந்த அரசாங்க சட்டங்களும், அரசாங்க முத்திரையும், அவரை கல்லறையில் அடக்கிவைக்க முடியாமல் போயிற்று.
கல்லறைக்குப் போனவர்களும் அங்கு பார்த்ததும்: மாற்கு 16 : 1 : 4 , மத்தேயு 28 : 2 – 4
ஓய்வு நாள் முடிந்து வாரத்தின் முதல் நாள் அதிகாலையில் மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும், சலோமேயும், இவர்களுடனே கூட மற்ற ஸ்திரீ களும் கல்லறையைப் பார்க்க வந்தனர். அவர்கள் இயேசுவுக்குச் சுகந்தவர்க்கம் இடுவதற்காக, அவைகளை வாங்கிக்கொண்டு கல்லறைக்கு வந்தனர். அப்பொ ழுது பூமி மிகவும் அதிர்ந்ததைப் பார்த்தனர். அவர்கள் பார்த்துக் கொண்டிருக் கும்போதே, கர்த்தருடைய தூதன் ஒருவன் வானத்திலிருந்து இறங்கி வருவ தையும், வந்தவன் கல்லறையில் வாசலிலிருந்த கல்லைப் புரட்டித்தள்ளி, அதன் மேல் உட்கார்ந்ததையும் பார்த்தனர். இயேசு வெளியே வருவதற்காகத் தூதன் அந்தக் கல்லைப் புரட்டித் தள்ளவில்லை. ஏனெனில் ஏற்கனவே இயேசு வெளியே வந்து விட்டது அந்த தூதனுக்குத் தெரியும். மற்றவர்கள் எளிதில் சென்று கல்லறைக்குள் போய் பார்ப்பதற்காகத் தான், தூதன் அந்தக் கல்லைப் புரட்டித் தள்ளினான். அந்தத் தூதனின் முகம் மின்னலைப் போலவும், அவனுடைய வஸ்திரம் வெண்மையாகவும் இருந்தது. கல்லறையைக் காவல் காத்துக் கொண்டிருந்த காவலாளர்கள் அவனைப் பார்த்து பயத்தினால் செத்தவர்களைப் போலானார்கள்.
தூதன் கூறியது: மத்தேயு 28 : 5 – 7
தூதன் ஸ்திரீகளை நோக்கி நீங்கள் ஒருவரும் பயப்படவேண்டாம். நீங்கள் அனைவரும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்பதை அறிவேன். அவர் முன்பு சொன்னபடியே உயிரோடு எழுந்தார். கர்த்தரை வைத்த கல்லறைக்குச் சென்று பாருங்கள். அதுவுமல்லாமல் சீக்கிரமாகப் போய் இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார் என்ற செய்தியை இயேசுவோடிருந்த சீஷர்களுக்குச் சொல்லுங்கள் என்றான். இயேசுவானவர் நீங்கள் போவதற்கு முன்பே கலிலேயாவுக்குப் போகிறார். அங்கே நீங்கள் அனைவரும் அவரைக் காண்பீர்கள் என்றான். இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை முதன் முதலில் இயேசுவைத் தேடி வந்தவர்களுக்கு அறிவித்தது தேவதூதர்கள் தான்.
பெண்களும் சீஷர்களும்: மத்தேயு 28 : 8 , யோவான் 20 : 3 – 8
மகதலேனா மரியாள் வேகமாகச் சென்று கல்லறையை மூடியிருந்த கல் எடுத்துப் போட்டிருக்கிறதைக் கண்டு ஓடிப்போய் பேதுருவையும் யோவானை யும் அழைத்து வந்தாள். பேதுருவும் யோவானும் அவள் கூறிய செய்தியைக் கேட்டு விரைந்து ஓடினார்கள். பேதுருவைப் பார்க்கிலும், இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்தவனும், அவருக்கு அன்பாயிருந்தவனுமாகிய யோவான் வாலிப னானதால் துரிதமாக ஓடினான். ஆனாலும் முந்திப் போன யோவான் கல்ல றைக்குள் போகவில்லை. பேதுரு பின்னால் வந்தாலும் ஆர்வத்துடன் கல்ல றைக்குள் போனான். அப்போது இயேசுவைச் சுற்றியிருந்த சீலைகள் கீழே கிடப்பதையும், தலையில் சுற்றியிருந்த சீலை மற்ற சீலைகளுடன் வைக்காமல் தனியே ஓரிடத்தில் மடித்து வைத்திருப்பதையும் கண்டான். இயேசுவின் சரீரம் திருடப்பட்டிருந்தால் சரீரத்தைச் சீலைகளுடனே எடுத்துச் சென்றிருப்பார்கள். ஆனால் தலையில் சுற்றியிருந்த சீலையும், சரீரத்தில் சுற்றியிருந்த சீலை யும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தது. அதன் பின் யோவான் கல்லறைக்குள் போய் பார்த்தான். இருவரும் இயேசு உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசித்தனர். அவர்களுடைய வாழ்க்கையில் இது முக்கியமான நாள். அவர்களுக்கு மட்டுமல்ல. நமக்கும், உலக வரலாற்றிலும், அந்த நாள் முக்கியமான நாள். இயேசு மூன்று நாளைக்குப் பிறகு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுவேன் என்று தன்னுடைய சீஷர்களுக்கு ஏற்கனவே சொல்லியிருந்தார்.
மாற்கு 9 : 31 “ ஏனெனில், மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்று போடுவார்கள் என்றும், கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்.”
இயேசு தாம் சொன்னபடியே மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். பின்பு இருவரும் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிச் சென்றனர்.
இயேசு முதன்முதலில் தரிசனமானது: மாற்கு 16 : 9, யோவான் 20 : 15, 16
இயேசு உயிரோடு இருக்கும் பொழுது மகதலேனா மரியாளிடமிருந்த ஏழு பிசாசுகளைத் துரத்தினார் என்று லூக்கா 8 : 2 ல் உள்ளது. அதன் பின்பு இயேசு எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் அவருடன் கூட ஊழியத்துக்குச் சென்றவள். இயேசு மரித்த பின்பும் இயேசுவின்மேல் உள்ள அன்பு குறையா மல், இயேசுவை அடக்கம் பண்ணின கல்லறைக்குச் சுகந்தவர்க்கமிட அதி காலையில் விரைந்தாள் (மத்தேயு 28:1, மாற்கு 16 :1 –3, லூக்கா 20 : 1, 2). ஆனால் வைத்த இடத்தில் அவர் இல்லை. அதை பேதுருவுக்கும், யோவானுக்கும் ஓடிச் சென்று சொன்ன மரியாள், அவர்களுடன் மறுபடியும் கல்லறை பக்கம் வருகின்றனர் . அவர்கள் இருவரும் இயேசு அங்கேயில்லையென்று பார்த்த வுடன் சென்று விட்டனர் (யோவான் 20 : 3 – 10). ஆனால் மரியாளோ அங்கே அழுது கொண்டே நின்றாள். அவள் இயேசுவின் மேல் வைத்த அன்பை இது காட்டுகிறது. அவள் இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் வெண் மையான உடைகளை உடுத்தியிருந்த இரண்டு தூதர்கள் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தாள். அவர்கள் மரியாளிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்டவுடன் மரியாள் “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள். அவரை வைத்த இடம் தெரியவில்லை” என்றாள். அவள் இயேசுவை என் ஆண்டவர் என்று கூறியதிலிருந்து அவள் இயேசுவிடம் வைத்திருந்த அன்பைப் பார்க்கிறோம்.
அவர்கள் மூலம் இயேசு உயிர்த் தெழுந்த செய்தியை அறிகின்றனர் (யோவான் 20 : 11 – 13, லூக்கா 24 : 3 – 7). அப்பொழுது பின்னால் இயேசு நின்று கொண்டி ருந்தார். ஆனால் அவளுக்கு அவர் இயேசு என்று அறியாமல் தோட்டக்கா ரென்று நினைத்து “நீர் அவரை எடுத்துக் கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக் கொள்ளுவேன் என்றாள்.” ஒரு மனிதனைத்தானே எடுத்துக் கொண்டு செல்வேன் என்று தைரியமாகக் கூறியதைப் பார்க்கிறோம். அவளுடைய துக்க முகத்தைக் கண்ட இயேசு அவளைப் பார்த்து “ஸ்திரீயே ஏன் அழுகிறாய் யாரைத் தேடுகிறாய்’ என்று இரண்டு கேள்விகளைக் கேட்டார். இயேசு உயிர்த்த பின் பேசிய முதல் வார்த்தை இது. ஆண்டவர் மற்ற யாருக்கும் தரிசனம் ஆவதற்கு முன்பு மகதலேனா மரியாளுக்குத் தரிசனமானார். அப்பொழுது இயேசு “மரியாளே” என்று பெயர் சொல்லி அழைத்தார். யோவான் 10 : 3, 4 ல் “நல்ல மேய்ப்பன் தன்னுடைய ஆடுகளை பேர் சொல்லிக் கூப்பிடுகிறார். ஆடுகள் அவர் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவருக்குப் பின் செல்கிறது” அந்தக் குரலைக் கேட்டவுடன் “ரபூனி” என்றாள். இயேசுவை உயிருடன் கண்டதால் மிகுந்த சந்தோஷத்துடன் ரபூனி என்றாள். அதற்குப் போதகர் என்று பொருள்.
உயிர்த்தெழுந்த இயேசுவை முதல் முதலாகக் காணும் பாக்கியம் மரியாளுக்குக் கல்லறைத் தோட்டத்தில் கிடைத்தது. இயேசு மாம்சத்திலிருந்த நாட்களில் அநேகர் அவருடைய பாதங்களை பற்றிப் பிடித்திருக்கலாம். இயேசு உயிர்த் தெழுந்த பின், அவர் தன் மாம்சத்தில் இருந்தது போல் இல்லாததினால் மரியாளைத் தொடாதே என்று கூறினார். இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை மற்றவர்களுக்கு அறிவித்த முதல் பெண்மணி மரியாள் (யோவான் 20 : 14 – 18, மாற்கு 16 : 9). மரியாளைப் பெயர் சொல்லி அழைத்த கர்த்தர், நம்மையும் அன்போடு அழைக்கிறார். மேலும் இயேசு அவளிடம் “நீ என் சகோதரரி டத்திற்குப் போய், நான் என் பிதாவினி டத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.”இயேசு தேவனுடைய ஒரே குமாரன் என்பதால் என் பிதா, என் தேவன் என்கிறார். இயேசு இதில் தன்னுடைய சகோதரர் யாரென்பதைத் தெளிவு படுத்துகிறார். மாம்சத்தின்படி மரியாளுக்கு, யோசேப்புக்கு பிறந்தவர்களை சகோதரர்கள் என்று இங்கு குறிப்பிடவில்லை. ஆவிக்குரியவர்களையே சகோதரர் என்று கூறுகிறார் (லூக்கா 8 : 19 – 21). அவள் தான் இயேசுவை கண்டதையும் அவர் தன்னுடனே சொன்னவைகளை யும் சீஷருக்குத் தெரிவித்தாள்.
இயேசுவின் இரண்டாவது தரிசனம்: மத்தேயு 28 : 9, 10
கல்லறைக்கு வந்த பெண்கள் சீஷர்களுக்கு அறிவிக்க போகிற போது, இயேசு அவர்களுக்கு எதிர்ப்பட்டு அவர்களைப் பார்த்து “வாழ்க” என்று அந்தப் பெண்களை வாழ்த்தினார். இதே சொற்களால் மரியாளைத் தூதன் வாழ்த்தியதை லூக்கா 1 : 28 ல் பார்க்கிறோம். அவர்கள் உடனே ஆச்சரியத்திலும், சந்தோஷத்திலும் இயேசுவின் பாதங்களைத் தழுவி அவரைப் பணிந்து கொண்டார்கள். இதற்கு முன் இயேசு மரியாளிடம் தன்னைத் தொடாதே என்றார். ஆனால் இங்கு அவ்வாறு கூறவில்லை. இயேசு உயித்தெ ழுந்த உடலைத் தொடவும், தழுவவும் முடியும் என்று இதிலிருந்து அறிகி றோம். இயேசு அவர்களைப் பார்த்து “பயப்படாதிருங்கள். என்றார். இதற்கு முந்தி தூதர்கள் அங்கு சென்ற பெண்களிடம் இதேபோல் பயப்படாதிருங்கள் என்றார். இந்த உலகம் இயேசுவை வெறுத்துச் சிலுவையிலறைந்த போதும் , இந்தப் பெண்கள் இயேசுவிடம் அன்பும், பாசமும் உள்ள உண்மையான நண்பர்களாக இருந்தார்கள். மேலும் இயேசு நீங்கள் போய் “என்னுடைய சகோதரரிடம் கலிலேயாவுக்குப் போகும்படி சொல்லுங்கள். அங்கே நான் அவர்களைச் சந்திப்பேன்” என்று கூறினார். இயேசு சீஷர்கள் தம்மை விட்டு ஓடிப் போனதையும், அவர்களுடைய அவிசுவாசத்தையும் பொருட்படுத்தவில்லை என்பதை சீஷர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம், அவர்களைத் தமது சகோதரர் என்று அன்பாக அழைத்ததைப் பார்க்கிறோம். இயேசு கூறியதைக் கேட்ட பின்னரும் சீஷர்கள் உடனே கலிலேயாவுக்குச் செல்லவில்லை.
இயேசுவின் மூன்றாவது தரிசனம்: லூக்கா 24 : 34, 1கொரிந்தியர் 15 : 5
லூக்கா 24 : 34 “கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானாரென்று அவர்கள் சொல்லக் கேட்டு,”
இயேசுவை மூன்றுதரம் பேதுரு மறுதலித்தார். பின்னர் மனம் திரும்பினார். பேதுருவை இயேசு மன்னித்து ஏற்றுக் கொண்டதைத் தெரிவிப்பதற்காகவும், பேதுருவைத் தேற்றுவதற்காகவும் இயேசு பேதுருவுக்கு தனிப்பட்ட விதத்தில் தரிசனமானார்.
இயேசுவின் நான்காவது தரிசனம்: லூக்கா 24 : 13 – 31
லூக்கா 24 : 13 – 16, 30, 31 “அன்றையதினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டு மைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.”
“போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.”
“அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.”
“அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.”
இயேசு உயிர்த்தெழுந்த அன்றைய தினத்தில் இரண்டு பேர் எருசலேமிலிருந்து ஏழு அல்லது எட்டு மைல் தூரத்திலுள்ள எம்மாவு என்னும் கிராமத்திற்குப் போகும்போது இயேசுவைப் பற்றி பேசிக்கொண்டு போனார்கள். அவர்களோடு கூட இயேசுவும் சென்றார். ஆனால் அவர்கள் இயேசுவை அறியவில்லை. இயேசு அவர்களை நோக்கி ஏன் துக்கத்தோடு போகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள் “நாசரேயனாகிய இயேசு வாக்கும், வல்லமையுமுள்ள தீர்க்கதரிசியாக இருந்தார். அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி சிலுவையில் அறைந்தார்கள். அவர்தான் இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பார் என்று நாங்கள் நம்பியிருந்தோம்.” என்று கூறினர். இதிலிருந்து இப்பொழுது அவர்களுடைய நம்பிக்கை போய்விட்ட தென்றும் பெண்கள் கல்லறைக்குப் போய் இயேசு உயிரோடெழுந்து விட்டார் என்று கூறியதையும் அவர்கள் நம்பவில்லை என்றும் அறிகிறோம். இயேசு அவர்கள் வேத வாக்கியங்களை அறியாததால் “மந்த இருதயம் உள்ளவர்களே” என்று கூறி, மோசே முதல் அனேக தீர்க்கதரிசிகள் கூறிய வேத வாக்கியங்களில் இயேசுவைக் குறித்து சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பி த்தார். அப்பொழுது அவர்களுடைய இருதயம் கொழுந்து விட்டு எரிந்தது. அவர்கள் இயேசுவை தங்களோடு தங்கும்படி கேட்டுக்கொண்டதால், இயேசு அவர்களோடு கூடச் சென்றார். அப்பொழுது அவர்கள் பந்தியிருக்கையில் அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார் அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு இயேசுவை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்து போனார்.
இயேசுவின் ஐந்தாவது தரிசனம்: யோவான் 20 : 19 – 22
இயேசுவை சிலுவையில் அறையப்பட்ட உடன் சீஷர்கள் எல்லோரும் சிதறிப் போய் விட்டார்கள் இப்பொழுது அவர்கள் தோமாவைத் தவிர அனைவரும் ஒன்று சேர்ந்து பயத்தோடு கதவுகளைப் பூட்டிக்கொண்டு மறைந்திருந்தனர். அதற்குக் காரணம் இயேசுவின் சரீரம் கல்லறையில் இல்லாததால் யூத மதத்தலைவர்கள் சீஷர்கள் அவரைத் திருடிக்கொண்டு போய் விட்டார்கள் என்று எண்ணினபடியால், தாங்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து வந்து விடுவார்கள் என்ற பயத்தினால் அறைவீட்டில் கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருந்தார்கள். எந்தப் பூட்டப்பட்ட கதவும் இயேசுவைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இயேசு ஆவிக்குரிய சரீரத்தில் தோன்றினார். உயிர்த்தெழுந்த இயேசுவின் உயிர்ப்பிக்கப்பட்ட சரீரம் பூட்டியிருக்கிற இடத்துக்குள் வரவும், காட்சியளிக்கவும், மறையவும், பேசவும், உண்ணவும், முடியும். இயேசு பாடுபடும் போதும், மரிக்கும் போதும், அவரைத் தனிமையில் விட்டுவிட்டு ஓடிப்போன சீஷர்களைத் தேடி இயேசு சென்றார். தன்னைக் காண்பித்து அவர்கள் பயத்தை நீக்கி , அவர்களைத் திடப்படுத்த வருகிறார்.
இயேசு பூட்டியிருந்த அந்த வீட்டுக்குள் வந்து, அவர்கள் நடுவே நின்று “உங்களுக்கு சமாதானம்” என்று கூறினார். யூதர்கள் வழக்கப்படி ஒருவரை யொருவர் சந்திக்கும்போது சமாதானம் என்று வாழ்த்துவர் (தானியேல் 10 : 19). இது தேவன் அருளும் சமாதானம். இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு தன்னு டைய சமாதானத்தை வாக்குப் பண்ணியிருந்தார். (யோவான் 14 : 27). பவுல் ரோமர் 5 : 1 ல் “நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப் பட்டிருக்கிற படியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனி டத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார். இயேசு மகிமை அடைந்த சரீரத்தோடு அங்கு வந்திருந்தார். ஆனாலும் சீஷர்கள் அவரை இயேசு என்று அறிந்து கொள்ளவில்லை. சீஷர்கள் கலங்கிப் பயந்து ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். (லூக்கா 24 : 37). பலமுறை இயேசு சீஷர்களு க்குத் தன்னுடைய உயிர்த்தெழுதலைக் குறித்துச் சொல்லியிருந்த போதிலும் அவர்கள் அறியாதபடி, அவர்களுடைய கண்கள் மறைக்கப் பட்டிருந்தது.
இயேசுவோ அவர்கள் பயத்தினால் நிறைந்திருப்பதைக் கண்டு, அவர்களிடம் தன்னுடைய ஆணி பாய்ந்த கைகளையும், ஈட்டியால் குத்தப்பட்ட விலாவையும் காண்பித்தார். அவர்கள் அதைப் பார்த்து விசுவாசித்தனர். இயேசுவின் மகிமை அடைந்த சரீரத்தில் கூட அந்தத் தழும்புகள் இருந்ததை அறிகிறோம். இயேசு அவர்கள்மேல் ஊதி பரிசுத்தஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். பழைய ஏற்பாட்டில் ஒருமுறை தேவன் ஆதாமைப் படைக்கும் பொழுது ஊதி அவர்களை ஜீவாத்துமாவாக்கினார் (ஆதியாகமம் 2 : 7). ஆனால் இங்கே இயேசு அவர்கள் மேல் ஊதி அவர்களுக்குப் பரிசுத்தஆவியை கொடுத்தார். அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டனர். ஆனால் பரிசுத்த ஆவியின் திருமுழுக்கைப் பெந்தேகோஸ்தே நாளில் தான் பெற்றனர் (அப்போஸ்தலர் 1 :4, 5, 2 : 1 – 4). இது பெந்தகோஸ்தே நாளுக்கு முன் அவர்களைத் தாங்கி வழிநடத்தக் கொடுக்கப்பட்டதாகும்.
இயேசுவின் ஆறாவது தரிசனம்: யோவான் 20 : 26 – 29
இயேசு உயிர்த்தெழுந்த பின் ஒவ்வொரு ஞாயிறும் சீஷர்கள் தங்கள் தங்கியிருந்த வீட்டில் ஒன்றாகக் கூடுவது வழக்கமாதலால், தோமாவும் அங்கிருந்தான். இயேசு எட்டு நாளைக்குப் பின்பு, மறுபடியும் தோமாவின் அவிசுவாசத்தை நீக்குவதற்காக சீஷர்கள் இருந்த வீட்டுக்குள் வந்தார். அந்த வீட்டின் கதவுகள் இயேசுவை உள்ளே நுழைய விடாதபடி தடுக்க முடிய வில்லை. இயேசு அவர்கள் நடுவே நின்று “உங்களுக்குச் சமாதானம்” என்று கூறி, தோமாவைப் பார்த்து “உன் விரலை நீட்டி, என் கைகளைப் பார். உன் கையை நீட்டி என் விலாவில் போடு. அவிசுவாசியாக இராதே” என்று கூறினார். தோமாவின் விசுவாசக் கண்கள் திறக்கப்பட்டன. ஆனால் தோமா தொட்டுப் பார்த்ததாகக் கூறப்படவில்லை. தோமா தன்னுடைய அறியாமையினால் , இயேசு உயிரோடு வருவார் என்ற நம்பிக்கையற்ற நிலையை நினைத்து வெட்கமடைந்தவனாய், இயேசு இந்த பூமியிலே உலக இரட்சகராக மட்டும் வரவில்லை, அவரே சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதை உணர்ந்தான்.
தோமாவின் சந்தேகம் தீர்ந்த போது தோமா ஒரு உன்னதமான சாட்சியைக் கூறினான். யூதனான ஒருவன் “என் ஆண்டவனே என் தேவனே” என்று கூறுவதில்லை. அதுவும் சந்தேகம் நிறைந்த தோமாவின் வாயிலிருந்து இந்த சாட்சி வந்தது. சீஷர்கள் யாரும் இயேசுவை “தேவனே” என்று அழைத்த தில்லை. தோமா இயேசுவை ஆண்டவராக மட்டுமின்றி தேவனாகவும் ஏற்றுக்கொண்டான். தோமா இயேசுவைக் கண்டு விசுவாசித்தான். நாமோ இயேசுவைக் காணாமல் விசுவாசிக்கிறோம். இயேசு தோமாவைப் பார்த்து நீ என்னை கண்டதினால் விசுவாசித்தாய், காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று கூறினார். இதைத்தான் பேதுரு,
1பேதுரு 1 : 9 ல் “ அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்.” என்றான்.
இயேசுவின் ஏழாவது தரிசனம்: யோவான் 21 : 1 – 22
இயேசு சீடர்களிடம் கலிலேயாவுக்குச் செல்லுங்கள், நான் உங்களை அங்கே சந்திப்பேன் என்று கூறியிருந்தார். இங்கு இயேசு 12 சீஷர்களுக்கல்ல, ஏழு சீஷர்களுக்கு மட்டுமே தரிசனமானார். இயேசு வரவில்லை என்றவுடன் பொறுமை இழந்த பேதுரு தன்னுடைய அழைப்பை மறந்து, மற்றவர்களிடம் “‘நான் மீன் பிடிக்கப் போகிறேன்” என்றான். மற்றவர்களும் அவர்கள் அழைப்பை மறந்து, நாங்களும் உன்னோடு வருகிறோம் என்றதால், அனைவரும் பேதுருவுடன் மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றனர். அவர்கள் அந்த இரவு முழுதும் பிரயாசப் பட்டும் மீன்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. மீன்பிடித் தொழிலில் திறமைசாலிகளாக இருந்தும், அவர்கள் தோல்வி அடைந்ததால் சோர்ந்து போனார்கள். ஆனால் இது தேவனுடைய அநாதி திட்டத்தின்படியும் தீர்மானத்தின்படியும் நடந்ததாகும். லூக்கா 5 : 1 – 11 ல் பேதுருவின் படகை இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பத்தில் நிரப்பச் செய்தார். இது இயேசுவின் ஊழியத்தில் கடைசியாக நடந்தது. இயேசுவின் ஊழியத்தின் இயேசு உயிர்த்தெழுந்த பின் திபேரியா கடற்கரையில் மறுபடியும் அந்த விடியற்காலையில் மகிமை அடைந்த சரீரத்தோடு நின்றார்.
சீஷர்களுக்குக் கரையில் நின்று கொண்டிருப்பது இயேசு என்று தெரியவில்லை.இயேசு என்று அவர்கள் அறியாதபடி அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது (லூக்கா 24 : 16). இதேபோல் மகதலேனா மரியாள் இயேசு உயிரோடெழுந்ததை அறியாமல், கல்லறையினருகில் இயேசு நின்று கொண்டிருந்ததை அறியாதிருந்தாள் (யோவான் 20 : 14). மீன் பிடிக்கும் தொழிலில் இருந்து மனிதரை பிடிக்கும் தொழிலுக்கென்று ஏற்படுத்தப்பட்ட பேதுருவும் மற்றவர்களும் (மத்தேயு 4 : 18 20) மீண்டும் பழைய தொழிலுக்குச் சென்றதை இயேசு பார்த்தார். இயேசு கடலின்மேல் நடந்து வராமல் கடலின் கரையிலே நின்று சீஷர்களுக்கு காத்திருந்தார். ஆனால் அவர்கள் யாரையும் இயேசு கடிந்து கொள்ளவில்லை. இயேசு இங்கு அவர்களைப் போஷித்து, இரட்சிப்பை மட்டும் கொடுக்க வரவில்லை. அவர்களின் விசுவாசத்தை அதிகரிக்கவும், தன்னுடைய திட்டத்தை அவர்களுக்குள் செயல்பட வைக்கவும் தான் அங்கு வந்தார். இயேசுவை விட்டு பின்வாங்கினதினால் சீஷர்களுக்கு மீன்கள் கிடைக்கவில்லை. இயேசு அவர்களைப் பார்த்து பிள்ளைகளை என்று பாசத்துடன் ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளையை அழைத்ததைப் போல அழைத்ததைப் பார்க்கிறோம்.
சாப்பிடுவதற்கு ஏதாவது அவர்களிடம் இருக்கிறதா என்று இயேசு கேட்டபோது, அதற்கு அவர்கள் ஒன்றும் இல்லை என்று தங்கள் தோல்வியை ஒத்துக் கொண்டனர். அவர்கள் மாலை 6 மணிமுதல் அடுத்தநாள் காலை 5 மணிவரை சுமார் 11 மணி நேரங்கள் மீன்பிடிக்க முயற்சித்தார்கள். ஆனால் அவர்களால் ஒன்றும் பிடிக்க முடியவில்லை. உடனே இயேசு அவர்களிடம் படகின் வலதுபுறமாக வலையைப் போடச் சொன்னார். அவருடைய ஆலோசனையின்படி சீஷர்கள் போட்டபோது திரளான மீன்கள் கிடைத்தது. வலையை இழுக்க முடியாத அளவுக்கு மீன்களைப் பிடித்தனர். ஆனால் வலை கிழியவில்லை. அது உறுதியாயிருந்தது. இயேசுவுக்கு அன்பாயிருந்த யோவான், சீமோன் பேதுருவிடம் கரையில் நின்று கொண்டிருப்பது கர்த்தர் என்றான். பேதுருவிடம் காணப்படாத ஒரு ஆவிக்குரிய அறிவு யோவானிடம் காணப்பட்டதைப் பார்க்கிறோம். யோவான் காத்திருப்பவர் கர்த்தர் என்றதால் பேதுரு படகு கரைக்கு வருகிற வரை காத்திருக்க முடியாமல் தன்னுடைய மேல்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலில் குதித்து இயேசுவிடம் வந்தான்.
படகு கரையிலிருந்து 200 மீட்டர் தூரத்திலிருந்ததால், படகிலிருந்த மற்றவர்கள் மீன்கள் இருந்த வலையை இழுத்து கொண்டு வந்தார்கள். மற்றவர்கள் படகு கரைக்கு வருகிறவரை காத்திருந்ததைப் போல பேதுருவால் காத்திருக்க முடியவில்லை. இதிலிருந்து இயேசுவிடம் பேதுருவுக்கு இருந்த அன்பைப் பார்க்கிறோம். அதனால் தான் இயேசு தனது வல்லமையை பேதுருவுக்கு கொடுத்து, அவனுடைய ஒவ்வொரு பிரசங்கத்திலும் 3000 பேர், 5000 பேர் என்று ஜனங்களை இரட்சிப்புடையச் செய்தார்.சீஷர்கள் கரைக்கு வந்தபோது கரி நெருப்பை மூட்டி, அப்பமும், மீனும் வைத்து இயேசு காத்திருந்ததைப் பார்க்கிறோம். அவர்களிடம் உள்ள மீன்களிலும் சிலவற்றைக் கொண்டு வரச்சொன்னார். உடனே பேதுரு 153 மீன்கள் கொண்ட வலையைக் கரையில் இழுத்தான். அந்தக் காலை வேளையில் சீஷர்கள் குளிருக்கு நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்துக்கு அனல் தேவையாயிருந்தது. அதனால் இயேசு கரிநெருப்பை வைத்திருந்தார். பசியோடிருந்தவர்களுக்கு போஜனத்தைக் கொடுத்து ஆவிக்குரிய தேவையோடு சரீரத்தேவையையும் பூர்த்தி செய்கிறார்.
பேதுருவிடம் “என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக” என்று கூறினார். எதைக்கொண்டு மேய்க்கக் கூறுகிறாரென்றால், கர்த்தருடைய வார்த்தையைக் கொண்டும், உயிர்த்தெழுந்த இயேசுவின் நற்செய்தியைக் கொண்டும் தான். இதில் இயேசு மூன்று விதமான காரியங்களை சீஷர்களுக்கு நினைவு படுத்துகிறார். திரளான மீன்களைப் பிடிக்கச் செய்து கடந்தகால அற்புதங்களை நினைவு படுத்திப் பலப்படுத்த நினைப்பூட்டுகிறார். அடுத்ததாக கரிநெருப்புக்கு முன்பாகத்தான் பேதுரு இயேசுவை மறுதலித்தார். பாவமன்னிப்பின் நிச்சயத்தைச் சொல்ல வைக்க இயேசு அங்கு வந்தார். பேதுருவைப் பார்த்து “நீ என்னை நேசிக்கிறாயா” என்று மூன்று முறை கேட்டு பேதுருவின் கையில் ஊழியத்தை மீண்டுமாய் ஒப்படைத்து அவருடைய ஆட்டுக்குட்டிகளையும், அவருடைய ஆடுகளையும் மேய்ப்பாயாக என்ற கனமான ஊழியத்தை ஒப்படைத்தார்.
இயேசுவின் எட்டாவது தரிசனம்: மத்தேயு 28 : 16 – 20
பதினொரு சீடர்களும் கலிலேயாவில் இயேசு தங்களுக்குச் சொன்ன மலைக்குப் போனார்கள். அங்கு இயேசுவைப் பார்த்து அவரைப் பணிந்து கொண்டார்கள். கல்லறையில் உயிர்த்தெழுந்த நம்பிக்கையைக் கொடுத்த இயேசு, மாலையிலே தேவ பலனைக் கொடுக்கும்படி அவர்களுக்குத் தரிசன மானார். அவர்களில் சிலர் சந்தேகப்பட்டனர். அப்பொழுது இயேசு ராஜாதி ராஜாவாக வானத்திலும் பூமியிலும் தனக்குச் சகல அதிகாரம் கொடுக்கப் பட்டிருப்பதை அவர்களுக்குக் எடுத்துரைத்தார். நமது ஆண்டவர் வானத்தையும் பூமியையும் சகல அதிகாரத்தோடும் ஆளுகை செய்கிறார் என்ற நிச்சயம் நமக்கு இல்லையென்றால் , நாம் புறப்பட்டுச் சென்று சீஷர்களை உருவாக்கும் பணியை மேற்கொள்ள இயலாது. நாம் சகல நாடுகளுக்கும் சென்று சுவிசேஷத்தை அறியாத மக்களுக்கு சுவிசேஷச் செய்தியை அறிவிப்பது மாத்திரமல்ல, அவர்களை சீஷர்களாக உருவாக்க வேண்டுவதும் நமது கடமையாகும். ஒரு சீஷன் தொடர்ச்சியாய் கற்றுக் கொள்ளக்கூடியவனுமாய் ஆண்டவராகிய இயேசுவைப் பின்பற்றுகிறவனுமாயிருக்க வேண்டும்.
இயேசுவின் அதிகாரத்தை நாமும் பெற்று ஜனங்களைக் கட்டியிருக்கிற சாத்தானின் மேலும், அவனது சகல வல்லமைகளின் மேலும் ஜெயமெடுத்து, ஜனங்களை விடுவித்து, சுவிசேஷப் பணியை கிறிஸ்து தந்த வல்லமையோடும் , அற்புத அடையாளங்களோடும் நாம் செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு சில முக்கியமான கட்டளைகளைக் கொடுத்தார். அது என்னவென்றால் நீங்கள் உலகமெங்கும் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷர்களாக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள் என்றும், தான் அவர்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி உபதேசம் பண்ணுங்கள் என்றும், உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் உங்களுடனே இருப்பேன் என்றும் கூறினார். இழந்து போன ஆத்மாக்களைத் தேடுகிற பணியில் ஈடுபடுகிறவர்களுக்கும், கர்த்தருடைய வார்த்தையின்படி போதிக்கிறவர் களுக்கும், இயேசு கூறும் நம்பிக்கையூட்டும் உறுதிமொழி இதுவாகும்.
இயேசுவின் ஒன்பதாவது தரிசனம்:
1கொரிந்தியர் 15 : 6 “அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.”
இயேசு கலிலேயாவுக்கு வருவேன் என்று கூறியதால் உண்மையாக அவரை விசுவாசித்தவர்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தில் கலிலேயாவுக்குச் சென்றிருக்கலாம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 500 பேருக்கும் அதிகமான நபர்களுக்கு இயேசு தரிசனமானார்.
இயேசுவின் பத்தாவது தரிசனம்:
1 கொரிந்தியர் 15 : 7 “பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.”
இந்த யாக்கோபு இயேசுவின் சகோதரன். யாக்கோபு நிருபத்தை எழுதினவன். இவனுக்கு தனிப்பட்ட விதத்தில் இயேசு தரிசனமானார் அதன்பின்பு அப்போஸ்தலர் எல்லோருக்கும் தரிசனமானார்.
இயேசுவின் 11 வது தரிசனம்:
அப்போஸ்தலர் 1 : 3 “அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.”
இயேசு உயிரோடு எழுந்த பின் அவர் காட்சியளித்த 10 காட்சிகளை இதற்கு முன்பு பார்த்தோம். இப்பொழுது அவர் சிலுவையில் பாடுபட்ட பின்பு 40 நாட்களும் அப்போஸ்தலர்களுக்குத் தரிசனமானார். அவர்களிடத்தில் தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளையும், அவர்கள் செய்ய வேண்டிய காரியங்களையும், போகவேண்டிய இடங்களையும் பற்றி பேசி, அனேக தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடு இருக்கிறவராகக் காண்பித்தார்..
கிறிஸ்து உயிரோடு எழுந்ததினால் நாம் பெறும் நன்மைகள்:
இயேசு எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் முற்றுமுடிய நம்மை இரட்சிக்க வல்லவர் – எபிரேயர் 7 : 25.
இயேசு உயிரோடெழுந்த தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான நம்முடைய சரீரங்களை உயிர்ப்பிப்பார் – ரோமர் 8 : 11.
இயேசு உயிர்த்தெழுந்ததினால் அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்திருந்த நம்முடைய ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறார் – எபேசியர் 2 : 1.
இயேசு உயிரோடெழுந்த பின் சீஷர்களுக்குச் சமாதானத்தை அருளினார் – யோவான் 20 : 19.
இயேசு உயிரோடெழுந்து நமது பயத்தை நீக்குகிறார் – வெளிப்படுத்தல் 1 : 17
இயேசு உயிரோடெழுந்து சுவிசேஷம் கூறும் ஊழியத்தைக் கொடுத்தார் – மத்தேயு 28 : 19, 20.
இயேசு உயிரோடெழுந்து தன்னை விசுவாசிப்பவர்களுக்கு வரங்களை அளிக்கிறார் – மாற்கு 16 : 17, 18.
இயேசு உயிரோடெழுந்து பரிசுத்த ஆவியை அனுப்புவதாக வாக்கு பண்ணினார் – லூக்கா 24 : 49.
இயேசுவின் உயிர்த்தெழுதலானது நாமும் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கை கிடைக்கிறது – எபிரேயர் 11 : 35.
இயேசு உயிர்த்தெழுந்ததினால் நமக்கு பாவமன்னிப்பு கிடைக்கிறது – 1 கொரிந்தியர் 15 : 3 – 8.
இயேசு உயிர்த்தெழுந்ததினால் நமக்கு புதிய வாழ்வு கிடைக்கிறது – ரோமர் 6 : 4.
இயேசு உயிரோடெழுந்து நம்மோடு கூட இருக்கிறார் – மத்தேயு 28 : 20.
இயேசு உயிரோடெழுந்து நமக்காக பிதாவிடம் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார் – ரோமர் 8 : 34.
இயேசு கிறிஸ்து மரணத்தின் அதிபதியை தன்னுடைய மரணத்தினால் வென்று அவனுடைய கைகளில் இருந்த மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோலைப் பிடுங்கினார். ஆகவே எந்த மரண பயமும் நம்மை நெருங்க முடியாது. இதைத்தான் இயேசு மார்த்தாள், மரியாளிடம்,
யோவான் 11 25, 26 “இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;”
“உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.”
பழைய ஏற்பாட்டில் முந்தின ஆதாம் மரணத்தைக் கொண்டு வந்தான். இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்து புதிய ஏற்பாட்டில் மரணத்தை வென்று உயிர்த்தெழுதலில் நம்பிக்கையைக் கொண்டு வந்தார். இதைத்தான் பவுலும்
1 கொரிந்தியர் 15 : 22, 23 “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.”
“அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” என்கிறார்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரிசி, இயேசுவானவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார் என்று ஏசாயா 25 : 8ல் தீர்க்கதரிசன மாகக் கூறினார். இயேசு உயிர்த்தெழுந்து பிதாவிடம் சென்று, பரிசுத்தஆவியான வரை நமக்கு அனுப்பாமல் இருந்திருந்தால், ஆவியானவரின் அனுபவத்தையும், அந்த சந்தோஷத்தையும் நம்மால் பெற்றிருக்க முடியாது. இளைப்பாறுதல் அடைந்திருக்க முடியாது. கிருபையைப் பெற்றிருக்க முடியாது. மகிமையால் நிரப்பப்பட்டிருக்க முடியாது. நித்தியஜீவனை சுதந்தரிக்க முடியாது. அவருடைய வருகையில் மறுரூபமாக்கப்பட முடியாது. கிறிஸ்து உயிரோடெழுந்ததினால் வரும் ஆசீர்வாதங்களை நாம் பெற்று கிறிஸ்துவைப் போல் மறுரூபமாக்கப்பட ஆயத்தமாவோம். ஆமென்.