அக்காலத்தில் இஸ்ரவேலில் ஆசாரிய பதவியும், அரச பதவியும் இரண்டு வேறுபட்ட உயர்பதவிகளாக இருந்தன. ஆசாரியப் பணியைச் செய்யத் துடித்த அரசராகிய உசியா தண்டிக்கப்பட்டதை, நாம் வேதத்தில் பார்க்கிறோம். ஆனால் கிறிஸ்துவில் இவையிரண்டும் ஒன்றிணைகின்றன. அரச கோத்திரமான யூதா கோத்திரத்தில் தோன்றிய மேசியா ஆசாரியராகவும் விளங்குவார். அவர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி (ஆதியாகமம் 14: 18 – 20) ஆசாரிய அரசராகவும் இருப்பார். ஆயிரம் ஆண்டு அரசாட்சியில் அது அனுபவமாகவும். தேவனுடைய ஆவியால் நித்திய அபிஷேகம் பண்ணப்பட்ட உன்னத தீர்க்கதரிசியாகவும், பிரதான ஆசாரியராகவும் ராஜாதி ராஜாவாகவும் இருக்கிறார் ( ஏசாயா 61: 1, யோவான் 3 : 34).
மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான ஆசாரியத்துவம் ஆரோனிய ஆசாரியத்துவத்தை விட மேலானதாக உயர்ந்து விளங்குகிறது. அது ஆபிரகாமையும் தாண்டி, அவரை விடவும் மேலானதாகி உலக மக்கள் அனைவருக்குமான உன்னதமான விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியாக நிற்கும் கிறிஸ்துவை தெளிவாகக் காட்டுகிறது. இதை எபிரேயர் 5 : 6 ,10 ,7 : 14,15, 28 , 8 : 1,2, 6 , 9 : 11 ல் காணலாம்.
இயேசு ஒருவரே தீர்க்கதரிசி என்ற பதவியையும், ஆசாரியர் பதவியையும், அரசர் என்ற பதவியையும் வகித்தவர். இயேசு தீர்க்கதரிசி என்பதை உபாகமம் 18 :15 – 19 ஐ யோவான் 5 : 45 – 47 உடன் ஒப்பிட்டால் தெரிந்து கொள்ளலாம். மத்தேயு 21: 11, 46 லூக்கா 4 : 23, 24 பகுதிகள் அவரை தீர்க்கதரிசி என்று காட்டுகின்றன. அவர் பல தீர்க்கதரிசனங்களை உரைத்துள்ளார். அவற்றில் முக்கியமானவை மத்தேயு 24 : 1 – 44, 25: 31 – 46ல் பார்க்கலாம்.
இயேசு ராஜாவானவர் என்பதை மத்தேயு 2 : 2, 25 : 34 – 40,, 27: 37 மாற்கு 15: 2 லூக்கா 19: 38, யோவான் 1 : 49, 12: 13 – 15 ,வெளிப்படுத்தல் 1 : 5, 19 : 16ல் காணலாம்.