மீகா 5 : 2 “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது.”
இது நிறைவேறியதை மத்தேயு 2 : 1, 5, 6, 21 : 5ல் காணலாம். மீகா தீர்க்கதரிசி இயேசு பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பே இதைக் கூறினார். இந்தப் பட்டணம் எருசலேமின் தெற்கில் 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பசும்புல்வெளிக்கு நடுவிலுள்ள உயர்ந்த பகுதியாக இது காணப்படுகிறது. பெத்லகேமுக்கு எப்பிராத்தா என்ற மற்றொரு பெயரும் உண்டு என்பதை ஆதியாகமம் 35 :19ல் காணலாம். எப்பிராத்தா என்றால் செழிப்பான இடம் என்று பொருள். பெத்லகேம் என்றால் அப்பத்தின் வீடு என்று பொருள். இயேசுவின் பிறப்பு தேவ திட்டத்தின்படி நடந்த ஒன்று என்று மீகா கூறுகிறார். இனி பெத்லகேம் வெறும் அப்பத்தின் வீடல்ல வான அப்பத்தின் வீடாக மாறுகிறது. ஜீவ அப்பமான இயேசு அங்கிருந்து புறப்பட்டு வந்ததால் பெத்லகேம் மேன்மை அடைந்தது. இயேசு மனிதனாகத் தோன்றுவதற்கு முன்பே, எல்லையற்ற காலமாக அனாதி நாட்களாக அவர் இருந்தார். தேவனாக அவருக்குத் தொடக்கமும் முடிவும் இல்லை. என்றென்றைக்கும் இருக்கிறவராகவே இருக்கிறார்.