யோவான் 1 : 1 – 5 “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.”
யோவான் அப்போஸ்தலர் இயேசுவை வார்த்தை என்று அழைத்து தனது சுவிசேஷத்தை ஆரம்பிக்கிறான். ஆதியிலே வானமும் பூமியும் படைக்கப் பட்டன. ஆனால் வார்த்தை படைக்கப்படவில்லை. வார்த்தையாகிய இயேசு எப்பொழுதுமே இருந்தார், இருக்கிறார், இருப்பார் (வெளிப்படுத்தல் 1 : 8, 11). தேவனுடைய வார்த்தையாக இருந்த அவர், மனிதனாக வந்த போது இயேசு என்று அழைக்கப்பட்டார் (யோவான் 1 : 14). ஆதியிலே அவர் தேவனோடிருந்தார். யாவுமே தேவனுடைய வார்த்தை மூலமாகத்தான் உண்டாயிற்று (கொலோசெயர் 1 : 16). உயிருள்ள யாவும் அவரால் உருவாக்கப்பட்டு உயிர் பெற்றன. நித்தியஜீவன் அவருக்குள் இருக்கிறது. அவராலே நாம் அதைப் பெற்றுக் கொள்கிறோம் (1 யோவான் 5 : 11, 12). ஜீவனாயிருக்கிற இயேசு நமக்கு ஜீவன் அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார் (யோவான் 10 : 28). இயேசுவே ஜீவன் என்பது மட்டுமன்றி, ஒளியாகவும் திகழ்கிறார் (யோவான் 1 : 4). கர்த்தர் தம்மைப் பின்பற்றுகிறவர்களை உலகிற்கு ஒளியாக மாற்றுகிறார் (எபேசியர் 5 : 8). சாத்தானின் அதிகாரத்திற்கும் பாவத்திற்கும் எதிராக கிறிஸ்துவின் ஒளி பிரகாசிக்கிறது. அவைகளால் கிறிஸ்துவின் ஒளியை மேற்கொள்ள முடியவில்லை.