“கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்” (சங்கீதம் 126:5).
கண்ணீரின் விதைகள் கெம்பீரமான அறுவடையைக் கொண்டு வரும். கண்ணீர் அவமானச் சின்னம் அல்ல. அது தேவ பெலத்தின் சின்னம். கிறிஸ்துவின் முன்மாதிரி சின்னம். அதுவே வெற்றியின் சின்னம். கண்ணீரோடு ஜெபிக்கிறவர்கள், கண்ணீரோடு ஊழியம் செய்கிறவர்கள். நிச்சயமாய் அதனுடைய பலனைக் காண்பார்கள்.
சரித்திரத்தை வாசித்துப் பாருங்கள். உத்தம ஊழியர்கள் அனைவரும் கண்ணீர் வடித்தவாரே பிரசங்கித்தார்கள், ஊழியஞ்செய்தார்கள். அந்தக் கண்ணீரின் ஜெபமும் பிரசங்கமும் ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை மனந் திரும்பச் செய்தது. பெரிய எழுப்புதலைக் கொண்டு வந்தது. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த பிரபல ஊழியராகிய சாது கொச்சு குஞ்சு கெம்பீரமாய் பேசினாலும் பாவத்தைக் கண்டித்து உணர்த்தினாலும், முடிவில் ஆத்துமாக்களுக்காக கண்ணீர் விட்டு அழுவார். அவருடைய சீஷனான கே.வி. செரியன் அவர்களும் உருகி பிரசங்கிப்பார். கேட்கிறவர்களும் கண்ணீர்விட்டு கிறிஸ்துவுக்குத் தங்களை ஒப்புக்கொடுப்பார்கள். அவர் எங்கே பிரசங்கித்தாலும் அங்கே உயிர்மீட்சி வந்து விடும். மிக எளிமையான ஊழியராய் இருந்தாலும் பல தியாகங்களை அவர் செய்து உண்மையும் உத்தமமுமாய் உழைத்தார்.
மேல் நாட்டிலேகலோனல் கிளார்க் என்ற ஒரு ஊழியர் இருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் ஊரின் எல்லையிருந்த ஒரு சமுக கூடத்தை வாடகைக்கு எடுத்து கண்ணீரோடு பிரசங்கிப்பார். மேடைக்கு வரும் முன்னால் அந்தரங்கத்தில் அழுவார், ஜெபத்தில் அழுவார். ஆத்துமாக்களுக்குத் தரும் ஆலோசனையிலும் அழுவார். அவருடைய பிரசங்கம் உப்புச் சப்பு இல்லாமல் சாதாரணமாய் இருந்தாலும் முடிவில் குடிகாரர், திருடர், சூதாடுகிறவர் கண்ணீரோடு ஒப்புக் கொடுத்து மனந்திரும்புவார்கள். ஆரம்பக் காலத்தில் கண்ணீர் விடுவது தனக்கு அவமானம் என்று அடக்கி வைக்க முயற்சித்தாராம். அந்த நாட்களில் ஆவியானவருடைய கிரியை இல்லை. கூட்டங்கள் மிகவும் தோல்வியடைந்தன. அன்று இரவே ஆண்டவரே, கண்ணீரின் ஆவியை எனக்குத் தாரும் என்று கதறி அழுதார். நொறுங்குண்ட ஆவியையும், விண்ணப்பத்தின் ஆவியையும், கண்ணீரின் மன்றாட்டையும் பெற்றுக்கொண்டார்.
உலகத்தில் உங்களுக்கு உபத்திரங்கள் உண்டு, பாடுகளும் உண்டு. ஆனாலும் தேவனுடைய பிள்ளைகள் அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்கிறார்கள். யோபு பக்தன் சொன்னார், ”என் சிநேகிதர் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது” (யோபு 16:20). தாவீதின் அனுபவமும் அதுதான். ”என் பெரு மூச்சியினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்” (சங்.6:6). அப். பவுல் கண்ணீரோடு ஊழியம் செய்தார். ”நான் மூன்று வருஷ காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்தி சொல்லிக்கொண்டு வந்ததை நினைத்து விழித்திருங்கள்” (அப். 20:31). தேவனுடைய பிள்ளைகளே, கண்ணீரோடு ஜெபித்து ஊக்கத்தோடு ஊழியம் செய்வீர்களா.