“உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன்” (ஆதியாகமம் 30:27).
சிலர் நிமித்தம் நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். யாக்கோபின் நிமித்தம்தான் ஆசீர்வதிக்கப்பட்டதாக லாபான் மனம் திறந்து பேசுகிறதை சற்று சிந்தித்துப் பாருங்கள். கர்த்தருடைய ஆசீர்வாதம் யாக்கோபோடு இருந்ததினாலே யாக்கோபு எங்கெங்கெல்லாம் சென்றாரோ அங்கெங்கெல்லாம் அவரைச் சூழ இருந்த மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.
யோசேப்பைப் பாருங்கள். யோசேப்பின் நிமித்தம் அவருடைய முழுக் குடும்பமும் ஆசீர்வதிக்கப்பட்டது. மட்டுமல்லாமல், யோசேப்பு எங்கெங் கெல்லாம் சென்றாரோ அங்கெங்கெல்லாம் ஆசீர்வாதம்தான். ஆதி39:5ம் வசனம் சொல்கிறது; “கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது.” மட்டுமல்ல, யோசேப்பின் நிமித்தம் பார்வோனும் ஆசீர்வதிக்கப்பட்டான். எகிப்து தேசமே ஆசீர்வதிக்கப்பட்டது. கொடிய பஞ்சத்திற்குத் தப்பியது.
அதே நேரத்தில் சிலர் நிமித்தம் துன்பங்களும், துயரங்களும், சாபங்களும் வருகின்றன. கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் போன ஒரு ஆகானின் நிமித்தம் முழு இஸ்ரவேலரும் தோல்வியைக் கண்டார்கள். கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாத ஒரு யோனாவின் நிமித்தம் கப்பலில் பிரயாணம் பண்ணின அத்தனை பேரும் வேதனைப்பட்டார்கள். சரக்குகள் சேதமானது. கடல் கொந்தளித்தது.
அருமையான தேவனுடைய பிள்ளைகளே, ஒரு நிமிடம் உங்களை ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் குடும்பத்துக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவருகிறவர்களாய் இருக்கிறீர்களா? அல்லது சாபத்தைக் கொண்டு வருகிறவர்களாய் இருக்கிறீர்களா? உங்களால் உங்கள் குடும்பத்தினர் சந்தோஷம், சமாதானம், மகிழ்ச்சியும் அடைகிறார்களா? அல்லது வேதனையும், துக்கமும், கண்ணீரும், சஞ்சலமும் அடைகிறார்களா?
கர்த்தர் ஆபிரகாமை அழைத்தபோது, அவன் நிமித்தம் உலகமே ஆசீர்வாதம் அடையும் என்பதை வாக்குப்பண்ணினார். “உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப் படும் என்றார்” (ஆதி. 12:3). ஆபிரகாமின் நிமித்தம் எத்தனை ஆசீர்வாதம் பார்த்தீர்களா? பூமியிலுள்ள வம்சங்கள் எல்லாம் அவர் நிமித்தம் ஆசீர் வதிக்கப்படும் என்று கர்த்தர் சொன்னது எத்தனை அருமையாய் இருக்கிறது.
பிதாவாகிய தேவனை நோக்கிப் பாருங்கள், தன்னுடைய குமாரனை பூமிக்கு அனுப்பிக் கொடுத்ததின் நிமித்தம் நம்மேல் வைத்த அன்பை வெளிப்படுத்தினார். தம்முடைய ஒரே பேறான குமாரனையே நமக்காக சிலுவையிலே அர்ப்பணித்ததின் நிமித்தம் அவர் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். தேவ பிள்ளைகளே, உங்கள் நிமித்தம் உங்கள் குடும்பமும் தேசமும் ஆசீர்வதிக்கப்படும்படி கிறிஸ்துவை உங்களுடைய உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது நித்தியமான ஆசீர்வாதங்கள் உங்களைச் சூழ்ந்து கொள்ளும்.