சகரியாவுக்கு தேவன் அழுக்கு வஸ்திரம் தரித்து தூதனுக்கு முன்பாக நின்ற யோசுவாவைக் காண்பித்தார். அவனுக்கு விரோதமாக சாத்தான் அவனுடைய வலது பக்கத்தில் நின்றான். யோசுவா பாவமென்னும் அழுக்கான உடை அணிந்திருந்ததால் சாத்தானை எதிர்க்க முடியவில்லை தேவன் யோசுவாவுக்கு விலையுயர்ந்த ஆடைகளையும், தலைப்பாகையையும் அணிவித்தார். இது முழுமையான ஆசாரிய ஊழியத்தைத் திரும்பப் பெறுவதைக் குறிக்கிறது. இஸ்ரவேலின் பாவம் கழுவப்பட கிளை எனப்பட்ட கிறிஸ்து தன்னையே பானபலியாக ஒப்புக்கொடுத்து, மரித்து உயிர்த்தெழுந்து சாத்தானைத் தோற்கடித்தார் – ஏசா 53:1 – 6 கர்த்தர் யோசுவாவிடம் அவரது வழிகளில் நடந்தால் ஆலயத்தில் யோசுவா நியாயம் விசாரித்து, ஆலயப்பிரகாரங்களின் காவலைக் காத்து, தூதர்கள் பணிவிடை செய்யும் பரலோக தேவனிடம் தடையின்றிச் செல்ல முடியும் என்றார். மேலும் யோசுவாவுக்கு முன் வைத்த கல்லையும் அந்தக் கல்லின் மேல்வைத்திருந்த ஏழு கண்களையும் சகரியாவுக்குக் காண்பித்தார். அந்தக் கல் மேசியாவையும், ஏழு கண்கள் உள்ளறிவின் முழுமையையும், எங்கும் நிறைந்திருக்கும் தன்மையையும் தெய்வீக அறிவையும் குறிக்கின்றன. சிலுவையிலே பாவத்துக்கான பரிகாரத்தை இயேசு நிறைவேற்றும் போது ஒரே நாளில் பாவத்தை அகற்றுவார் – சக 3:1 – 10