எகிப்தியரின் சேனை துரத்தி வருவதைப் பார்த்த இஸ்ரவேலர் முறுமுறுத்தனர். அதற்கு மோசே அவர்களிடம் பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.”
“கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.”
அப்பொழுது இஸ்ரவேலருக்கு முன்னால் நடந்த தேவதூதனானவர் விலகி பின்னாக நடந்தார். அவர்களுக்கு முன்னிருந்த மேகஸ்தம்பம் விலகி அவர்களுக்கு பின்னே வந்து, இரண்டு சேனைகளும் சேராதபடி நின்றது. எகிப்தியருக்கு அது மேகமும், அந்தகாரமுமாய் தடுமாறச் செய்யும் இருளாயிருந்தது. இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கி பாதை காட்டியது. மோசே தன் கையை சமுத்திரத்தின் மேல் நீட்டியபோது, கர்த்தர் கீழ்காற்றை வரவழைத்து சமுத்திரம் ஒதுங்கும்படி செய்தார். அதை வறண்டு போகப் பண்ணினார். ஜலம் பிளந்து, பிரிந்தது. வலது புறத்திலும், இடதுபுறத்திலும் அவர்களுக்கு மதிலாக நின்றது. இஸ்ரவேலர் சமுத்திரத்தின் வழியாக நடந்து சென்றார்கள். மோசே திரும்பி தன் கையை சமுத்திரத்தின் மேல் நீட்டியபோது சமுத்திரம் பலமாய் திரும்பி வந்து சமுத்திரத்தில் பிரவேசித்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது. அவர்கள் ஒருவனாகிலும் தப்பவில்லை – யாத் 14:21-31