இயேசு செய்த அற்புதங்கள்

யவீருவின் மகளை உயிரோடெழுப்பினார்

மத்தேயு 9:18, 19, 23-26; மாற்கு 5:22-24, 35-43; லூக்கா 8:41, 42, 49-56

ஜெபஆலயத்தலைவனின் வேண்டுகோள்:

மாற்கு 5 : 22, 23  “அப்பொழுது, ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்து:”

“என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியமடையும்படிக்கு நீர் வந்து, அவள்மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.”

பாலஸ்தீனா  தேசத்தில்  உள்ள  கப்பர்நகூம்  பட்டணத்தில்  இந்த  அற்புதம்  நடந்தது.  இந்த கப்பர்நகூமில் இயேசு  அநேக  அற்புதங்களைச் செய்திருக்கிறார். குறிப்பாக  யோவான்  4ம்  அதிகாரத்தில்  ராஜாவின்  மனுஷனுடைய  மகனுக்கு  அற்புத  சுகத்தைக்  கொடுத்தார்.  மாற்கு  1ம்  அதிகாரத்தில்  ஜெபஆலயத்தில்  அமர்ந்திருந்த  அசுத்தஆவி  பிடித்த  மனிதனுக்கு  சுகம்  கொடுத்ததைப் பார்க்கிறோம்.  ஒவ்வொரு  பகுதியிலும்  யூதர்களுக்கு  ஒரு  ஆலயம்  இருக்கும்.  அதற்கு  ஜெப  ஆலயம் என்று  பெயர்.  இயேசு லேகியோன் என்ற பிசாசு பிடித்த மனிதனுக்குள்ளிருந்த அனேக பிசாசுகளைத் துரத்தின பின் மறுபடியும் இக்கரைக்கு வந்தார். அப்பொழுது யவீரு  என்னும் பெயர் கொண்ட ஜெபஆலயத்தலைவன்  இயேசுவிடம் வந்தான். இவன்  மனாசே  கோத்திரத்தைச் சேர்ந்த  யூதன்.  கப்பர்நாகூமில்  வசிப்பவன்.  இவன்  மிகவும்  கனத்துக்குரியவன், வசதி  படைத்தவன்.  

இவனுக்கு  ஒரே  ஒரு  மகள்  இருந்தாள்.  அவளுடைய  வயது 12.  அவள்  மரண  அவஸ்தைப்  படுவதைத்  தாங்கக் கூடாமல்  அழுதான்.  அப்பொழுது  இயேசு  கப்பர்நகூமிற்கு  வருகிறார்  என்று  கேள்விப்பட்டான். தன்னுடைய குமாரத்தி வியாதியாயிருக்கிறாள் என்று கூறாமல், மரண அவஸ்தைப்படுவதாகக்  கூறினான். (மத்தேயுவில் இப்பொழுது மரித்து விட்டாள்  என்றுள்ளது) இயேசு வந்து  அவருடைய கைகளைத்  தன் மகளின் மேல் வைத்தால், அவள் ஆரோக்கியம் அடைவாளென்றும், பிழைத்துக் கொள்வாளென்றும் கூறினான். இந்த ஜெபஆலயத்தலைவன் ரோம அலுவலகத்தில் வேலை செய்கிறவன். இவன் ஆசாரியனின் பலிகளைச்  செலுத்தக் கூடியவன், பழைய ஏற்பாட்டை நன்றாகத் தெரிந்தவன், மனிதர்களுக்குத்  தேவனைக் குறித்து போதிக்கிறவன், தெய்வ பக்தியுள்ளவன்.  இவனுடைய  வேலை  ஜெபஆலய  ஆராதனையை  சரியானபடி  கண்காணிப்பது,  ஆராதனைக்குள்ள  ஒழுங்குகளையெல்லாம்  செய்வது,  ஜெபஆலய  சம்பந்தமான  நடவடிக்கைகளையெல்லாம்  கண்காணிப்பது  என்பதாகும்.  

இத்தனை  தகுதிகளிருந்தும்  தன்னுடைய  மகளுக்கு  உதவ  முடியவில்லை.  அப்படிப்பட்ட இந்த மனிதன் தன்னுடைய  அந்தஸ்தைப்  பார்க்காமல்  ஆளனுப்பி  இயேசுவைத்  தன்னிடம்  வரச் சொல்லாமல்  தானே  நேரில்  இயேசுவிடம்  வந்தான். அப்பொழுது  யூதர்கள்  இயேசுவிடம்  செல்லக்கூடாது  என்ற  கட்டுப்பாடு  இருந்தது.  யவீருவோ  அதையெல்லாம்  மீறி  இயேசுவிடம்  வந்தான்.  இவன்  ஜெபஆலயத்தலைவனாக  இருந்தபோது  இயேசுவை  எதிர்த்திருக்கலாம்.  ஆனால்  நெருக்கடி  வந்த  பொது  இயேசுவைத்  தேடி  வந்தான்.  அப்பொழுது  இயேசு  அவனைக்  கடிந்து  கொள்ளாமல்  அவனோடு  அவனுடைய  வீட்டிற்கே  சென்று  இந்த அற்புதத்தைச்  செய்தார்.  நாமும்  முன்னால் இயேசுவை  வெறுத்திருக்கலாம்.  நம்முடைய  பாடுகள்,  வேதனைகள்  மத்தியில்  இயேசுவைத்  தேடிச் செல்லும்  பொது நம்மை  வெறுக்காமல்  ஏற்றுக்கொள்வார்.  இவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து பணிந்து கொண்டதைப்  பார்க்கிறோம். 

யாராயிருந்தாலும் இயேசு வணங்கத்தக்கவர் என்பதை யாவரும் அறியும்படியாக ஜெபஆலயத்தலைவனின் செயல் அமைந்தது. பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடான கிறிஸ்துவின் கால்களில் விழுந்ததைக்  காண்பிக்கிறது. மோசேயின் நியாயப்பிரமாணம் சிலுவையில் முடிந்ததைக்  காண்பிக்கிறது. இயேசு  ராஜாதி ராஜா என்பதைக் காண்பிக்கிறது. இயேசுவின்  வல்லமைக்கு முன் பலிகள்  ஒன்றுமில்லை என்றும், இயேசுவுக்கு முன்பாக நியாயப்பிரமாணமும் ஒன்றுமில்லை என்றும்  அறிந்து கொண்டான்.  லூக்கா  13 : 14 ல்  ஒரு  ஜெப  ஆலயத்ததலைவன்  இயேசு  ஓய்வுநாளில்  அற்புதம்  செய்வதைப் பார்த்து  கோபமடைந்து  ஓய்வுநாளில்  எதுவும்  செய்யக்  கூடாது  என்றதை  பார்க்கிறேம்.

பெரும்பாடுள்ள ஸ்திரீ சுகம் பெற்றாள்:

மாற்கு 5 : 24 “ இயேசு அவனோடேகூடப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்று, அவரை நெருக்கினார்கள்.”

இயேசு ஜெபஆலயத்தலைவனின் வேண்டுகோளுக்கு இணங்கி அவனோடு  கூடப்  போனார். ரோம சாம்ராஜ்யத்தின் அலுவலராயிருந்தாலும், ஜெபஆலயத்  தலைவனாயிருந்தாலும், கானானியப்  பெண்ணாயிருந்தாலும், பாவியான பெண்ணாயிருந்தாலும், கள்ளனாயிருந்தாலும் இயேசு எல்லோரின் வேண்டுதல்களையும் கேட்பவராக  இருப்பதை  அறிகிறோம். அப்போது திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில்  பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, தன்னுடைய குணமாகாத வியாதியினால், இயேசுவின் வஸ்திரத்தின்  ஓரத்தைத்  தொட்டுக்  குணம் பெற்றாள். அதனால்  இயேசுவின் பிரயாணம் தாமதமானது.

ஜெபஆலயத்தலைவனுக்கு வந்த செய்தி:

மாற்கு 5 : 35 “இயேசு இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத் தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப் போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுகிறீர்  என்றார்கள்.”

பெரும்பாடுள்ள பெணணால் இயேசுவின் பிரயாணம் காலதாமதமானதால் யவீரு  மிகவும் வேதனைப் பட்டாலும், இயேசுவிடம் தன்னுடைய கஷ்டத்தைக்  கூறிவிட்டதால் காலம் தாழ்ந்தாலும், இயேசு  பார்த்துக்கொள்வார் என்ற விசுவாசத்துடன் இருந்தார். ஆனால் அவருடைய  வீட்டிலிருந்து தன்னுடைய மகள் மரித்து விட்டதாகச்  செய்தி வந்தது. போதகரை அழைத்து வர வேண்டாம் என்று அந்தச் செய்தியில் கூறினர். ஒரு மணி நேரம் முன்னால் போயிருந்தால்  என் மகள் பிழைத்திருப்பாள் என்று அந்தத் தகப்பன் கலங்கி இருப்பான். அதனால் யவீரு  நம்பிக்கை இழந்திருப்பதைப்  பார்த்த இயேசு அவருடைய விசுவாசத்தை ஊக்குவிக்க எண்ணினார்.

இதேபோல் கர்த்தர் விசுவாசத்தை ஊக்குவித்துச்  செயல்பட்டதைப்  பல இடங்களில் காணலாம். அதில் சிலவற்றை இங்கு கூற விரும்புகிறேன். ஆபிரகாம் ஈசாக்கைப்  பலியிடச்  சென்றபோதும் (ஆதியாகமம் 22 :2, யாக்கோபு 2 : 21, 22) மோசே செங்கடலைப்  பிளக்க இருந்த போதும் (யாத்திராகமம் 14 :10 – 22) தாவீது கோலியாத்தை வீழ்த்த நினைத்தபோதும் (1 சாமுவேல் 17 :44 – 47) யோசபாத் அமோனியரையும், மோவாபியரையும்,  சேயீர் மலை தேசத்தாரையும் வீழ்த்த  நினைத்தபோதும் (2 நாளாகமம் 20 :1,2,15) கர்த்தர் இவர்களின் விசுவாசத்தை ஊக்குவித்து செயலில் இறங்க வைத்து ஜெயம் பெற வைத்தா.ர் இந்த அற்புதத்திலும்  யவீருவின் விசுவாசத்தை ஊக்குவித்தார். இயேசுவோடு  நாம்  நடக்கிற  விசுவாசப்  பாதையில்  இதேபோன்ற  துர்செய்திகள்  வரும்.  நஷ்டம்,  தோல்வி,  சாவு  என்றெல்லாம்  வரும்.  பயப்படாமல்  தைரியமாக  இருக்க  வேண்டும்.  நம்முடைய  வாழ்க்கையிலும்  சில  காரியங்கள்  தேவனிடம்  கேட்டுத் தாமதமாகலாம்.  அது  நன்மைக்காகத்தானென்று  விசுவாசத்துடன்  காத்திருக்க  வேண்டும்.  அதற்கு  கலங்கவோ,  முறுமுறுக்கவோ  கூடாது.  நாம்  எதிர்பார்ப்பதைவிட  அதிகமான  ஒன்றைக் கொடுப்பதற்காகத்தான்  தாமதம்  பண்ணுவார்.  

இயேசுவின் ஆறுதலான வார்த்தைகள்:

லூக்கா 8 : 50 “ இயேசு அதைக் கேட்டு:  பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள்  என்றார்.”

இயேசு ஜெபஆலயத்தலைவனின் விசுவாசத்தைத்  தூண்டுவதற்காக பயப்படாதே என்றும், விசுவாசமுள்ளவனாயிரு என்றும் கூறினார். விசுவாசத்துடன் இருப்பாயானால் உன்னுடைய மகள் இரட்சிக்கப்படுவாள்  என்றும்  வாக்குறுதி அளித்தார். ஏனென்றால்  அவன்  கேட்ட  துர்ச்செய்தி  அவனுக்குள்ளிருக்கும்  விசுவாசத்தைக்  கெடுத்து  அவிசுவாசம்  வந்துவிடக்கூடாது  என்று  இயேசு  துரிதமாக  பயப்படாதே  என்கிறார்.  சொன்னதோடு  நில்லாமல்  யோசுவா  1 : 5  “நான்  உன்னோடு  கூட  இருப்பேன்”  என்று  வாக்குரைத்த  தேவன்  அவனோடு கூடச்  சென்றார். இயேசு  தன்னோடு  வருவதால்  கண்டிப்பாக  அற்புதம்  நடக்குமென்ற  நம்பிக்கையோடு  தகப்பன்  சென்றிருப்பான். இயேசு சுகமாக்குகிறவர் மட்டும் அல்ல, நம்முடைய உணர்வுகளை, பாசத்தை, வேதனைகளைப் புரிந்து கொள்கிறவர். இதேபோல் கர்த்தர் குணமாக்கும் இடங்களிலும், லாசருவை உயிரோடு எழுப்பிய போதும், விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று கூறி அற்புதங்களைச்  செய்ததை வேதத்தில் பல இடங்களில் பார்க்கிறோம். மாற்கு 9 : 23 ல் “நீ  சுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்.” என்று இயேசு தன்னுடைய வாயால் கூறியதைப்  பார்க்கிறோம்.

இயேசு ஜெபஆலயத்தலைவனின் வீட்டில்:

மாற்கு 5 :37 – 39 “இயேசு பேதுருவையும்,யாக்கோபையும்,யாக்கோபின்  சகோதரன்  யோவானையும் தவிர, வேறொருவரும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல்; ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து, சந்தடியையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு,உள்ளே பிரவேசித்து: நீங்கள் சந்தடிபண்ணி அழுகிறதென்ன? பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிரு க்கிறாள்  என்றார்.”

இயேசு ஜெபஆலயத்தலைவனின் வீட்டிற்குச் சென்றார்.  யூத  பரம்பரையில் மரித்தவர்களை  அன்றே  அடக்கம்  பண்ண  வேண்டும்.  அங்கு அனைவரும் கூடி துக்கத்தோடு அழுது கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்களைப் பார்த்து பிள்ளை மரிக்கவில்லை நித்திரையாயிருக்கிறாள் என்றார். இந்த வார்த்தை  யவீருவுக்கு  மிகவும்  ஆறுதலாய்  இருந்திருக்கும்.  லாசரு  மரித்து  அடக்கம்  பண்ணின  பின்  அங்கு  வந்த  இயேசு  லாசரு  நித்திரையாயிருக்கிறான்  என்றுதான்  கூறினார். இங்கும்  அதே  வார்த்தையைப்  பயன்படுத்துகிறார்.  மனிதர்களின்  பார்வையில்  அவர்கள்  மரித்து  விட்டார்கள்.  ஆனால்  ஆண்டவரின்  பார்வையில்  அவர்கள்  நித்திரையாயிருக்கிறார்கள்.  மரித்துப்  போனவளை  எழுப்பப்  போகிறேன்  என்று  சொல்லவில்லை.  இயேசு தம்மோடு வீட்டிற்குள் நுழைவதற்கு யாக்கோபு, பேதுரு, யோவானை  மட்டும் தான் அழைத்தார். ஏன் அவர்கள் மூவரை மாத்திரம் உள்ளே அழைத்துக்கொண்டு போனாரென்றால் இவர்கள் மூவரும் இயேசுவை அளவில்லாமல் நேசித்தவர்கள். இந்த மூவரையும் நம்பி  இயேசுவால் எந்த  உத்தரவாதத்தையும் கொடுக்க முடியும். கெத்சமெனே தோட்டத்தில் தன் இருதயத்தின் வியாகூலங்களை  இந்த மூன்று பேரிடம்  தான் பகிர்ந்துகொண்டார். 

இயேசு சிறுபெண்ணைப் பார்த்துக் கூறியது:

மாற்கு 5 : 40,41 ”அதற்காக அவரைப்  பார்த்து நகைத்தார்கள். எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தம்மோடே வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளையிருந்த இடத்தில் பிரவேசித்து, பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி  என்றார்; அதற்கு, சிறு பெண்ணே  எழுந்திரு  என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.”

இயேசு பிள்ளை நித்திரையாயிருக்கிறாள் என்று கூறியதால், அங்குள்ளவர்கள் மரித்த பிள்ளையைப் பார்த்து நித்திரையாயிருக்கிறாள் என்று கூறுகிறாரே என்று நகைத்தார்கள். இயேசு வந்துவிட்டால் இந்தப் பிள்ளையை எழுப்புவார் என்று யாரும் விசுவாசிக்கவில்லை. எனவே அவர்களனைவரையும் இயேசு வெளியே போகச் சொன்னார். பிள்ளையின் தகப்பனையும், தாயையும், தம்மோடு கூட வந்த மூன்று பேரையும் கூட்டிக்கொண்டு பிள்ளையைப்  படுக்க வைத்திருந்த இடத்திற்குள் இயேசு நுழைந்தார். மரித்த பிள்ளையின் கையைப் பிடித்து சிறு பெண்ணை எழுந்திரு (தலீத்தாகூமி) என்றார். இதேபோல்  லூக்கா  7 : 14 ல் நாயீன்  ஊரிலுள்ள  விதவையின்  மகன்  இறந்து  சடலத்தை  பாடையில்  தூக்கி  வரும்போது,  அங்கு  அவர்களை  பார்த்த  இயேசு  கிட்டப்போய்  பாடையைத்  தொட்டு  வாலிபனே  எழுந்திரு  என்றார்  மரித்தவன்  எழுந்து  உட்கார்ந்ததைப்  பார்க்கிறோம்.  

தலீத்தாகூமி என்பது  ஒரு லத்தீன் வார்த்தை. ரோமர்கள் மத்தியில் தினமும் பயன்படுத்தப்படுகிற வார்த்தை. பரலோகத்திலிருந்து வந்த  இயேசு  பரலோக  மொழிகளைப் பேசாமல்  பூமிக்குரிய  மொழியையே  பேசினார்.  மாற்கு  7 :  34  ல்  கொன்னைவாயுடைய  செவிடனை  சுகமாக்கும்  போதும்  “எப்பத்தா’  என்றார்.  எப்பத்தா  என்றால்  “திறக்கப்படுவாயாக”  என்று  பொருள்.  இயேசு  சிலுவையில்  தொங்கிக்  கொண்டிருக்கும்  போதும்  “எலோயே எலோயீ  லாமா  சபக்தானி”  என்று  மாற்கு  15 :  34  ல்  கூறினார் அதற்கு  “என்தேவனே  என்தேவனே  ஏன்  என்னைக்  கைவிட்டீர்”  என்று  பொருளாகும்.  இயேசு  பேசிய  இந்த  வார்த்தைகளை  மாற்கு  தனது  புத்தகத்தில்  குறிப்பிடக்  காரணம்  அந்நாட்களில்  பாலஸ்தீனர்களின்  மூல மொழியாக  அராமிக்  மொழி  இருந்ததால்.  இயேசுவும்  அவரது  சீடர்களும்  அரேமிக்  மொழியை  அறிந்திருந்தனர்.  

இயேசு செய்த அற்புதம்:

மாற்கு 5 : 42, 43 “ உடனே சிறுபெண்  எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு  வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டு  பிரமித்தார்கள். அதை ஒருவரும் அறியாதபடி அவர்களுக்கு உறுதியாகக்  கட்டளையிட்டு அவளுக்கு ஆகாரம் கொடுக்கும்படி சொன்னார்.”

இயேசுவின் சத்தத்தைக் கேட்டு, மரித்த அந்த பன்னிரண்டு வயதுப்  பெண்ணின்  உயிர்  மறுபடியும்  அவள்  உடலுக்குள்  பிரவேசித்தது.  செத்துப்போன  சரீரம்  அனல்  கொண்டது.  உயிர்  பெற்று  எழுந்தாள்.. உடனே நடந்தாள். ஆண்டவரின்  வார்த்தைக்கு  அத்தனை  வல்லமை  இருந்தது. கர்த்தர்  தமது  வல்லமையினால்  காற்றையும்,  கடலையும்  அமர்த்தினார்,  மரித்தோரை  எழுப்பினார்.  குருடர்களைப் பார்வையடையச்  செய்தார்.  செவிடர்களைக்  கேட்கச்  செய்தார்.  தன்னுடைய  சீஷர்களைக்  காப்பாற்ற கடல்  மீது  நடந்தார்.  இப்படிப்பட்ட  வல்லமையுள்ள  தேவனை  நாம்  பற்றிக்கொள்ள  வேண்டும். அங்கிருந்த பெற்றோர்களும், சீஷர்களும் இயேசு உயிரோடு எழுப்பிய முதலாம் அற்புதத்தைப் பார்த்து மிகுந்த ஆச்சரியப்பட்டு பிரமித்தனர். லேவியராகமம்  21 :  11  ல்  பிரேதம்  கிடக்கிற  இடத்திற்குச்  செல்லவோ,  தொடவோ  செய்தால்  தீட்டு  என்றுள்ளது.  அந்தக்  கட்டளைகளையெல்லாம்  இயேசு  பார்க்காமல்  அந்தக்  குடும்பத்துக்குச் சமாதானத்தைக்  கொடுக்க  மரித்தவளைத்  தொட்டு  உயிர்ப்பித்தார்.  அதோடு அந்தப் பெண்ணுக்கு மிகவும் அக்கறையுடன் ஆகாரம் கொடுக்க இயேசு சொன்னதையும் பார்க்கிறோம்

ஓசியா  13 :  14 ல்  “அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; “  என்றதைப் போலவும்,  யோவான்  16  :  20  ல்  “  உங்கள்  துக்கம்  சந்தோஷமாக  மாறும்”  என்றதைப் போலவும் இயேசு  அந்த  மகளை  மரணத்தினின்று  விடுவித்து  அந்தக்  குடும்பத்தின்  துக்கத்தை  சந்தோஷமாக  மாற்றினார். இந்த அற்புதத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்று உறுதியாய் கட்டளையிட்டார்.  யவீருவின் விசுவாசம் அவருடைய மகளை உயிரோடெழுப்பச்  செய்தது. ரோமர்களின் கீழிருந்த போதும், யவீருவின் பெரிய விசுவாசம் அவனுடைய மகள் உயிரோடெழுந்ததைப் பார்க்கிறோம்.அதேபோல் நாமும் விசுவாசத்துடன் ஜெபத்தில் எதைக் கேட்டாலும் தருவேன் என்று வாக்களித்த ((மத்தேயு 21: 22) இயேசுவிடம் சாவுக்கேதுவாக இருக்கும் நமது சரீரத்தையும், செத்துக்கிடக்கும் நமது உணர்வுகளையும் இயேசுவின் கிருபையின்படி (சங்கீதம் 119 : 80) உயிர்ப்பிக்க மன்றாடுவோம். ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago