இயேசு செய்த அற்புதங்கள்

பிசாசு பிடித்த ஊமையனின் கட்டை அவிழ்த்தார்

ஊமையனின் கட்டை அவிழ்த்த அற்புதம்:

மத்தேயு 9 : 32,33  “அவர்கள்  புறப்பட்டுப்  போகையில், பிசாசு பிடித்த  ஊமையான ஒரு  மனுஷனை  அவரிடத்தில்  கொண்டு வந்தார்கள். பிசாசு  துரத்தப்பட்ட  பின்பு  ஊமையன்  பேசினான். ஜனங்கள்  ஆச்சரியப்பட்டு:  இஸ்ரவேலில்  இப்படி  ஒருக்காலும்  காணப்படவில்லை  என்றார்கள்.”

யவீருவின்  மகளை உயிரோடெழுப்பியபின்  2  அற்புதங்கள்  நடந்தது.  அதில்  இது  இரண்டாவது  அற்புதம்.  இயேசு  குருடர்களைப்  பார்வையடையச்  செய்ததால்,  அவர்கள்  தாங்கள்  பெற்ற விடுதலையை  அத்தேசமெங்கும்  பிரசித்தப்படுத்தியிருந்தனர். அங்கு  பிசாசு பிடித்த  ஒருவனை  இயேசுவிடம்  கொண்டு  வந்தனர். இயேசு  அவனைப்  பார்த்தவுடன்  அந்த மனிதனைப்  பேச விடாதபடி கட்டி வைத்திருந்தது  பிசாசு என்று  அறிந்தார்.  அசுத்த  ஆவிகள்  தான்  பிடித்துள்ள  நபருக்கு செவிடு, ஊமை, குருட்டுத்தன்மை  ஆகிய  பல  உடல்  ஊனங்களையும்,  பலவித  சுகவீனங்களையும்,  பெலவீனங்களையும்  கொண்டுவரக்கூடும்  (மத்தேயு 12 : 22, மாற்கு 9 : 25).  அந்தப் பிசாசின்  கட்டிலிருந்து அவனை  விடுவிக்க  முதலில் இயேசு  அந்தப்  பிசாசைத்  துரத்தினார். அவனுடைய  உடலிலிருந்து  பிசாசு வெளியேறியவுடன்  ஊமையாயிருந்தவன்  பேசினான்.  முற்றுமறிந்த இயேசுவால்  எதற்காக  அந்த  மனிதன்  ஊமையாக  இருக்கிறானென்பதை அறிந்து,  அதிலிருந்து  அவனை  விடுவித்தார்.  இதேபோல் இயேசு அசுத்த  ஆவிகளைத்  துரத்தினதை  மத்தேயு 12 : 22, 17 : 18, லூக்கா 8 : 32 லும், சீஷர்கள்  துரத்தினதை லூக்கா  10 : 17 லும், பவுல் துரத்தினதை அப்போஸ்தலர் 16 : 16 – 18 லும் பார்க்கிறோம். பிசாசுகளுக்கு  கிறிஸ்துவையும், அவருடைய உண்மையான  தொண்டர்களையும் நன்கு தெரியும் (மாற்கு  1 : 23 – 26, 5 : 7 – 8, அப்போஸ்தலர் 16 : 16, 17, 19 : 15).  காலம்  வரும்போது தாங்கள்  நரகத்தில்  தள்ளப்படப்போவதும்  தெரியும் (மத்தேயு 8 : 28, 29).  அவற்றின்  இறுதி  முடிவு  நித்திய  அக்கினியாகிய  நரகம்  ஆகும் (மத்தேயு 25 : 41). ஜனங்கள்  இஸ்ரவேலில் இதுவரை  இப்படிப்பட்ட  அற்புதம்  நடக்காததால்  அவரைப்  பார்த்து ஆச்சரியப்  பட்டனர்.

பரிசேயர்களின்  எண்ணம்:

மத்தேயு 9 : 34 “ பரிசேயர் இவன் பிசாசுகளின் தலைவனான  பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.”

பரிசேயர்கள்  குருடர்கள்  பார்வையடைந்ததையும், முடவர்களை  நடக்கச்  செய்ததையும், ஊமையனைப்  பேச வைத்ததையும்  மறுக்கவில்லை. ஆனால் பிசாசுகளைத்  துரத்தும்  போது  மட்டும்  எதிர்த்தனர். அதாவது  பிசாசின் வல்லமையினால் தான் இப்படிப்பட்ட  அற்புதங்களை  இயேசு  செய்கிறார் என்றனர்.  பரிசேயர்களில்  இரண்டு  வகையானவர்கள்  இருந்தனர்.  இதில்  அவர்கள் தேவனை  தூஷித்ததைப் பார்க்கிறோம். அதில்  ஒரு  கூட்டம்  இயேசுவைப்  பார்த்து  ஆச்சரியப்படுகிறது.  அதில் நிக்கோதேமு  என்ற  பரிசேயன்  இயேசுவைப்  பார்த்து,

யோவான் 3 : 2  “அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.”

இயேசு  பேசினதுபோல்  ஒருவனும்  ஒருக்காலும்  பேசியதில்லை  என்று யோவான்  7 : 46 ல்  கூறியதைப் பார்க்கிறோம். ஒரு  கூட்டம் இயேசுவைத்  தேவனாகப்  பார்க்கிறது.  இன்னொரு  கூட்டம்  இயேசுவைப் பிசாசுகளின்  தலைவனாகப்  பார்க்கிறது.  

இயேசு  யார்  என்பதைக் கடைசி  வரை  அவர்களால்  புரிந்து  கொள்ளவே  முடியவில்லை. இயேசுவைக்  குறை  சொல்வதிலும், குறை காண்பதிலும்  தான்  கண்ணும்  கருத்துமாக  இருந்தனர். நம்முடைய  ஊழியத்திலும்  குறை  சொல்லக்கூடிய  பலர்  இருப்பார்கள். இயேசு  அவர்களைக்  குறித்துக்  கவலைப்படாமல்,  அவர்களின்  வாக்குவாதங்களைக்  குறித்துக்  கவலைப்படாமல், பிதா தனக்குக்  கொடுத்த  பணியை  நிறைவேற்றியதைப்  போல  நாமும்  தேவன்  நமக்குக்  கொடுத்திருக்கும்  பணியை, தேவனுடைய சித்தத்தின்படி  செய்து  முடிக்கப் பிரயாசப்படுவோம். 

இந்த  அற்புதம்  இயேசு  செய்த  ஒன்பதாவது  அற்புதம். ஒரு  மனிதனைப்  பேசவிடாமல்  வைத்திருந்த  அசுத்த  ஆவியை  இயேசு  துரத்தி  அவனைப் பேச வைத்ததைப்  பார்க்கிறோம். பரிசேயர்கள்  இயேசு  செய்த  அற்புதங்களைக்  கண்ணால்  பார்த்ததால்  அவர்களால்  மறுக்க  முடியவில்லை.  ஆனால்  அதற்கு  அவர்கள்  கொடுக்கும்  விளக்கம்  தேவதூஷணமான  விளக்கம்.  கர்த்தர்  பிசாசுகளைத்  துரத்துவதற்கு  ஒவ்வொரு  விசுவாசிக்கும்  அதிகாரம் கொடுத்துள்ளார்.  அதை 

லூக்கா 10 : 19ல் “இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.”

என்று  கூறியதைப் பார்க்கிறோம். எனவே  நாம் “உலகத்திலிருக்கிறவரிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் என்று 1 யோவான் 4 : 4 ல்  கூறியுள்ளபடி  விசுவாசத்தோடு, எபேசியர் 6 : 11 – 18 கூறியுள்ள  சர்வாயுதவர்க்கங்களைத் தரித்துக்  கொண்டு தேவனுக்குக் கீழ்ப்படிந்து,  சாத்தானுக்கு  எதிர்த்து நிற்க வேண்டும்.  தெளிந்த புத்தியுள்ளவர்களாய் விழித்திருந்து பிசாசுக்கு  எதிர்த்து நிற்பது நமது கடமையாகும்.  எனவே நாம் விசுவாசித்துடன் இயேசுவின்  நாமத்தினால் தைரியத்தோடு பிசாசுகளைத் துரத்துவோம்.  நாம் மற்றவர்களைப்  பற்றிப்  பார்க்காமல், பிதா நமக்குக்  கொடுத்த பணியை  நிறைவேற்றி  முடிப்போம். ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago