இயேசு செய்த அற்புதங்கள்

சந்திரரோக நோயாளிச் சிறுவனைக் குணமாக்கினார்

மத்தேயு 17 : 14 – 18; மாற்கு 9 : 17 – 27; லூக்கா 9 : 38 – 42

சந்திரரோக வியாதி:

மத்தேயு 17: 14 – 16 “இயேசுவும் சீஷர்களும் ஜனங்களிடத்தில் வந்தபோது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான். அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவனைச்  சொஸ்தமாக்க  அவர்களால் கூடாமற்  போயிற்று  என்றான்.”

இயேசு  3  சீஷர்களுடன்  மலைக்குப்  போய்  மறுரூபமடைந்தார்.  அதை  பேதுருவும்,  யாக்கோபும்,  யோவானும்  கண்டனர். அதன்பின்  இயேசுவும் சீடர்களும் ஜனங்களிடம் வந்தபோது ஒரு மனுஷன் இயேசுவிடம் வந்தான்.  அந்த மனிதன் மிகவும் தாழ்மையுடன் இயேசுவுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு தன்னுடைய கஷ்டத்தைக் கூறினான். தன்னுடைய மகன் சந்திரரோகத்தினால் கொடிய வேதனைக்குள்ளாக  இருப்பதாகக்  கூறினான். இவருடைய மகன் மனநிலை சரியில்லாதவனாய், வலிப்பு நோயினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அசுத்த ஆவியின் செயலும் அவனுக்குள் இருந்தது. அதனால் அவன் அடிக்கடி தீயிலும், ஜலத்திலும் போய் விழுந்து விடுவான். நெருப்பும், தண்ணீரும் இந்த ஆவிக்கு மிகவும் பிடிக்கும். பிசாசுகள் தாங்கள் படித்த மனிதனை அவல நிலைக்குத் தள்ளுகின்றன. இந்த மனிதன் தன்னுடைய மகனை குணமாக்க இயேசுவின் சீஷர்களிடம் கூட்டிச்சென்றான். ஆனால் அந்த சீஷர்களுக்கு அந்த நோயைக்  குணமாக்க முடியாமல் போயிற்று.

இயேசு சீஷர்களிடம் கோபமடைந்தார்:

மத்தேயு17 : 17 “ இயேசு …விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.”  

மாற்கு 9 : 20 “அவனை இயேசுவினிடத்தில் கொண்டு வந்தார்கள். அவரைக் 

கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளி புரண்டான்.”

இயேசு சீஷர்களைப் பார்த்து “விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே” என்று கோபப்பட்டதைப்  பார்க்கிறோம். ஏனெனில் இயேசு தம்முடைய சீஷர்களுக்குப்  பிசாசுகளைத்  துரத்தும் அதிகாரத்தை ஏற்கனவே கொடுத்திருந்தார். அவர்களிடம் அந்த விசுவாசம் இல்லாததாலும், அவர்களுடைய ஆவிக்குரிய நிலமையைப்  பார்த்தும்  கோபப்பட்டார். நோயாளியை இயேசுவிடம் கொண்டுவந்தனர். அசுத்த ஆவியானது  இயேசுவைக்  கண்டவுடன் அந்த நோயாளியை மிகவும் துன்பப்படுத்தியது.  அவன் தரையில் விழுந்து புரண்டான். வாயில் நுரை தள்ளியது. அதற்குக் காரணம்  பிசாசு.  எந்தப்  பிசாசும்  இயேசுவுக்கு  முன்பாக  நிற்க  முடியாது.  இயேசுவைப்  பார்த்தவுடன்  அலறியடித்துக்  கொண்டு  ஓடும்.  மன நோயுற்றவர்களில்  மூன்று வகையினர் உண்டு 1. உண்மையாக மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள். 2.பிசாசின் தொல்லையினால் மனநோயாளிகளைப்  போல இருப்பவர்கள். 3. மனநோயோடு பிசாசின் தொல்லையும் சேர்ந்து இருப்பவர்கள். இவனுக்கு மனநோயோடு பிசாசின் தொல்லையும் சேர்ந்து இருந்ததால், அது அவனை அலைக்கழித்தது.

தகப்பனின் மன்றாட்டு:

மாற்கு 9 : 21, 22 “ இயேசு அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலம் ஆயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயது முதற்கொண்டே உண்டாயிருக்கிறது; இவனைக்  கொல்லும்படிக்கு  அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று. நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்றான்.”

இயேசு அந்த தகப்பனிடம் இந்த நோய் வந்த காலத்தை பற்றி விசாரித்த போது அவனுடைய சிறு வயதிலேயே இந்த வியாதி அவனை ஆட்கொண்டிருப்பதையும், அவனுக்குள் ஒரு ஆவி இருந்து  அவனைக் கொல்வதற்குத்  தீயிலும், தண்ணீரிலும் தள்ள முயற்சிப்பதையும், இயேசு அறிந்தார். அந்தத்  தகப்பன்  இயேசுவிடம்  ‘எங்களுக்காக மனமிரங்கி ஏதாவது செய்யக்கூடுமானால் உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டினான்.  இவன்  வரும்போது  விசுவாசத்தோடுதான்  வந்தான்.  இப்பொழுது  சீஷர்களிடம்  சென்று  தோல்வியடைந்ததால்  அவனுடைய  விசுவாசம்  குறைந்தது.  மட்டுமல்லாமல்  ஆண்டவரின்  நாமம்  அந்த  இடத்தில் தூஷிக்கப்  படுகிறது.  

இயேசுவின் உபதேசம்:

மாற்கு 9 : 23, 24 “ இயேசு அவனை நோக்கி: நீ  விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும் படி உதவி செய்யும் என்று கண்ணீரோடு மிகுந்த சத்தமிட்டுச்  சொன்னான்.”

நீ விசுவாசிக்க கூடுமானால் ஆகும் என்று இயேசு கூறியதிலிருந்து அந்தத்  தகப்பன்  விசுவாசத்தில் குறைந்திருப்பதை அவர்  அறிந்திருந்ததைப்  பார்க்கிறோம்..உடனே அந்த தகப்பன் நான் விசுவாசிக்கிறேன் என்று கூறிவிட்டு, தன்னுடைய அவிசுவாசம் நீங்கும் படி வேண்டினான். லாசரு  இறந்த  இடத்தில்  இயேசு  நம்பிக்கையில்லாத  அவனுடைய  சகோதரிகளான  மார்த்தாளையும்,  மரியாளையும் பார்த்து  “நீ  விசுவாசத்தால்  தேவனுடைய  மகிமையைக்  காண்பாய்”  என்றார்  (யோவான்  11 40).  இதேபோல் நாமும் நமக்குள் அவிசுவாசம் வரக்கூடாது என்று வேண்ட வேண்டும்.  நமக்குள் இருக்கிற அவிசுவாசம் நீங்குவதற்கு தான் இயேசு தண்ணீரைத்  திராட்சைரசமாக்கினார். 5அப்பம், 2மீனைக் கொண்டு 5000 பேரை போஷித்தார். கடலின் மீது நடந்தார். பிசாசின் பிடியிலிருக்கிறவர்களையும், தீராத நோயினால் அவதிப்படுபவர்களையும்  குணமாக்கினார். மரித்தோரை எழுப்பினார். இவ்வாறு வேதத்தில் இயேசு செய்தவைகளைப்  படித்து  நம்புகிற  நாம், நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசு, நமது வாழ்க்கையிலும், ஊழியத்திலும் அற்புதம் செய்வார் என்று விசுவாசிக்க வேண்டும்.

இயேசு செய்த அற்புதம்:

மாற்கு 9 : 25, 26  “அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடி வருகிறதை  இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும்  செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப் போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார். அப்பொழுது அது சத்தமிட்டு  அவனை மிகவும் அலைக்கழித்து புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான்  என்று அநேகர் சொல்லத்தக்கதாகச்  செத்தவன் போல்  கிடந்தான்.”

ஜனங்கள் கூட்டமாய்ப்  பார்ப்பதற்காகக்  கூடினர். இயேசு அசுத்த ஆவியை நோக்கி ஊமையும் செவிடுமான ஆவியே என்றழைத்து, இவனை விட்டுப் போ என்றும், இனி அவனுக்குள் போகக்கூடாது என்றும் கட்டளையிட்டதைப்  பார்க்கிறோம். அப்பொழுது அந்த பிசாசு இயேசுவின் கட்டளைக்குக்  கீழ்படிந்து  மிகுந்த சத்தத்துடன் அவனை அலைக்களித்து அவனை விட்டு  வெளியேறியது. அசுத்தஆவியானது அந்த மகனை விட்டுப் போனவுடன், அந்த மகன் செத்தவன் போலப்  படுத்திருந்தான். ஏதாகிலும்  செய்யக்கூடுமானால்  என்று  கேட்ட  தகப்பனுக்கு  சந்தோஷம்  உண்டாகும்படி  இயேசுவிடமிருந்து வல்லமை புறப்பட்டு  சீஷர்களின்  தோல்வியை  வெற்றியாக  மாற்றியது.  அவனுடைய  மகனுக்கு  விடுதலை  கிடைத்தது.  

இயேசுவின்  உபதேசம்:

மாற்கு 9 : 27, 28 “ இயேசு அவன் கையைப்  பிடித்து, அவனைத்  தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான். வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள்.”

மத்தேயு 17 : 20 “அதற்கு இயேசு: உங்கள்  அவிசுவாசத்தினாலேதான்; கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்  பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம்போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் .”

இயேசு செத்தவன் போல்  படுத்திருந்த அந்த மகனின்  கையைப் பிடித்துத்  தூக்கினார். அவன் எழுந்தான். லூக்கா 9 :42 ல் அவனை அவனுடைய தகப்பனிடத்தில் ஒப்படைத்ததைப்  பார்க்கிறோம். இயேசு  சீஷர்களுக்கு  பிசாசுகளைத்  துரத்தும்  அதிகாரத்தை  கொடுத்திருந்தார்.  அதை  அவர்கள்  பயன்படுத்தி  வெளிப்படுத்தியும்  அவர்களால்  அந்தப்  பிசாசைத்  துரத்த  முடியாமல்  போயிற்று.  அதனால்  அவருடைய சீஷர்கள் எங்களால் ஏன் அதை துரத்த முடியவில்லை என்று தனித்து போய் இயேசுவிடம் கேட்டனர். அதற்கு பதிலாக இயேசு  “உங்கள்  அவிசுவாசத்தினால் தான்” என்று கூறினார்.  கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் மலையைப் பார்த்து அப்புறம் போ என்று கூறினாலும் அது போகும் என்றார். 

லூக்கா  17 : 6  லும் “  அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.”

மத்தேயு 21 : 21 “இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்கு செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” என்றார்.

 அவர்களிடம் விசுவாசம்  இல்லையென்றும்,  விசுவாசம் இல்லாததற்கு  காரணம்  உபவாசித்து  ஜெபிக்காததுதான்  என்றும்  அவர்களுக்குத்  தெளிவு  படுத்தினார். .நம்மால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை என்று முற்றிலும் நம்பவேண்டும். முழுமையான விசுவாசத்தோடு சொல்லும் பொழுது அதற்கு ஆற்றல் உண்டு. ஜெபமும்  விசுவாசமும்  ஒன்றாகவுள்ள  கருக்குள்ள  பட்டயம்போல.  ஜெபத்தைத்  தள்ளிவிட்டால் பரிசுத்தம்  கெட்டு  விடும்.  சீஷர்கள்  தங்கள்  பலத்தைச்  சார்ந்திருந்ததால்  அவர்களால் அந்தப்  பிசாசைத்  துரத்த  முடியாமல்  போயிற்று.  மேலும்  இயேசு  மூன்று  சீஷர்களை  மட்டும்  மலைமேல்  கூட்டிக்கொண்டு  போனதால்  அவர்கள்  மேல் மற்ற  சீஷர்கள்  பொறாமை கொண்டிருப்பார்கள்.  பொறாமை,  எரிச்சல்,  கசப்பு  இவைகள்  ஜெபத்தை,  உபவாசத்தைத்  தடுத்து  விட்டது.  ஆயத்தமில்லையென்றால்  பிசாசு  ஆட்கொண்டு  விடுவான் (எபேசியர் 6 : 11).  மேலும் பிசாசின் பிடியில் இருக்கிறவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும்  ஜெபிக்கும்போது ஆண்டவரே சுகம் தாரும், இந்தப்  பிசாசைத்  துரத்தும் என்று பேசக்கூடாது. இயேசுவின் நாமத்தினால் கட்டளையிட வேண்டும். அப்பொழுது அவைகள் ஓடும். நாம் இயேசுவின் மீது நமக்குள்ள நம்பிக்கையை  ஆழமாக்க வேண்டும். நமது விசுவாசத்தைத்  துவங்குகிறவரும் முடிகிறவரும் கிறிஸ்துவே  என்பதை உணரவேண்டும். அவருடைய நெருங்கிய பிரசன்னம் நம்மோடு இருப்பதும், அவரது வார்த்தைக்கு பூரணமாகக்  கீழ்ப்படிவதும்  தான் விசுவாசத்தின் ரகசியம்.

உபவாசம் பற்றி இயேசு:

மத்தேயு 17 : 21 “ இந்த ஜாதிப்  பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்  போகாது என்றார்.”

இயேசு ஜெபத்தினாலும், உபவாசத்தினாலும் தான் ஜாதிப் பிசாசுகள் போகும் என்று ஏன் கூறினாரென்றால், ஜெபமும் உபவாசமும் இணைந்து செயல்படும் போது தேவ வல்லமை அதிகரிக்கப்படுகிறது. உபவாசத்தின் போது  தேவனுடைய சமூகத்தில் நம்மைத்  தாழ்த்தி விழுந்து கிடக்கிறோம். அதனால் உள்ளான மனுஷனுக்குள்ளே தேவவல்லமையானது இறங்குகிறது. தேவனுடைய கிருபை வரங்களும் செயல்பட ஆரம்பிக்கிறது. நமக்குள்  பரலோக அக்கினியைக்  கொண்டு வருகிறது. அதன் மூலம்தான் நாம் பிசாசை எதிர்த்து நின்று துரத்த முடியும். சில பிசாசுகள் அதட்டினாலே ஓடும். சில பிசாசுகள் இயேசுவின் நாமத்தை சொல்லும் போது ஓடுகிறது. ஆனால் சில பிசாசின் கட்டுகள் ஒழிக்கப்பட வேண்டுமானால் உபவாசமும், ஜெபமும்  மிகவும் அவசியம்.

இயேசு கூட தன்னுடைய ஊழியத்தை ஆரம்பிக்கும்போது உபவாசத்தோடுதான் ஆரம்பித்தார். பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினால் நிரப்பப்பட்டார்.. பரலோக அக்கினியானது இயேசுவை நிரப்பியது. எனவேதான் இயேசு  சாத்தான் கொண்டு வந்த எல்லா சோதனைகளையும் மேற்கொண்டார். சமயத்திற்கேற்ற வார்த்தையானது அவருடைய வாயிலிருந்து வந்து கொண்டிருந்தது. அந்த வார்த்தைகளால் சாத்தானை வீழ்த்தினார். இதைத்தான் சீடர்களுக்கும் உணர்த்தினார். இன்று முதல் நாமும் நம் ஜெபத்தோடு உபவாசத்தையும் கூட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தேவனுடைய வல்லமையையும்,  வரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.  உபவாசிக்காமல்  நாம்  விசுவாசத்தில்  வளர  முடியாது.  உபவாசிக்காமல்  உலகத்தையும்,  பிசாசையும்  மாம்சத்தையும்  ஜெயிக்க  முடியாது.  

ஏனெனில் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் மட்டுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு என்று எபேசியர் 6: 12ல் பார்க்கிறோம். இங்கே ஜாதிப்பிசாசு என்று இயேசு கூறுவதைக் காண்கிறோம். பிசாசுகளுக்குள் கூட இந்த ஜாதி வித்தியாசம் இருக்கிறது என்று அறிகிறோம். கிறிஸ்தவ சபைக்குள் ஜாதி வித்தியாசம் இருப்பது  பிசாசின் கிரியைகளால்  தான். இரத்தத்தால் மீட்கப்பட்ட ஜனங்கள் உபவாசத்தோடு ஜாதி வித்தியாசம் என்கிற இந்தப்  பிசாசை  எதிர்த்து நிற்கவேண்டும். 

இந்தத்  தகப்பன் முதலில்  இயேசுவை விசுவாசிக்க வேண்டியது எத்தனை முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டான். இரண்டாவதாக தனக்குள் இருப்பது எத்தனை குறைவான விசுவாசம் என்பதையும் உணர்ந்து ஒத்துக்கொண்டான். நாமும் இயேசுவோடு நமக்குள்ள விசுவாசத்தை அதிகரித்து அற்புதங்களைப் பெற்றுக் கொள்ள  வேண்டும். ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago